சனி, 21 டிசம்பர், 2019

எங்கேயோ கேட்ட குரல்


Are you from India by any chance …?
இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கும் நிகழ்ச்சி நடந்தேறியது 2001ம் ஆண்டு ஜூன் மாதம்.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் மாலை நேரத்தில் பேருந்திலிருந்து இறங்கி இல்லம் திரும்பிக் கொண்டிருந்தேன்.
கேள்வி கேட்ட அமெரிக்கனை நிமிர்ந்து பார்த்தேன் .
கோடை ஆதாலால் அரைகால் சராயும் , பனியனும் அணிந்திருந்தான் .
போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனை யாரும் சட்டை செய்ததாய் தெரியவில்லை.
மீண்டும் அதே வினாவை தொடுத்தான் என் மீது.
பொதுவாய் அமெரிக்கர்கள் நம் மீது மரியாதை கொண்டவர்கள் தான்.
மேலும் பொது இடங்களில் கண்ணியமாய் பழகுபவர்கள் தான்.
ஆனால் இவன் பார்வை என் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது.
இதற்கு முன்பு இவனை பார்த்த ஞாபகம் இல்லை . 
ஊரும் தெரியாது பெயரும் தெரியாது.
பின் ஏன் இப்படி  என்னை முறைக்கிறான் , என்னுள் கேள்வி எழாமல் இல்லை.
விடை சொல்லவில்லை என்றால் அவன் எதிர்வினை என்னவாயிருக்குமோ என்ற அச்சத்தில் தயங்கியபடியே ஆம் என்றேன்.
இன்னும் நெருங்கி வந்தான்.
உங்கள் ஊரில் சாதி எனும் கொடுமையால் மனிதர்களை பிரிக்கிறீர்களாமே.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் என்று பிரிவுகள் இருப்பதாய் கேள்விப்பட்டேனே.
அதற்கு அரசு சான்றிதழ் உண்டாமே.
நீ எந்த பிரிவை சேர்ந்தவன்.
கேள்விகள் கணைகளாக வரவில்லை, தணலாகவே வந்தன.
சிறு வயதிரிலிருந்து வேறுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான்.
இன்று வரை நீ எந்த இனம் என்று ஒருவரையும் கேட்டதில்லை என்று நான் மார் தட்டி கொள்ளலாம் என்று நான் நினைக்கும் போதே ,
அட முட்டாளே அது உன் அடிப்படை கடமையடா என்று மேலெழும் தற்பெருமையை மனசாட்சி அடக்கி வைக்கிறது.
அதே சமயம் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் என்னிடம் சாதி சங்கத்திற்கு நன்கொடை கேட்ட பொது , பல ஆண்டுகளுக்கு முன்பே தர மறுத்தவன் என்று பெருமை பட்டு கொள்கிறேன் .
நினைவுகள் இவ்வாறு ஓடிகொண்டிருக்கும் போதே ,கேள்வி கேட்ட அமெரிக்கருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
வழக்கம் போல் திரு திரு வென விழித்தேன்.
What the F***
மனிதன் எல்லாரும் ஒன்று தானே .உனக்கு இருக்கும் உதிரம் தானே அவனுக்கும்
பிரிவு உண்டாக்கி என்ன பெரிசா சாதித்து விட்டீர்கள்.
தடித்த சொற்கள் வர தொடங்கின
இது தர்மம் சங்கடமான நிலையாக தோன்றவில்லை.
மாறாக மிகவும் இழிவான நிலையாக இருந்தது.
கூனி குறுகி நின்றேன்.
அது பலர் நடமாடும் சாலையாயினும் யாரும் எங்களை சட்டை செய்யவில்லை.
மெல்ல துப்பாக்கி கலாச்சாரம் வேறு என் எண்ணத்தில் மேலோங்க துவங்கியது.
அவரையே நோக்கிய படி பேந்த பேந்த விழித்து கொண்டிருந்தேன்.
என்னிடமிருந்து மறுமொழி ஏதும் வராது என்று சற்று நேரத்தில் அவருக்கு தோன்றியது போலும்.
என்னை முறைத்தபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அடுத்த எகிற துவங்கிய எனது இதய துடிப்பு, சராசரி நிலைக்கு வரவே ஒரு வாரம் ஆனது.
என் அறிவுக்கு எட்டிய வரை ஜாதி என்பது தொழிலின் அடிப்படையில் ஏற்பட்டது என்றாலும், இன்று அதன் எதிர்மறை தாக்கம் ஏராளம் என்றும் ,
என்றும் அதனை நியாயபடுத்த முடியாது என்ற கருத்திலும் ஒத்து போகிறேன்.
ஜாதியை ஒழிக்க வேண்டுமென பல சங்கங்களின் முழக்கம் வெறும் ஏட்டளவில் இருக்கையில், தொலைவில் இருந்து கொண்டு மனித இனத்திற்காக குரல் கொடுத்த அந்த அருமை அமெரிக்கர் இன்றும் என் மனதில் உயர்ந்து நிற்கின்றார்.