ஞாயிறு, 17 மார்ச், 2024

எட்டாவது அதிசயமும் , எட்டாக் கனியும்

நண்பர் திரு. பி.வி வைத்தியலிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் மாத இறுதியில் தான் எழுதிய “சீறிப் பாயும் என் கவிச்சிந்தனைகள்” என்ற நூலை நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் ரோட்டில் இருக்கும் ரயில்வே கிளப் அரங்கத்தில் வெளியிட்டார்.

பெரும் பதவியில் இருந்த அரசு அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் ரயில்வேத் துறை அமைச்சர் திரு.R வேலு IAS அவர்கள்.

அவரை இல்லத்திலிருந்து விழாவிற்கு அழைத்து வரும் பொறுப்பினை திரு.வைத்தியலிங்கம் ஐயா எனக்கு கொடுத்திருந்தார்.

அதனை மகிழ்வுடன் ஏற்று , ஆழ்வார்பேட்டை கிளம்பினேன்.

ஆயத்தமாக இருந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் காலம் தாழ்த்தாமல் மகிழ்வுந்தில் ஏறிக்கொண்டார்.

எவ்வித பகட்டுமின்றி, என்னிடம் மிகுந்த பரிவுடன் சராசரி மனிதன் போல் உரையாடத் துவங்கினார். 

திரு பி.வி வைத்தியலிங்கம் அவர்களைப் பற்றியும் ரயில்வே துறையைப் பற்றியும் பேசியபடி வந்தோம்.

தத்தம் அமெரிக்க அனுபவங்களையும் பரிமாறிக் கொண்டோம்.

சமீபத்தில் தான் அவர் அமெரிக்காவிலிருந்து பாரதம் திரும்பியிருந்தார். 

கிரீன் கார்டு வைத்திருக்கும் அவர்,  அடிக்கடி தமது மகள் இல்லம் சென்று வருவது வழக்கம். 

அவரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி பேச்சு திரும்பியது.

இக்கால அரசியல்வாதிகளின் நேர்மையற்ற தன்மையைப் பற்றி  இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டே கல்லெறிகிறாரோ என்ற எண்ணம் எனக்கு தோன்றவே செய்தது.

சார்........... என்றபடி இழுத்தேன்.

உண்மை தான் குமார். 2004 ம் ஆண்டு  முதன் முறையாக நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானேன். 

நல்ல பல திட்டங்களை திரு.வைத்தியலிங்கம்  போன்ற திறைமையான அதிகாரிகள் மூலம் வகுத்து, ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை சேமித்துக் கொடுத்தேன் என்று சொன்ன மனிதர் மீது மதிப்பு கூடியது.

நேர்மையான அதிகாரியாக லஞ்சம் வாங்கியும் பழக்கம் இல்லை, அரசியல்வாதியாக வாக்கிற்கு பணம் கொடுத்ததும் பழக்கமில்லை என்ற சொற்கள் செவியில் விழுந்த போது,

நனவு தான் என உறுதிப்படுத்த என்னை நானே கிள்ளிப் பார்க்க வேண்டியதாயிற்று. 

முதன் முறை அதிர்ஷடவசமாக ஜெயித்தாலும், நான் இரண்டாம் முறை வெல்லவில்லை, 

ஆகையால், மூன்றாம் முறை எனக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொன்ன மனிதரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

உண்மை தான். நண்பர் திரு. பி.வி வைத்தியலிங்கம் அவர்கள் பல அமைச்சர்களுடன் நேரடியாக பணி புரிந்திருந்தாலும்,  ஊழல்வாதிகளுடன் நட்பு பாராட்டுவதை என்றும் விரும்பியதில்லை.


 மேடையில் திரு. வைத்தியலிங்கம் அவர்கள்

நண்பர் உமாகாந்தனுடன்


ஓய்வு பெற்ற பின்னரும், இன்று வரை திரு. பி.வி வைத்தியலிங்கம் அவர்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பது இவர் அவர்கள் மீது தான்.

இப்படிப்பட்ட அரிதான அரசியல்வாதிகள் பொக்கிஷங்கள் மட்டுமல்ல, உலகின் எட்டாவது அதிசயம் தான்.

நம் நாட்டிற்கோ எட்டாத அதிசயம் தான்.

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

ஏன் என்ற கேள்வி

கருப்பும் ,வெள்ளையும் கூட நிறங்களுக்கும் அடக்கும் தானே, அப்புறம் கருப்பு-வெள்ளை படங்கள் / வண்ணப் படங்கள் என்று பிரிப்பதேன் ......

அறிவியல் அறியாமையா

தனது ஜாதியில் மட்டும் வரன் தேடும் ஓர் அரசு ஊழியர் , லஞ்சம் வாங்கும் போது ஜாதியை மறப்பதேன் ......

பணமே பிரதானமா

கண்கண்ட தெய்வமாகிய பெற்றோரை கண்டு கொள்ளாத மகன், ரசிகனாய் நடிகனின் “Cut Out”க்கு பால் ஊற்றுவதேன் ......

திரைப்படம் மோகம் தான் காரணமா

நாள்பட்ட நோய்களுக்கு நமது பாரம்பரிய மருத்துவமே சிறந்தது என்று அறிந்தும் ,ஆங்கில மருத்துவத்தை நாடுவதேன் ......

நமக்கு தெளிவு பிறக்க வேண்டுமா


என்ன தான் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் , ஒரு மனிதன் “H” என்று மட்டுமே தும்முவதேன் ......

மற்ற எழுத்துக்களை மறந்து போவதாலா

செத்தால் தானே பிணம், பின்னர் செத்த பிணம் என்று சொல்வதேன் ......

தமிழ் தகராறா

கணிதம் என்பது எண்களைப் பற்றியது தானே, எண்கணிதம் என்று சொல்வதேன் ......

கணிதத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதாலா

எப்போதோ ஒரு முறை மட்டும் தொகுதிக்கு வரும் அரசியல்வாதிக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பதேன் ......

தனது வாக்கை விற்பதாலா

மரங்களை சாய்த்து நெடுஞ்சாலைகளை அமைப்பதேன் ......

விரைவாக சென்று விட வேண்டும் என்பதாலா 

ஆங்கிலத்திலும் தமிழும் ஒரே பொருள் தானே, அப்புறம் கிரிக்கெட்டில் “Catch”  பிடி என்று சொல்வதேன் ......

மொழிப் பிரச்சினையா

விபரீதம் ஏற்படும் போது ஐயோ என்று தானே கத்துகிறோம், அப்புறம் “குய்யோ முய்யோ” என்று கதாசிரியர்கள் வர்ணிப்பதேன் ......

கற்பனை சுதந்திரமா

வாழ்வே மாயம் என்று தெரிந்தும், மெய் என மேனியை சொல்வதேன் ......

கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லத் தானா

அரசு பள்ளிகளில் குழந்தையை சேர்க்க மறுக்கும் மனிதன், அரசு கல்லூரிகளை கண்டு தயங்குவது இல்லையே ஏன் ......

இங்கு மட்டும் தரம் கூடி விடுவதாலா

ஏன் என்று கேள்விகள் மேலும் தோன்றவில்லையே ஏன் ......

..............................

திங்கள், 15 ஜனவரி, 2024

புதுப் புது அர்த்தங்கள்

தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் - புதுப் புது அர்த்தங்கள்.

அதில் ஒரு பாடல் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 



இனிமையான இப்பாடலை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம், வரிகளை ஒலி வடிவில் கேட்ட படியே கடந்தும் சென்றிருப்போம்.

சரணத்தில்,

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி ,

நெஞ்சம் எனும் வீணை பாடுமே கோடி

என்று வரும் வரிகளை இப்படித் தான் உள்வாங்கி இருந்தேன்.

பல அற்புத பாடல்களைத் தந்த வாலி, கோடி என்றே இரண்டு வரிகளையும் முடித்திருப்பாரா அல்லது ஏதேனும் ஒரு வரி தோடி என்று முடிந்திருக்குமா என்ற வினாவிற்கு விடை தேட விழைந்தேன்.

விளைவு ........ இணைய தளத்தின் உதவியை நாடினேன்.

அவற்றில் ஒரு சில வலைத்தளங்கள், மேற்குறிப்பிட்டவற்றையே பாடல் வரிகளென கட்டியம் கூறின.

இருப்பினும் நிறைவு ஏற்படவில்லை.

பாடலை ஒலி வடிவில் ஓட விட்டு குறிப்பிட்ட இடம் வரும் போது, பலமுறை நிறுத்திக் கேட்டேன்.

செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி என்றே SPB அவர்கள் பாடியிருக்கிறார் என்பது உறுதியானது.



அது என்ன செஞ்சம் .................

யோசித்தேன் கொஞ்சம் .......

மீண்டும் இணைய தளத்தில் புகுந்தேன் தஞ்சம் ......

வீணைகளில் சரஸ்வதி வீணை, ருத்ர வீணை, சாகர வீணை மற்றும் விசித்திர வீணை என்று பல வகைகள் உண்டு.


அவற்றுள் ஒன்று தான் செஞ்சம் எனும் ஒரு வகை.

இது  சோக கீதங்களை எழுப்புவதற்கென்றே செய்யப்பட்ட இசைக் கருவி.

சோகமான தோடி ராகத்தை கூட நாம் இவ்வீணையில் வாசித்தால், அது மகிழ்ச்சியான ஒலியையே எழுப்பும்.

செஞ்சம் என்று சோகமே உருவான கணவனுக்கு அருகில், தோடி என்ற மனைவி இருந்தால் அது மகிழ்ச்சியையே வெளிப்படுத்தும் என சொல்லும் கவிஞரின் உவமையை , கற்பனையின் உச்சம் என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அதே நேரம், எனக்கோர் ஐயம்.

(கதையின் படி) தனக்கே உடையவன் என்று கருதும் மனைவிநிறைய தொல்லைகள் அளித்தாலும் நாயகன் தான் ஒரு நல்ல பாடகன் என்று நிருபிப்பேன் என்று சொல்ல வருகிறாரா.......

வியாழன், 28 டிசம்பர், 2023

சங்கு சுட்டாலும்

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் நடைமேம்பாலம் வழியாக தொடர்வண்டி நிலையம் சென்று கொண்டிருந்தேன்.

பழ வியாபாரிகள், குறிப்பாக வாழைப்பழம் விற்போர் நடை மேம்பாலத்தின் முகப்பில் நின்றபடி மிக கண்ணியமாக விற்பர்.

அன்றைய வியாபாரம் முடிந்து, மீதம் இருக்கும் பழத்தை கிடைக்கும் விலைக்கு விற்பதற்கு ஆயத்தமாகவே வருவார்கள்.

சுமார் 18-20 பூவன் பழங்கள் வெறும் 10-15 ரூபாய்க்கே கிடைக்கும்.

இருப்பினும் இரவு நேரத்தில் அங்கு வாங்குவோர் மிகவும் குறைவே என்பதை ஏக்கம் தோய்ந்த வியாபாரிகள் முகமே சொல்லும்.

அன்று 10 ரூபாய்க்கான பழங்களை வாங்கிய படியே, 20 ரூபாயை அவரிடம் நீட்டினேன்.

அதன் நோக்கம் சில்லறை இல்லை என்பது மட்டுமல்ல,அவ்வளவு பழங்களை கொடுக்கும் அவருக்கு என்னாலான பலன்களை கொடுக்கலாம் என்ற எண்ணத்திலும் தான்.

"சில்லறை இல்லாட்டி பரவாயில்லை, விடுங்க" என்றேன்.

அவரோ புன்னகைத்தபடி, "சில்லறை இல்லாட்டி என்ன சார் பழம் தான் நிறைய இருக்கே பிடிங்க" என்றபடி மேலும் ஒரு சீப்பு வாழைப்பழத்தை நீட்டவில்லை, மாறாக கையில் திணித்தார்.

ஏழை வியாபாரிக்கு உதவ நினைத்த நான்,அந்த நிலையிலும் அவரது நேர்மையையும், தன்மானத்தை மதித்து பழங்களை பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினேன்.

பின்னர் தான் என் மனதில் உறைத்தது, இவர் போன்றோருடன் புகைப்படம் எடுக்கத் தவறியது.

நியாயமாக நடந்து கொள்ளும் வியாபாரிகளைப் பற்றிய மதிப்பு உயர்ந்த அதே நேரம், என்னுள் ஊழல்வாதிகளைப் பற்றி எண்ணம் எழாமல் இல்லை.

            "அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்

            நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

            கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு

            சுட்டாலும் வெண்மை தரும்"


 

-       நன்றி அவ்வைப் பாட்டியார்