சிறுவயது முதல்
பஞ்சதந்திரம், பரமார்த்த குரு கதைகள் என
சிறுவர் புதினங்களை படித்து வளர்ந்திருந்தாலும்
, காலப் போக்கில் நானும் உங்களை போல் எழுத்தாளர்களை
மாற்ற துவங்கினேன்.
எனது முதல் புதினம் , என் பள்ளி நண்பனும் கமலின் தீவிர வெறியனுமான சரவணகுமார் பரிந்துரைத்த சாண்டில்யன் அவர்களின் “மஞ்சள் ஆறு” .
நண்பன் சரவணகுமார்
அதன் பின் யவன ராணி ,
கடல் புறா என அவரை தீவிரமாக பின்பற்றி வருகிறேன்.
இடையே பிகேபி , சுஜாதா மற்றும்
தேவன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் என்னை(யும்) தங்கள் எழுத்துக்களில் இளமை மாறாமல்
என்றுமே ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பல புகழ் பெற்ற பல
எழுத்தாளர்கள் நம்மை கவர்ந்தாலும் எழுத்துலகில் அவ்வளவாக பெயர் பெற்றிராத ஆயினும்
என் நினைவில் என்றும் பதிந்திருக்கும் இரு நூல்களை பரிந்துரைக்க விரும்புகிறேன்.
தனிக்குடித்தனம் , ஊர் வம்பு போன்ற நாடங்கள் மூலமாக நமக்கு
அறிமுகமான எழுத்தாளர் மெரினா அவர்கள் தம் சிறு வயது குறும்புகள் பற்றி எழுதியிருக்கும்
, இல்லை இல்லை எழுத்திலேயே வாழ்ந்திருக்கும் நூல் தான் " சின்ன வயதினிலே ".
பட்டம் விடுதல் , பளிங்கி மேலும் பம்பரம் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தவராக இவர் தாம் செய்த லூட்டிகளை வருணிக்கும் விதம் , அக்காலத்திற்கு இட்டுச் செல்லுவது மட்டுமல்ல நமக்கு ஏக்கத்தையும் வரவழைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தந்தையின் பராக்கிரமங்களை விவரித்து ஈர்த்த இவர், அவரின் மரணத்தை பற்றியும் எழுதி வாசிப்போரை கண்ணீர் சிந்தவும் வைக்கிறார்.
எப்படி "பொன்னியின்
செல்வன்" புதினத்தை என்ன தான் முயற்சி செய்து எடுத்தாலும் நம் கற்பனைக்கு ஈடாய் , அந்த
செல்லுலாய்டினால் எதுவும் தர இயலாதோ அப்படி தான் , எத்தனை “Autograph”
கள் வந்தாலும் இந்த
நூலிற்கு ஈடாகாது என்பது என் ஆணித்தரமான கருத்து.
அப்புறம் , வாங்க சினிமா
பத்தி பேசலாம்.
நான் இல்லை , பாக்யராஜ் தாங்க அப்படி அழைக்கிறார்.
(இந்த நூலை 90களில் எனக்கு அறிமுகம் செய்து வைத்த பள்ளி நண்பன் பாலுவிற்கு நன்றி)
திரைக்கதை மேதை என்று
மட்டுமே அறிந்திருந்த எனக்கு பாக்யா வார இதழின் கேள்வி பதில் பகுதி இவர்
எழுத்தாளர் என்பதையும் காட்டியது.
ஆனால் இந்நூல் இவரது திறமையை நன்கு வெளிக்கொணர தான் செய்கிறது.
ஆசிரியர் அழகாக அலசியிருப்பது ஒன்றோ இரண்டோ அல்ல, கிட்ட தட்ட தமது அனைத்து படங்களின் கதை, மற்றும் அதன் திரைக்கதை உருவான விதம் பற்றியும் தான்.
எத்தனையோ வெற்றி படங்களை
கொடுத்தாலும் தாவணி கனவுகள், சின்ன வீடு , ஆராரோ ஆரிரரோ என ஒரு சில படங்கள் எப்படி
தோல்வியை தழுவின என்று இவர் ஆராயும் விதம் நிச்சயம் வருங்கால இயக்குனர்களுக்கு ஒரு
பாடமே.
எல்லாம் சரி , இவரது தூறல் நின்னு போச்சு , அந்த 7 நாட்கள் , மௌன கீதங்கள் போன்ற படங்களில்
யாருங்க எதிர்மறை நாயகன்.
அது வேறு யாரும் இல்லை , சூழ்நிலையே
தான் என்று இவர் அலசும் விதம் ரசிக்கத் தக்கதே .
வாய்ப்பு கிடைத்தால் போங்க, நூல்களை அலசி பாருங்க.