என்னை விட வயதில் சுமார் 14 வருடங்கள் மூத்தவராக இருந்தாலும், எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
கூடல் நகர் வளர்த்தது, தமிழ்ச் சங்கத்தை மட்டுமல்ல, இவரையும் சேர்த்துத் தான் என்பதாலோ என்னவோ, தமிழ் மீது அளவில்லாப் பற்று கொண்டவர்.
பட்டப் படிப்பு முதுகலை வேளாண்மை, கோவை தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்.
அப்பல்கலைக்கழகத்தில் ஓராண்டு உதவிப் பேராசிரியராக பணி புரிந்த பின்னர்,
குடியுரிமைப் பணிகள் வாரியம் நடத்தும் தேர்வில் (UPSC -Civil Services Examination) 134 தர வரிசை பெற்றார்.
அதற்கு முக்கிய காரணமாக இருந்த நண்பர் திரு.V.K. சுப்புராஜ் I.A.S அவர்களை, என்றும் நன்றியோடு நினைவு கூறுகிறார்.
1981 ம் ஆண்டு 134 வது தரவரிசை என்பது,அகில இந்திய அளவில், I.P.Sக்கான முதல் இடம் எனினும் கூட, மருத்துவப் பரிசோதனையில் உயரக் குறைவு காரணமாக I.P.S கிட்டாமல், I.R.S (Indian Railway Service) பணியை தேர்ந்தெடுத்தார்.
36 ஆண்டுகள் இந்திய ரயில்வேயில் பணி புரிந்த நம் நண்பர் வகித்த பதவிகள் மட்டுமல்ல, சாதனைகளும் அதிகம்.
IRFC
(Indian Railway Finance Corporation) நிர்வாக இயக்குனர், இந்திய ரயில்வேயின் நிதித் துறை ஆலோசகர் (Adviser Finance, Railway Board) போன்ற பல உயர் பதவிகளில் பரிமளித்தவர்.
1994-98 ஆண்டுகளில், அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே எழும்பூர் - திருச்சிராப்பள்ளி இடையே அகல ரயில்பாதையை அமைத்தது,
தானே உருவாகிய "தானே" புயல் கடலூரை தாக்கிய சமயத்தில், திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளராக இருந்து, ரயில் போக்குவரத்தை ஒரே நாளில் சீரமைத்து,
தமது மேலதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது ,
பல்வேறு சவால்களுக்கிடையே ஜம்மு - ஸ்ரீநகர் ரயில் பாதை என்னும் சாதனையில் ஜமாய்த்தது என்று இவரது சாதனை பட்டியல் தொடர் வண்டி போல் நீண்டு கொண்டே செல்கிறது.
தலைநகர் டெல்லியில் பணி நீட்டிப்பை ஏற்கச் சொல்லி மத்திய அமைச்சரே அன்புக் கட்டளையிட்ட போதும், பெற்ற அன்னையாருடனும், அன்னைத் தமிழுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே சென்னை திரும்பியவர்.
பள்ளிகளில் ஆசிரியர் குறைபாடு என்றால்,
தமது செலவிலேயே அதனை சரிகட்டும் பணியை செய்வார்.
சிற்றூர்களில் யோகாசன வகுப்பு நடத்த வேண்டுமா, பொருட்செலவு என்னுடையது என்று(ம்) முன்வருவார்.
சென்னையை ஒட்டிய சேரிப் பகுதிகளில் அடிப்படை கணிப்பொறியும் /ஆங்கிலமும் சொல்லித் தர வேண்டுமா,
இன்றளவும் வார இறுதிகளில் சென்று விடுகிறார், தன் மனைவியுடன்.
இவற்றுகெல்லாம் தன் பெற்றோர்கள் காட்டிய வழியும், சுவாமி விவேகானந்தர் மற்றும் சத்திய சாய்பாபாவின் போதனைகளும் தான் முக்கிய காரணம் என மறவாமல் குறிப்பிடுவார்.
பல ஆண்டுகளாக யோகாசனம் செய்பவர் மட்டுமல்ல, எனக்கும் கற்பித்து எனது ஆரோக்கியத்தை மெருகேற்றிய ஆசானும் கூட.
கவிதைகள் மூலமும் பிறருக்கு நல்ல தகவல்களை கொண்டு சேர்க்க முடியும் என்ற நோக்கில் நிறைய எழுதுகிறார்.
இவரின் பல கவிதைகள் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதே அதற்கு சான்று.
சமீபத்தில் “சீறிப் பாயும் என் கவிச் சிந்தனைகள்” என்ற பெயரில் தாம் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டார்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த நண்பர்கள் கூட்டம், இவர் மீதான நட்பை சொல்லியது என்றால் , கூட்டத்தினரின் ஏகோபித்த பாராட்டு நண்பரின் கவித்திறனை சொல்லியது.
நண்பர்களின் கருத்து
விழா மேடையில் நண்பரின் பேச்சு
இந்த அகவையிலும் வரிப்பந்தாட்ட (டென்னிஸ்)களத்தில் எதிராளிக்கு சவால் விடும் சூரர்.
“Love
All , Server All” என்னும் சாய்பாபாவின் போதனையை , ஆட்டக்களத்தில் தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு மட்டுமல்ல, வாழ்க்கையிலும் கடைபிடித்து வரும் இவர் தான்
திரு.P.V. வைத்தியலிங்கம் I.R.S அவர்கள்.