வெள்ளி, 29 அக்டோபர், 2021

46 ஆண்டு கால இடைவெளி

90 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு சிதிலம் அடைந்து கொண்டிருந்த எங்கள் தஞ்சை இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட விரும்பி, வேலைகளை துவங்கினோம் 2017ம் ஆண்டு இறுதியில்.

இல்லம் கட்டி முடிக்கும்முன் தஞ்சையை அடுத்த வல்லத்தில் இருக்கும் எங்கள் குல தெய்வ கோவிலை புதுப்பித்து பூஜை செய்ய ஆவல் கொண்டேன்.



           குலதெய்வம் - நந்தவனத்து வீரனார்         

என் சித்தப்பா திரு.சிவகுமார் அவர்களிடம் இதனை ஒரு தகவலாய் தெரிவித்து விட்டு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

சில நாட்கள் கழித்து என்னை அலைபேசியில் அழைத்தார் அவர்.

உறவினர்கள் அனைவரும் இணைந்து குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டுமென்ற அவரது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவோம் என்றார்.

18–ஏப்ரல்-2018 என்று நாள் குறித்துக் கொடுக்கப்பட்டது எங்கள் பாட்டனாரால்.

அனைத்து உறவினர்களுக்கும் பூஜையை பற்றிய தகவல் தெரிவிப்பதும், கோவில் பணிக்கான பணம் வசூலிக்கும் பொறுப்பும் எனக்கும் எனது ஒன்று விட்ட சகோதரர் சரவணன் அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.

ஒவ்வொரு உறவினரையும் அலைபேசியில் அழைத்து பேசும்போது தான்,

எங்கள் தலைமுறையில் எனக்கு தெரிந்திராத பல உறவினர்கள் அறிமுகமானார்கள்.

பூஜைக்காக முன் வந்த ஒவ்வொருவரின் ஆர்வத்தையும்,பங்களிப்பையும் என்னால் எழுத்தில் வடிக்க இயலாது.

மறைந்த விளையாட்டு வீரர் திரு. VB சந்திரசேகருடன் மாநில அளவில் மட்டைப் பந்து விளையாடிய சித்தப்பா, ஒன்று விட்ட அத்தை /  மாமா என்று தூரத்து உறவாய் இருந்தவர்கள்,

ஒன்றும் விடாமல் நெருங்கிப் பழகும் அளவிற்கு வந்தார்கள்.

அலைபேசியில் குழுவாக கூடி அலசினோம் / பேசினோம் நிகழ்ச்சி நிரல்களை.

நந்தவனத்து வீரனார் என்ற குல தெய்வத்தின் பெயருக்கேற்ப கோவிலை நந்தவனம் போல் மாற்றிட வேண்டுமென தனது ஆவலை தெரிவித்தார் எங்கள் தாத்தா .

அப்பணியை ஓவிய கலையில் சிறந்தவரான சித்தப்பா (திரு)நாவுக்கரசு அவர்கள் ஏற்றுக்கொண்டார்.


உணவு ஏற்பாடுகளை சித்தப்பா அம்பிகாபதி அவர்கள் மேற்கொண்டார்.

கோவில் அலங்காரம் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கும் பொறுப்பை சகோதரர் சரவணன் மேற்கொண்டார்.

உறவினர்கள் அனைவரும் தங்கள் சக்திற்கேற்ப தயக்கமின்றி பங்களிப்பை செய்தார்கள்.

நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பானது, கோவிலை சுற்றி ஓடுகள்(அதுதாங்க Tiles ன்னு கூகுள் சொல்லுது) பதிக்கும் பணியும் , வர்ணம் அடிக்கும் வேலையும்.

பூஜை நாளும் வந்தது.

அதிகாலை 5.30 மணிக்கே குழுமி விட்டோம்.

சுமார் இரண்டு மாதங்களாக தொலைபேசியில் பேசி வந்த பல குரல்களுக்கு அன்று உருவம் கண்டு மகிழ்ந்தோம். 

களிமண் / சந்தனம் கொண்டு சாமி சிலை செய்தல் மலர் மாலைகளை கொண்டு கோவிலை அலங்கரித்தல் போன்ற வேலைகளை முடித்தோம்.

பெண்களும் பூஜைக்கு வேண்டிய பிரசாதங்களையும் இன்ன பிற இத்யாதிகளையும் தாமதமின்றி செய்து கொடுத்தார்கள்.

உறவினர்களிலேயே மூத்தவரான 90 அகவை நிரம்பிய திரு.நடராஜன் தாத்தா அவர்களும் அவரது துணைவியாரும் அதிகாலையிலேயே தம்பதி சகிதமாய் அனைவரையும் வரவேற்றது எங்கள் இதயத்தை நெகிழச் செய்தது.

    

பாட்டனார் பூஜையை சிறப்பாக செய்து கொடுத்தார்.

அன்றைய நாளில் குல தெய்வ பூஜையை ஒரு திருவிழாவாகவே நாங்கள் கொண்டாடினோம் என்றால் அது மிகையில்லை.

1972ல் தான் எங்கள் முன்னோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமரிசையாக நடத்தியிருந்தார்கள்.






                        முன்னோர்கள் அன்றும்

அதன் பிறகு தனித்தனி குடும்பமாகவே பூஜை நடைபெற்று வந்தது.

46 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2018ம் ஆண்டில் தான்

குல தெய்வ பூஜை விமரிசையாக நடைபெற்றது.

சும்மாவா பின்னே, பூஜை அன்று வந்திருந்த உறவினர்களின் எண்ணிக்கை 83 என்பது எங்களுக்கு மிகப் பெரும் சாதனையே.



                        இந்த தலைமுறை இன்றும்

இனி குல தெய்வ பூஜை ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நடைபெற வேண்டுமென்று

பாட்டனார் அவர்கள் கூறியதை நாங்கள் ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறோம்.

இந்த பூஜை ஒவ்வோர் ஆண்டும் நிச்சயம் தொடர வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஆயினும் இதற்கு மூல காரணமாயிருந்த தாத்தா அதே ஆண்டு டிசம்பரில் மறைந்தார் என்பது மனதை பிழியும் செய்தியே.

இதனை மீண்டும் துவக்கி வைத்த மூவரில் நானும் ஒருவன் என்பது எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதை விட மனநிறைவு என்ற சொல்லே சால பொருந்தும்.

சனி, 11 செப்டம்பர், 2021

திருக்குறள் : 595

பரதம் ஓர் உன்னதமான கலை என்பதில் நம்மில் பலருக்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

அந்த நம்மில்என் மனைவியும் ஒருவர் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை.

சிறு வயதிலேயே எங்கள் மகளை பரதம் பயில ஏற்பாடு செய்தார் என் மனைவி.

சுமார் 7-8 வருடங்களுக்கும் மேலாக பரதம் பயின்ற பாரதிக்கு ,

2016 ல் அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டோம்.

நிகழ்சிக்கு காவல் துறையின் ஓர் உயர்ந்த பதவியில் இருக்கும் IPS அதிகாரியான எங்கள் குடும்ப நண்பரை தலைமை வகிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

மறு பேச்சின்றி ஒப்புக் கொண்டார் அந்த நேர்மையான மனிதர்.

மேலும் சிறப்பு விருந்தினராக மக்கள் பணியில் நல்ல பெயரெடுத்திருக்கும் திரு.சைலேந்திர பாபு அவர்களை அழைக்க வேண்டுமென்ற என் ஆசையை நண்பரிடம் பகிர்ந்தேன்.

துறை ரீதியாக மட்டுமல்லாது , இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் நம் DGP அவர்களின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

சைலேந்திர பாபு அவர்களை சந்திக்க செல்லுமுன் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

1999ம் ஆண்டு, கடலூர் நகரில் துணை ஆய்வாளராக இருந்த என் நண்பர் கிட்டு அவர்களின் திருமண வரவேற்பு.

மாலையில் முதல் நபராய் முன்வரிசையில் இடம் பிடித்து அமர்ந்து விட்டேன்.

பல உயர் அதிகாரிகள் வந்த வண்ணம் இருந்தாலும் கட்டுமஸ்தான ஒருவர் எனக்கு அடுத்த இருகையில் அமர்ந்தார்.

அப்போது ஒரு காவலர் என்னிடம் ஓடி வந்து நெறிமுறையோடு அமருமாறு சொல்லிகொண்டிருக்கும் போதே என்னருகில் இருந்த அதிகாரி , 

அவர் விருப்பப்படி அமரட்டும் என்ன தவறு என்று காவலரை போகச் சொன்னார்.

அப்படி பொது இடத்தில் கண்ணியத்தோடு நடந்து கொண்டவர் அன்றைக்கு கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த திரு.சைலேந்திர பாபு அவர்கள்.




DGP அவர்களை அவரது அலுவலகத்தில் என் குடும்ப சகிதமாக சந்தித்தேன் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் பெறுவதற்காக.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.

அவர் சமீபத்தில் விஜயம் செய்திருந்த அமெரிக்க அனுபவத்தை பற்றி ஆர்வத்துடன் விவரித்துக் கொண்டிருந்தார்.

சிகாகோவின் நகரின் உயரமான கட்டிடத்தின் மீதிருந்து Sky Diving” (தமிழாக்கம் அறிந்தோர் சொல்லுங்கள்) செய்யும் அவரது புகைப்படத்தை எனக்கு காணும் போதே உதறல் எடுத்தது.

சைலேந்திர பாபு அவர்களுக்கோ இரு முறை மட்டுமே sky diving செய்ய வாய்ப்பு கிட்டியது என்றும் இன்னும் சில முறை கிடைக்கவில்லை என்ற வருத்தம் அப்போதும் தீராமலே இருந்தது.

பேச்சினூடே அவரது அலைபேசி சிணுங்கியது.

அழைத்தவர் மிதிவண்டி ஓட்டுவோர் சங்கத்தின் உறுப்பினர் போலும்.

சென்னையிலிருந்து மாமல்லர்புரம் வரை மறுநாள் செல்வதைப் பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இந்த வயதிலும் மனிதர் உடலை கட்டுக் கோப்பாக தான் வைத்திருக்கிறார்.

மெல்ல மெல்ல விஷயத்திற்கு வந்தேன்.

சார் என் மகளின் நடன அரங்கேற்றத்திற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பிக்க இயலுமா ...?

எந்த தேதியில் வைத்திருக்கிறீர்கள் குமார் .....

பிப்ரவரி 16 சார்.

என் மகளை நோக்கி திரும்பினார்.

ஏனம்மா உனக்கு பரதம் தவிர வேறு என்ன கலைகள் தெரியும். மேற்கத்திய நடனம் எதுவும் கற்றிருக்கிறாயா என்று கேட்டு விட்டு அவரது வருகைப் பற்றி மறுநாள் தெரிவிப்பதாக சொன்னார்.

மறுநாள் அழைத்தேன்.

குமார் என்னை அழைத்தமைக்கு நன்றி. ஆனாலும் எனக்கு பரதம் பற்றி எதுவும் தெரியாதே. இதுவே எனக்கு நன்கு தெரிந்த மேற்கத்திய நடனம் என்றால் நிச்சயம் வருவேன்.

எதுவுமே தெரியாத பரதம் பற்றிய நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக வருவதற்கு எனக்கு தகுதியில்லை. அறியாத ஒன்றைப் பற்றி மேடையில் பேசுவதும் பொருத்தமாயிராது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இதை கேட்கையில் எனக்கு ஆச்சர்யத்துடன், அவர் மீதான மதிப்பும் மேலும் கூடத்தான் செய்தது.

தகுதியே இல்லையென்றாலும் மேடை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அலையும் மனிதர்களுக்கு இடையில் தகுதியுள்ள இவரை போன்றோர் என்றும் வேறுபட்டவர்களே.

சைலேந்திர பாபு அவர்கள் உடல் உயரத்தில், காவல் துறையின் உச்ச பதவியில் மட்டுமல்ல , குணத்தாலும் இமய மலையாகத் தான் திகழ்கிறார்.


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

 

ஞாயிறு, 16 மே, 2021

மாலி என்னும் மாமனிதர்

மே மாதம் 7ம் தேதி காலை தோழர் சுந்தர் செய்தியை பகிர்ந்த போது என்னால் நம்பத்தான் முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்தேன்.

2001ம் ஆண்டு இறுதியில் நான் அமெரிக்காவிலிருந்து நம் தேசம் திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டிருந்த போது எனது சித்தப்பா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டவர் மகாலிங்கம்.

அப்போது அவர் HP நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை தலைவராக இருந்தார்.

மனிதர்களை எடை போடாமல் , அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதில் விருப்பம் உள்ளவர்.


தகவல் தொழில் துறை நலிவடைந்திருந்த அந்த நேரத்தில் , மிக மிக குறைந்த ஊதியத்திற்கே ஆட்களை பணியமர்த்தும் வாய்ப்பு இருந்தும்,

அதை செய்யாமல் தகுதிக்கேற்ப ஊழியம் வழங்க வேண்டுமென்பதில் கொள்கை மாறாதிருந்தார்.  

இக்கொள்கை இவரை மட்டுமல்ல, நிறுவனத்தின் நேர்பெயரையும் உயர்த்திக் காட்டியது.

தொழிலில் சிகரம் தொட்ட போதும், வாழ்க்கையில் சிரம் தாழ்ந்தே இருந்தார்.

https://www.youtube.com/watch?v=OfLyil_K89g

நண்பர் சுந்தர் (எங்களுக்கு முன்னாள் மேலாளர்) HP பெங்களுருவில் புதிதாய் விநியோக மையம் (Delivery  Center இன் மொழி பெயர்ப்பு J ) அமைக்க மிகப் பெரிய அளவில் உறுதுணையாய் இருந்தார், 

மேலாளராக அல்லாது அப்துல் கலாம் அவர்களை போல் வழி நடத்தும் ஒரு தலைவனாக.

                                                        திரு. சுந்தர்

HP மற்றும் IBM நிறுவனங்களில் நான் சேர்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமென்றால் அது மிகையில்லை.

தனது மேலாளர் திரு. அருண் தியாகராஜன் அவர்கள் மீது இவர் கொண்டிருந்த குரு பக்தி (தூய தமிழிலில் “ஆசான் வழிபாடு” என்று நினைக்கிறேன்) அளவிட முடியாதது என்பது,

பொது இடங்களில் கூட சற்றும் யோசிக்காமல் பாதம் தொட்டு ஆசி பெறுமளவிற்கு செல்லும்.

Times of India நாளிதழில் அவர் அளித்த பேட்டியே அதற்கு சாட்சி.


IIM போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பகுதி நேர பேராசிரியராகவும் பணி புரிந்தாலும், கற்றது கையளவே என்ற எண்ணம் கொண்டவர்.

அன்றாடம் புதிதாய் என்ன பயின்றோம் / பயிற்றுவித்தோம் என்பது, 

இளைய தலைமுறை இவரது தலைமைப் பண்புகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று.

சுமார் 9 வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று, நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்ற துவங்கினார்.

இத்தனை பெருமைகள் இருந்தும், என் மீது நட்பு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பாசமும் கொண்டவர்.

நான் 5 வருடங்கள் முன்பு அமெரிக்கா சென்ற போது, மின்னஞ்சலிலேயே அவரது நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது மட்டுமல்லாது,

எனக்கு வேண்டிய அனைத்தும் செய்து தருமாறு அவர்களுக்கு அன்பு கட்டளையும் இட்டார்.

சென்னைக்கு விஜயம் செய்யும் பெரும்பான்மையான நேரங்களில் தன்னை சந்திக்க அழைப்பு விடுப்பார்.

ஒரு சில நட்சத்திர விடுதிகளில் எனக்கு கிட்டிய உணவு நண்பரின் உபயமே.

தர்மபுரியை சேர்ந்த மனிதருக்கு ,

தர்மம் புரிவது பகுதி நேர பணியாகவே இருந்து வந்தது என்பது நாங்கள் அறிந்த உண்மை.

“ நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தே ளுலகு “

என்ற குறளுக்கு பொருத்தமான மனிதர் மாலி அவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

அன்பை மட்டுமே பிறருக்கு பரிசாக அளித்து வந்த திரு.மாலி,

60 வயதில் முதன் முறையாக ஏமாற்றத்தை அளித்திருக்கிறார் 

கரோனாவிற்கு மற்றொரு பலி என்ற பெயரில்.

https://hr.economictimes.indiatimes.com/news/industry/rip-mali-mahalingam-former-vp-hr-of-ibm-india-passes-away/82431662

கரோனாவிற்கு தான் கருணை இல்லை , இறைவனுக்குமா இரக்கம் இல்லை.

வியாழன், 15 ஏப்ரல், 2021

ஈன்ற பொழுதின்

நாம் இருவருமே ஒரே ஊரில் பிறந்தோம் , ஒன்றாய் படித்தோம் பள்ளி இறுதி வரை.

நுழைவு தேர்வில் உனக்கு கிடைத்தது இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (IIT) பொறியியல் படிப்பு.

எனது ஆர்வத்தினால் நான் தேர்ந்தெடுத்தது இந்திய ராணுவம்.

நீ பொறியியல் படிப்பை தொடர்ந்தாய்

நான் மிக கடினமான பயிற்சியை மேற்கொண்டேன்

உனக்கு வரையறுக்கப் பட்ட பணி நேரம்

எனக்கோ காலை 4 மணிக்கு துவங்கி மாலை 9 வரை , சில நேரங்களில் பணி நேரம் நீளவும் செய்யும்.

படிப்பை முடித்த உனக்கு பட்டமளிப்பு விழா.

பயிற்சிக்கு பின் பணியை மேற்கொண்ட எனக்கு வீர தழும்புகள்.

மிக பெரிய நிறுவனத்தில் வேலை உனக்கு.

எனக்கு மனம் நிறைவான நாட்டுப் பணி.

ஒவ்வொரு பண்டிகைக்கும் / நிகழ்சிக்கும் உனக்கு பெற்றோரை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

எனக்கோ தேசத்தை காக்கும் ஒவ்வொரு நாளும் தீபாவளி

பண்டிகைகளை நீ விளக்கேற்றியும், பொம்மை துப்பாக்கி வெடித்தும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தாய்.

நானோ பதுங்கு குழியில் இருந்தபடி நிஜ துப்பாக்கியுடன் தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன்.

ஒவ்வொரு மாலையும் உன்னை வரவேற்க உனது மனைவி காத்திருந்தார்.

எனது மனைவியோ , ஒவ்வொரு நாளும் நான் உயிரோடு இருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

பணி நிமித்தமாக நீ ஆல்ப்ஸ் மலை மீது பல முறை பறந்தாய் விமானத்தில்.

நானோ பயிற்சியின் ஒரு பகுதியாக மலையேற்றம் பழகிக் கொண்டிருந்தேன்.

நீ இல்லம் திரும்பிய போது , உன் மனைவியால் ஆனந்த கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை.

உன்னை கட்டி அணைத்துக் கொண்டார், நீயும் ஆறுதல் கூறினாய்.

உனக்கு உறவினரின் மலர் மாலைகள்.

நான் இல்லம் திரும்பிய போது எனது மனைவியாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை.

ஆனால் என் மனைவியால் ஆலிங்கனம் செய்ய இயலவில்லை.

எனக்கு மலர் வளையங்கள்.

காரணம் , நான் இருந்தது சவப் பெட்டியில் மார்பில் பாய்ந்த குண்டுகள் மட்டுமல்ல, உடன் வீர பதக்கங்களும்.

இந்த நீயும் நானும் இரு வேறு நபர்கள் அல்ல ,

1996 ம் பிறந்த கேப்டன் அஷுதோஷ் தனக்கு கிடைத்த பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்காமல்,

நமது ராணுவத்தில் சேர்ந்தார் தேசப்பற்றின் காரணமாக.



சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிர் துறந்தார், 24ம் அகவையிலேயே.

இந்த புண்ணிய தேசத்தில், பஞ்சமும் பட்டினியும் வராமல் இருப்பது பல நல்ல தொண்டு உள்ளங்களால், பிரார்த்தனைகள் / யாகங்களால் மட்டுமல்ல.

உன்னை போன்ற நல்ல ஆத்மாக்களும் முக்கிய காரணம்.

சென்று வா வீரனே. நீ என்றும் எங்கள் நினைவில் வீற்றிருப்பாய்.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ,

தன் மகனை (தேசத்திற்காக) மாண்டான் என கேட்ட தாய்.

நன்றி – இந்திய ராணுவம்.