ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

புண்ணியம்(செய்த)மூர்த்தி

சில மாதங்களுக்கு முன்பு பற்களிலும்,ஈறுகளிலும் சிக்கல் ஏற்பட்டது. ஒரு சில பற்கள் உண்ணுகையில் ஆடுவதை போலவும் ஈறுகள் பலவீனமாக இருப்பதை போலவும் உணர்ந்தேன்.

உண்ணுவதும் சிரமாகவே இருந்தது.

வேறு வழியின்றி பல் மருத்துவரிடம் சென்றேன்.

ஈறுகள் உறுதியற்று காணப்படுவதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு சில காரணங்களை ஆங்கில மருத்துவர் அடுக்கினார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே பெங்களூரில் ஈறுகளை கிழித்து எனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மனதில் நிழலாடியது.

அதில் விருப்பம் இல்லாததால் மாற்று வழியை யோசித்து தஞ்சையில் எங்கள் வீட்டிற்கு அடுத்ததாய் குடியிருக்கும் சித்த மருத்துவரை அணுகினேன்.

மருத்துவரைப் பற்றி சிறு குறிப்பு.

பெயர் திரு.புண்ணியமூர்த்தி. வயது 57.

                 திரு.புண்ணியமுர்த்தி எனது தந்தையாருடன்

80 களின் மத்தியில் ராஜபாளையத்தில் சச்சிதானந்த சுவாமி ஆசிரமத்தில் சித்த மருத்துவம் பயின்றார்.

பின்னர் 90களின் துவக்கத்தில் “இயற்கை மருத்துவ சங்கம் என்று சக மருத்துவர்களுடன் தொடங்கியவர்சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகிறார்.

புரிந்த சாதனைகள் : திருச்சி அருகே கல்கொண்டார் கோட்டை என்ற ஊரில் போலியோவால் அவதி பட்டு வந்த பெண்ணை முழுமையாக குணப்படுத்தியது 

சென்னை அருகே இருக்கும் ஒரு சிற்றூரில், ஓர் இஸ்லாமியரின் நாட்பட்ட தீர்த்து வைத்தது வைத்தது என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

நன்றி மறவாத அந்த இஸ்லாமியர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன், புண்ணியமுர்த்தி அவர்களின் மகனுக்கு நெல்லை அருகே இருக்கும் சித்த மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க உதவியதை இன்றும் மருத்துவர் மகிழ்வோடு நினைவு கூறுகிறார்.

பழந்தமிழ் நூல்களாகிய திருக்குறள்,சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் கரைகண்டவர்.

இவரை அணுகும் நோயாளிகளிடம் மருத்துவர் திருக்குறள் ஒன்றை பொருத்தமாக சொன்னபடியே சிகிச்சை அளிப்பது வாடிக்கை.

டெல்லி ,மும்பை , பஞ்சாப் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் இவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் என்பது கூடுதல் தகவல்.

மேலும் 2014ல் பொதிகை மூலிகை மருத்துவ நலச்சங்கம் என்ற சங்கத்தை நிறுவி ஒவ்வொரு மாதமும் மருத்துவக் கூட்டங்களை நடத்தி வருகிறார் தஞ்சையில்.

மூலிகை அறிவோம், உணவே மருந்து ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவது இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

தீராத தமது மகளின் நோயை தீர்த்து வைத்தமைக்காக ,ஓர் அரசு அதிகாரி இந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடத்திட மாதந்தோறும் இடம் அளித்து வருவது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இதுவரை சுமார் 86 கூட்டங்களை திரு.புண்ணியமுர்த்தி அவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

நடப்பிற்கு வருவோம்.

அவரை சந்தித்த போதே தாடை வீக்கமும் வலியும் இருந்தது.

அவரின் அறிவுரை படி நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளித்து அவர் தயாரித்திருந்த பற்பொடியால் பல் விளக்கினேன்.

சிறிது நேரத்திலேயே வலியும் குறைந்து, நல்ல முன்னேற்றம் தெரிய தொடங்கியது.

பின்னர் நாடி பிடித்துப் பார்த்தார். மூலிகை பற்பொடி தயாரித்து தருவதாகவும் சொன்னார்.

அவர் என்னை வாங்கி வரச் சொன்ன மருந்துகள் நான் இதுவரை கேள்விப்பட்டிராத சீனி காரம், ருசு, இலுப்பை அரப்பு, தான்றிக்காய் போன்றவை.

மண்ணுக்கேத்த பொண்ணு திரைபடத்தில் கவுண்டமணி, கருங்கல் வேர் 2 படி, கருவாட்டு ரத்தம் ,கொசுவின் சிறுநீர் ஆகியவற்றை கொண்டு வா என்று நோயாளியிடம் சொல்லும் வசனமே நினைவுக்கு வந்தது.

இருப்பினும் மருத்துவர் மீது கொண்ட பெருமதிப்பின் காரணமாய், மருந்துகளை வாங்கிக் கொடுத்தேன்.

அவற்றை அரைத்து வெயிலில் காய வைத்து சம அளவில் கலந்து எனக்கு அனுப்பி வைத்தார் இரண்டு வாரங்களில்.

இந்த பல் சிக்கல் 2 – 3 மாதங்களில் நிச்சயம் தீரும் என்று அப்போதே உறுதியாய் கூறினார்.

இடையே நண்பர் திரு. ரவீந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி.தேவகி பிஞ்சு வாழைக்காயுடன் துருவிய தேங்காயை சேர்த்து உண்ணுமாறு மருத்துவ குறிப்பு கொடுத்தார்.

அவ்வாறே செய்தேன்.

அதுவோ ஈறுகளுக்கு சொல்லொண்ணா பலத்தை கொடுத்தது.

மேலும், இனிப்பு பண்டங்களை உண்பதை குறைத்துக் கொண்டேன்.

இன்று பற்கள் கெட்டி பட்டதுமின்றி ஈறுகள் திடமாயிருப்பதையும் உணர்கிறேன்.

ஆயினும் ஒரு செய்தி .....

மருத்துவர் தயாரித்து கொடுத்த பற்பொடி நல்ல மாற்றத்தை கொடுத்தாலும் ,கருமை நிறம் கொண்ட மூலிகை பற்பொடியை கொண்டு விளக்கியதால் எனது பற்கள் கருமையாக உள்ளன.

பல் மருத்துவரிடம் சென்று, நவீன உபகரணங்களின் உதவியால் பற்களை சுத்தம் செய்தாக வேண்டும் விரைவில்.

அப்புறம் முக்கியமான விஷயத்தை சொல்லவே இல்லையே.

திரு.புண்ணியமுர்த்தி அவர்கள் எனக்கு அளித்த சிகிச்சைக்கு பணம் பெற்றுக் கொள்ள அறவே மறுத்து விட்டார்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

இப்பதிவின் மூலமாக அவருக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவிப்பதை வேறு என் செய்ய இயலும்.