சனி, 18 ஜூலை, 2020

மானிடராய் பிறத்தல் அரிது , அதிலும் .......

ஸ்ரீகாந்த் –ஊக்கத்திற்கு மறு பெயர் என்றே இவரை நாம் கருதலாம்.

1991 ம் ஆண்டு மச்சிலிபட்டினம், ஆந்திராவில் பிறந்தவர்.

பள்ளி படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு அங்கு கிடைத்த வரவேற்பு மாறுபட்டது.

கடைசி இருக்கையில் அமர்த்தப்பட்டார்.

சக மாணவர்களுடன் விளையாட்டு நேரங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

கரோனா காலத்திற்கு முன்பே இவர் தனிமை படுத்தப்பட்டார்.

இருப்பினும் தடைகளை தகர்த்தெறிந்து 10 ம் வகுப்பில் 90% பெற்றார்.

11ம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்காக விண்ணப்பித்திருந்த இவருக்கு இளங்கலை பாடத்தை மட்டுமே தேர்வு செய்ய இயலும் என்ற செய்தி இடியாய் இறங்கியது.

நீதிமன்ற உதவியை நாடினார்.

6 மாதங்களுக்கு பின் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

ஆயினும் ஒரு சில நடை முறை சிக்கல்களை கருத்திற் கொண்டு, படிப்பின் முழு பொறுப்பும் மாணவரை சார்ந்தது என்ற நிபந்தனையும் இடப்பட்டது.

ஏற்றார். 12 ம் வகுப்பில் இவர் பெற்றது 98%.

நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த இவருக்கு கல்லூரிகள் தந்த செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை ....

10ம் வகுப்பில் பெற்றிருந்த பட்டறிவே காரணம்.

தகுதியுள்ள மாணவர் உதாசீனப்படுத்தப் பட்டார்.

கல்லூரிகள் இவரை நுழைவு தேர்வை கூட எழுத அனுமதிக்கவில்லை.

மதியாதார் வாசலை மிதியாதே என்ற எண்ணத்தில் இவர் நம் நாட்டில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நேரடியாக அமெரிக்காவில் விண்ணப்பித்தார்.

MIT (Massachusetts Institute of Technology) , Stanford , Berkeley மற்றும் Carnegie Mellon ஆகியவற்றில் இடம் கிடைத்தது.

உலகப் புகழ் பெற்ற MIT யில் பட்டம் பெற்றார்.

அமெரிக்க டாலரை விரும்பாமல் நம் மக்கள் மீது பாசம் கொண்டு பாரதம் திரும்பினார் ,

தம்மை போல இன்னலுறும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உறுதி கொண்டார்.

2012 பொல்லன்ட் என்ற நிறுவனம் துவங்கப் பட்டது.

சுற்று சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் பொருட்களான மண் குடுவைகள் , கோப்பைகள் போன்ற பொருட்களை தயாரிக்கிறது இந்நிறுவனம்.

தென்னிந்தியா முழுவதும் 5 உற்பத்தி அலகுகளை கொண்டிருக்கும் பொல்லன்டில் சுமார் 600 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள்.

ஆண்டு வருமானம் 50 கோடி.

போதாதென்று 3000 மாணவர்களின் கல்விக்கு உதவுகிறார்.

அது சரி , இது போன்று பலர் நம் நாட்டில் உதவுகிறார்களே , படிப்பில் மிளிர்கிரார்களே ,

இவரிடம் என்ன அதிசயம் ..., இவர் எவ்வாறு வேறுபடுகிறார் என்ற கேள்வி நம்மில் நிச்சயம் எழும்.

ஆம் நண்பர்களே. இவர் வேறுபடத்தான் செய்கிறார்.

பெயரில் காந்தம் கொண்ட இவருக்கு இறைவன் கண்களில் காந்தத்தை அளிக்கவில்லை.


MITயின் முதல் (பார்வையற்ற) மாற்று திறனாளி என்று பெருமையை தாங்கி நிற்பவர்.



ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – Blessing in disguiseஎன்று.

"கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்" என்பது பொருள்.

பார்வையற்ற மனிதராய் பிறந்த நேரமோ என்னவோ , இன்று உலகமே வியந்து பார்க்கும் மா மனிதராய் இவர் உயர்ந்து நிற்கிறார்.


" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "



சனி, 4 ஜூலை, 2020

தமிழ் வேந்தர்களின் சாட்சி


சுமார் 17 அகவையே நிரம்பிய ஒரு மாணவருக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் கவி ஒருவரும் , புகழ் பெற்றபெரும் தமிழ் அறிஞரும் நீதி மன்ற படியேறி சாட்சி சொன்னார்கள் என்றால் அது சாதாரண செய்தியா என்ன.

1958 – சுதந்திரத்தின் மறு பெயர் கொண்ட அன்றைய நாளிதழின் ஜனவரி மாத பதிப்பில் ஒரு மாணவர் இளந்தமிழா புறப்படு போருக்குஎன்ற பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

பாரதத்தின் வேறு பகுதியிலிருந்து தமிழகம் குடி பெயர்ந்தவர்கள், அன்று நடத்தி வந்த அங்காடிகளையும் இன்ன பிற வணிகங்களையும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க ஓர் இயக்கத்தின் தலைவர் விடுத்திருந்த அழைப்பை வலியுறுத்தி அக்கட்டுரை வரையப் பட்டிருந்தது.

“கூலியாட்களாக நாம் நம்முடைய தாயகத்திலே அல்லல் படுகின்றோம் , ஆனால் பிழைப்பை நாடி வந்த கூட்டமோ இன்றைக்கு கும்மாளம் அடித்து கொண்டிருகிறது” என்று துவங்கியிருந்தார்.

இந்த பனியா ஆதிக்கத்தை ஒழிக்க தமிழர் திரண்டு வர வேண்டாமா 
– கூடவே ஓர் அரை கூவலும் கட்டுரையில் சேர்க்கப் பட்டிருந்தது.

பாரதிதாசன் பாடலும் , மு.வ அவர்களின் கருத்தும் மேற்கோளாய் அமைய பெற்றிருந்தன.

செய்தி அரசின் பார்வைக்கு செல்லாமல் இருக்குமா.

சென்றது.

குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினருக்கு எதிரானது என்று முடிவு செய்த காவல் துறை நாளிதழின் ஆசிரியர் மூலம் இக்கட்டுரை எழுதிய இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

உடன் அதன் ஆசிரியரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இந்திய தண்டனை சட்டம் 153அ பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 1958ல் வழக்கு விசாரணைக்கு வந்தது சென்னையில்.

முதலில் சாட்சி சொன்னவர் புகழ் பெற்ற பெருங்கவி.

"இம்மாதிரி பாடல்கள் விரோத மனப்பான்மையுடன் எழுதப்படவில்லை என்றும் அமைதியை வளர்ப்பதே நோக்கம்"
என்றும் அவர் அந்த மாணவருக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் தமது கருத்தை கூறினார்.

அடுத்து சாட்சிக்கு அழைக்கப் பட்டவர் கல்லுரி பேராசிரியராக பணி புரிந்து வந்த தமிழறிஞர்.

"கட்டுரையில் எந்த ஓர் எதிர்மறை கருத்தும் வெளிப்படவில்லை
மேலும் நாம் இன்றுள்ள நிலையினையே இது பிரதிபலிக்கிறது"
என தமது கருத்தின் மூலம் அவரும் ஆதரவு தெரிவித்தார்.

ஆனால் இந்த சாட்சிகள் நீதி மன்றத்தில் எடுபடவில்லை.

ஆசிரியரும் ,கட்டுரை எழுதிய மாணவரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு நீதிமன்றம் இருவருக்கும் தலா 100  ரூபாய் அபராதம் விதித்தது.

இதனை கட்ட தவறினால் ஒரு மாத சிறை தண்டனை என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

நாளிதழின் ஆசிரியர் தாம் சார்ந்த கட்சியின் கொள்கைபடி அபராதம் கட்டாமல் சிறைவாசம் சென்றார்.

மாணவரோ அபராதம் கட்டினார்.

இவர் முனைவர் பட்டத்திற்காக பிறன் மலை கள்ளர்என்ற தலைப்பில் ஆய்வு செய்ததை அடிப்படையாக கொண்டே இயக்குனர்களில் இமயம் என்று போற்ற படுபவர்,
அண்ணன் தங்கை பாசத்தை பெரிதும் வெளிப்படுத்தும் படம் ஒன்றை எடுத்தார் 1993 ல்.

மறவாமல் இவருக்கு திரையில் நன்றி கூறியிருந்தார் இயக்குனர் என்பது பெட்டிச் செய்தி.

இரு பெரும் தமிழறிஞர்கள் நீதிமன்ற படியேறி தமக்கு ஆதரவாக சாட்சி சொன்னதை பற்றி அந்த மாணவர் என்றும் பெருமிதம் கொண்டிருந்ததில்லை.

தன்னடக்கமே காரணம்.

ஆயினும் இவர் என்தந்தையின் மிக நெருங்கிய நண்பர் என்பதில் எனக்கு மிகவும் பெருமையே.

மாணவர் பெயர், தமிழகத்தின் பல கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி சமீபத்தில் மறைந்த திரு.சி என் நடராஜன் அவர்கள்.



சாட்சி சொன்ன 

ஒருவர் - பாவேந்தர் திரு. பாரதிதாசன் அவர்கள் 



மற்றொருவர் - தமிழறிஞர் திரு. மூ. வ அவர்கள்


இப்படி தமிழுக்காக போராடிய பெரிய மனிதர்களை மறந்து ,

தனியார் பள்ளியில் தமிழ் பேசினால் அபராதம் கட்டியும் ,

பொது  இடங்களில் தமிழ் பேசினால் அவமானம் என்றும் வாழ்கின்றோம்.

மெல்ல தமிழ் இனி என்ன ஆகும்.

தெரிந்தவர்கள் விடை பகருங்களேன் ...................................