ஞாயிறு, 12 மார்ச், 2023

கால இயந்திரம்

என்றும் புன்னகையே பிறருக்கு பரிசாய் அளித்து வந்து , சமீபத்தில் இயற்கை எய்திய கல்லுரி நண்பன் வெங்கடேஷ்க்கு கண்ணீர் அஞ்சலி.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்ற வாலியின் பாடலை ,

பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே எனும் கண்ணதாசனின் வரிகளை .........

கேட்கும் போதெல்லாம் பள்ளி / கல்லுரி கால நினைவுகளில் மூழ்கி மீண்டு வரும் போது விழியோரத்தில் நீர்த்துளி எட்டிப் பார்ப்பதை பலர் தவிர்த்திருக்க இயலாது.

அப்படிப் பட்டவர்களில் நானும் ஒருவன் தான்.

கால இயந்திரம் ஒன்றை வடிவமைத்து அந்த ஏக்கத்தை தணித்தார்கள் நண்பர்கள் ஆம்ஸ்ட்ராங்கும் ,ஸ்ரீனிவாசனும்.

 

நம்ப முடியவில்லையா என்ன , அது நிஜம் தாங்க.

கல்லுரி நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கல்லூரிக்கு விஜயம் செய்ய வேண்டும்,

ஒரு சில மணி நேரங்களாவது மாணவப் பருவத்தை மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆவலை நிறைவேற்ற இருவரும் உறுதி பூண்டார்கள்.

நண்பர்களை ஒன்று சேர்க்கும் பணியில் ஸ்ரீனிவாசன் ஈடுபட,

ஆம்ஸ்ட்ராங் நண்பர்களை மட்டுமல்லாது, பேராசிரியர்கள் பற்றிய தகவல்களையும் திரட்டத் துவங்கினார்.

வேலைப்பளு இருந்த போதிலும், மற்ற நண்பர்கள் ராமாயண அணிலாய் தம்மாலான பணிகளை மேற்கொண்டனர்.

நீண்ட நாட்களாக மனதில் இருந்த எண்ணத்தை செயல்படுத்த அலைபேசியின் குழு அழைப்பில் பலமுறை பேசி திட்டமிட்டோம்.

டிசம்பர் 29 2022 கல்லூரியில் சந்திப்பதாக முடிவானது.

பூண்டி புஷ்பம் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் திரு.ரவிச்சந்திரன் அவர்களை தொடர்புகொண்டு எங்கள் வருகைப்பற்றி தெரிவித்தோம்.

மனமகிழ்வுடன் எங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வதாக சொன்னார்.

மன்னை நகரை பூர்வீகமாக கொண்ட முருகானந்தம்,  வருவதாக வாக்களித்தார்.

மண்ணைக் கவ்வாமல், இந்த சந்திப்பிற்காகவே அவர்  அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தது பேரானந்தம்.

தங்கள் வருகை ஐயமே என்று சொன்ன ராஜா முஹம்மது, ரங்கராஜன் , விவேக் மற்றும் பழனி ஆகியோர் சென்னையிலிருந்து இந்நிகழ்ச்சிக்காகவே பயணித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

நண்பர்கள் பலர் வந்து சிறப்பித்த போதிலும் தாணு மற்றும் பாலாஜி ஆகியோர் வர இயலவில்லை என்ற ஏக்கம் எழாமல் இல்லை.

காலை சுமார் 10 மணி அளவில் ,

எங்கள் AVVM பூண்டி புஷ்பம் கல்லுரிக்கு வரத் துவங்கினோம்.

நுழைவாயில் அருகில் செல்லச் செல்ல ,

கால இயந்திரம் பின்னோக்கி சுழல தொடங்கியது.

71 என்ற எண் கொண்ட பேருந்து மட்டுமே கல்லுரி வாசல் வரை வரும்.

அப்பேருந்தில் இடம் கிடைக்காத மாணவர்கள், வயல்களிடையே அமைந்திருக்கும் கல்லுரியை அடைய பேருந்து நிறுத்ததிலிருந்து சுமார் 1 KM நடக்க வேண்டும்.

நாங்கள் இளங்கலை படித்த 1988-1991 காலங்களில் ,

கல்லுரி உணவகத்தில் சுண்டல் எங்களிடையே பிரபலம்.

இதனை சுவைத்த பின்பு வகுப்பிற்கு தாமதமாய் சென்று, ஆசிரியரிடம்

வசை பெற்றோர் பலர் உண்டு.

ஒவ்வொரு முறையும் பருவத்தேர்வு முடிவுகளின் மதிப்பெண்களை கண்டு,

கணித விரிவுரையாளர் அச்சில் ஏற்றதக் கூடாத சொற்களை பயன்படுத்தி மிகவும் இயல்பாக திட்டி வருவதை,

இன்றும் நாங்கள் நகைச்சுவையாய் நினைவு கூர்ந்து வருவது ஒன்றென்றால் ,

இரண்டாவது, மேல்அங்கி அணிந்தபடி மேசையை ஒட்டி நின்று வருகைப் பதிவு எடுக்கும் ஆசிரியரின் சட்டைப் பையில் பேருந்து சீட்டுகளையும் ,மாத்திரை உறைகளையும் (வே)வாடிக்கையாக போட்டு விடுவது.

தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட ஆசிரியர், வடமொழி சொல்லான சாமிநாதன் என்ற தமது பெயரை “இறையரசன் என மாற்றிக் கொண்டவர்.

Chock piece என்பதற்கு தமிழில் சுண்ணம் என்று இவரிடம் தான் கற்றோம்.

மேலும், வானொலியில் “மாநில செய்திகள் வாசிப்பது என்று தொடங்குவதை எதிர்த்து வானொலி நிலையத்திற்கு கடிதம் எழுதியதாக அவர் சொல்வார்.

வாசிப்பது என்பது அஹ்ரினை வாசிப்பவர் என்பதே சரியாய் சொல் என்பது இவரது வாதம்.

விரிவுரையாளர்கள் எங்களை வரவேற்க வந்தமையால் காலச்சக்கரத்திலிருந்து கீழே இறங்கினோம்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்க்கிறேன்.

முதல்வர் அறை இடம் மாறி இருந்தது,

இயற்பியல் ஆய்வுக் கூடங்களில் ஒரு சில மாற்றங்கள்.

மற்றபடி பெரிதும் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை.

திரு.ரவிச்சந்திரன் தாம் சொன்ன படி,

இன்றைய மாணவர்களுடன் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.

நண்பர் ஸ்ரீனிவாசன் தொழிலில் தாம் பட்ட சிரமங்களையும் , தொழில் முன்னேன்றகளுக்கான வழி முறைகளையும் பற்றி எடுத்துரைத்தார்.

நண்பர் பழனிவேல் வங்கித் துறைகளில் உள்ள வாய்ப்புகளை பற்றி விளக்க ,ராஜா முஹம்மது கணிபொறித்துறை பற்றி பேசினார்.



பின்னர் நாங்கள் பாடம் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று அக்கால நினைவுகளில் மூழ்கினோம்.

மாணக்களாக மாறி, இருக்கைகளில் அமர்ந்து அரட்டை அடித்ததை, இளமைக் கால சாகசத்தை எங்கள் எள்ளுப் பேரன்களுக்கும் சொல்லி மகிழவும் தயாரானோம்.

ஆசிரியர்களை உணவு நேரத்தில் தஞ்சை லக்ஷ்மி என்ற உணவு விடுதியில் சந்திப்பதாக ஏற்பாடு.

எனவே கல்லூரியிலிருந்து கனத்த மனதுடன் கிளம்பினோம்.

முன்னாள் முதல்வர் திரு. கிருஷ்ணமுர்த்தி அவர்கள் எங்களை சந்திப்பதற்கு காட்டிய ஆர்வம் சொல்லில் அடங்காது.

அவரே சக பேராசிரியர்களிடம் பேசி அழைத்தது வந்தது இன்ப அதிர்ச்சி.

நீண்ட இடைவெளி என்பதால் பேராசிரியர்களிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம்.

இன்று ஒரு சில பேராசிரியர்கள் உலகில் இல்லை எனினும்,

80 அகவையை தாண்டிய திரு.ரங்கமணி அவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது ஆசிரியரின் அன்பைக் காட்டியது.

மதிய உணவே எங்களுக்கு சுமார் 3 மணிக்கு மேல் தான் தொடங்கியது, காரணம் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தமையால்.

செவிக்கு உணவு இல்லாத போழ்து என்ற குறளுக்கு உண்மையான பொருளை அன்று தான் நாங்கள் பலர் கண்டோம்.

ஒரு வேறுபாடு - வள்ளுவர் சொன்னது கல்வி ஞானத்தைப் பற்றியது.

ஆனால் அது எங்களுக்கோ பழைய நினைவுகள் என்று ஆகிப் போனது.

காலன் எங்களை இனி நிரந்தரமாக பிரிக்கும் வரை ,ஒவ்வொரு டிசம்பரிலும் கால இயந்திரம் எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

உரையாடலுக்கு பின்பு

நுழைவாயில் அருகே

முதலாம் ஆண்டு வகுப்பறை

கல்லூரியை சுற்றி வந்த போது

உணவருந்தும் நேரம்

பேராசிரியர்களின் வருகை

பேராசிரியர்களுடன் நாங்கள்

ஆசான்களுக்கு எங்கள் அன்பு பரிசு

இந்நாள் மாணவர்கள்

விரிவுரையாளர் திரு.செந்திலுடன்

முதல்வருக்கு எங்களின் அன்பு பரிசு

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

சகலகலா வல்லவன்

ஒரு மனிதனால் பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்க முடியுமா .

முடியும் என்று சொல்லில் மட்டுமல்ல.., தாம் கற்ற கலைகளில் நிபுணர் என்பதை செயலிலும் நிரூபித்து வருகிறார் இந்த வல்லுநர். 

பெயர்திரு .ரவிந்திரன்.

அக்குபஞ்சர் சிகிச்சையினை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இவருக்கு, 

சுஜோக் எனப்படும் கை விரல்களுக்கிடையே புள்ளிகளை

தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிப்பது கை வந்த கலை.

சில வாரங்களுக்கு முன் நானும் நண்பர் பாலுவும் இவரது இல்லம் சென்றிருந்தோம்

சுற்றிலும் மா ,தென்னை, சப்போட்டா ,எலுமிச்சை ,பப்பாளி என பலவகை மரங்கள் , செடிகள் என வண்டலூர் அருகே ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது இல்லம்.

வாங்க என்று அன்புடன் வரவேற்கிறார் ,

கூடவே அவரது செல்ல பிராணியான அப்புவும் வாலை ஆட்டி வரவேற்கிறது.



பழங்களை போலவே இவரது குணமும் இனிமையாய் இருப்பதால் ,

உடலுக்கு ஏறிய கனமானது, தலைக்கு ஏறவில்லை .

நண்பரின் குடும்பம் அளித்த விருந்தோம்பலில் திளைத்தபடி உரையாடலை துவங்கினோம்.

தமது செல்வங்களுடன்

இல்லத்தினருடன்

                             சகோதரர் குடும்பத்தினருடன் 

உங்களின் தொடு சிகிச்சை பயணம் பற்றி

சுமார் 10  ஆண்டுகள் முன்பு கம்பம் கல்வி குழுமத்தில் பயின்று, தற்போது சென்னையில் 3  இடங்களிலும் , புறநகர் பகுதிகளில்  2 சிகிச்சை நிலையங்களும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

சுமார் 5 - 10 லட்சம் நோயாளிகளுக்கு வணிக நோக்கமற்ற சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது எனது வாழ் நாள் குறிக்கோள்.

அலோபதி மருத்துவருக்கு இணையாக அல்லது மேலாக உடற்கூறு பற்றியும், நோய்க்கான காரணங்கள் / தீர்வுகளையும் உங்களால் எப்படி எளிதாக சொல்ல முடிகிறது.

அலோபதி பாரதம் வந்து ஒரு நூற்றாண்டு தானே இருக்கும். அதற்கு முன்பே நாம் பல்லாயிரம் வருடங்களாக சித்த / ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடிகள் அல்லவா .

அப்புறம் உங்கள் வினாவிற்கு விடை - தொடு சிகிச்சை நிலையம் துவங்கும் போதே நான் என்னை நன்கு ஆயத்தப் படுத்திக் கொண்டேன் .

நண்பரின் மருத்துவம் பற்றிய பேச்சு இணைய தளத்தில்

ஏன் தலைவலி வருகிறது

நோயின்றி வாழ

உங்களின் இசையுலக பயணம் பற்றி ......

நானே பாடவும் , குழல் இசைக்கவும் கற்றுக் கொண்டேன்.

குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் , ராகங்களை முழுமையாக கற்பதற்கும்  மட்டுமே குருவின் உதவியை நாடினேன்.

பல திரை பாடல்களுக்கு குழல் வாசித்திருக்கிறேன்.

புகழ் பெற்ற பாடகர்கள் திரு.யேசுதாஸ் , ஷங்கர் மகாதேவன் , ஹரிஹரன் மற்றும் மறைந்த SPB ஆகியோருடன் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பலமுறை மேடை ஏறி இருக்கிறேன் என்பது பெருமை என்று சொல்வதை விட எனக்கு மகிழ்ச்சி என்பதே பொருந்தும்.

                    மேடையில்

அப்படி என்றால் மறக்க முடியாத அனுபவங்கள் இருக்க வேண்டுமே …………..

இங்கிலாந்து பர்மிங்ஹாம் நகரில் ஹரிஹரன் "உயிரே" பாடல் பாடுகிறார்.

திடீரென எழுந்த பார்வையாளர்கள் கரவொலி சுமார் 3 நிமிடம் நீடித்தது.

பாடகர் நன்றி கூறி விட்டு மீண்டும் துவங்க,

பார்வையாளர்களோ இது குழல் வாசிப்பவருக்கு என்று சொன்னதோடு , மீண்டும் கரவொலி மூலம் பாராட்டுதலை தெரிவித்தார்கள்.

வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

திருக்கழுகுன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீபம் என்ற விழா நடப்பது வழக்கம்.

சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் விழாவில் நாங்கள் காலை 11 மணி அளவில் இசை கருவிகளோடு கோவில் குளத்திற்குள் படகில் செல்வோம்.

பசிக்காகவோ , இயற்கை உபாதைக்காகவோ நினைக்கும் நேரத்தில் கரைக்கு சென்று வர இயலாது. 

அதற்கு சுமார் 12 மணி நேரம் ஆகும்.

இது வரை 2 முறை அந்த விழாவில் பங்கேற்று எனது இசை பங்களிப்பை செய்துள்ளேன் என்பது மனநிறைவான செய்தி.

1988 இல் அகில இந்திய அளவில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றேன் , IUCS (Inter university Cultural Services) நடத்திய குழல் போட்டியில்.

இந்த விருதை எனக்கு வழங்கியவர் ,மரியாதைக்குரிய நமது முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள்.

மனதை கொள்ளை அடிக்கும் இந்தி பாடல்

இசைக்  கலையை பிறருக்கு கற்றுத் தருகிறீர்களா

பல திரை இசை கலைஞர்களும் , பிரபல நடிகர்களும் மற்றும் தொடு சிகிச்சையில் புகழ் பெற்று விளங்கும் ஒரு சிலரும் எனது மாணாக்கள்.

தொடு சிகிச்சையில் எனது ஆசாயிருந்தவர்க்கு இன்று நான் புல்லாங்குழலில் ஆசான்.

நீங்கள் என் மாணவர் தானே. 😊

இக்கலை வளர வேண்டுமென்ற நோக்கில் ,

நான் கட்டணம் எதுவும் பெரிதாய் கேட்பதே இல்லை.

ஆசானை மிஞ்சிய சீடன் என்று பேர் வாங்குவதே ,

நீங்கள் அனைவரும் எனக்கு பெற்று தரும் ஊதியம்.

எப்படி குழல் கற்க துவங்குவது


மேடை கச்சேரியில்




அடுப்பில்லா சமையலிலும் நீங்கள் சிறந்தவராமே.

GEM தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் வெளியாகும் உங்கள் சமையல் நிகழ்ச்சி பிரபலம் என்று கேள்வி பட்டோமே....

பட்டாசு வெடிப்பது போல சிரிக்கிறார்.

சமையற்கலை என்பது எனக்கு சிறு வயதில் ஒரு சித்த மருத்துவர் கற்றுத் தந்தது.

உணவின் சுவையை கூட்டவும் அதனை மாற்றவும் நமது எண்ணங்களால் இயலும் என்பதை நிரூபித்து காட்டவும் செய்தார் .

நான் சமையற்கலை கற்க இவரே மூல காரணம் .

ஆர்வத்தின் பேரின் தான் இதையும் கற்றுக் கொண்டேன்.

எப்படியோ தொலைக்காட்சி வரை சென்று விட்டது.       

தற்போது வாரம் மூன்று முறை என GEM TVயில் எனது சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

GEM TV நிகழ்ச்சியில்

சப்போட்டா சக்கரை பொங்கல்

மிளகு அவள் சாதம்

வாழைப் பழ பகாளா பாத்

ஆய கலைகளில் எதையும் விட்டு வைக்கும் எண்ணம் இல்லை போல் இருக்கிறதே.

வர்மக்  கலையில் இந்தியன் தாத்தாவிற்கு நீங்கள்  போட்டி என்று கேள்வி பட்டோமே.

இப்போது பட்டாசு அல்ல,  சரவெடி வெடித்தது.

10 வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பரும் காஞ்சிபுரம் செல்கையில் வர்மக்கலை அறிந்த ஒரு மூதாட்டியை சந்திக்க நேர்ந்தது.

அவர் மூலமாக வேலூரில் இருக்கும் பயிற்சி பள்ளி பற்றி அறிந்து கொண்டு பின்னர் அங்கு பயின்றோம்

வர்மக்கலை என்பது இந்தியன் படத்தில் வருவது போல் , பெரும்பாலும் பிறரை தாக்குவதற்காக அல்ல , அது உயிர் காக்கும் மருத்துவமே என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இக்கலையில்  நான் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.

உங்கள் சமூக சேவை பற்றி.... ...

மிகுந்த தயக்கத்திற்கு பின்னரே விடையளித்தார்.

(செய்யும் பணியை வெளியில் சொல்ல கூச்சப்படுவதே காரணம்)

கரோனா காலத்தில் நலிந்தோர்க்கு குறிப்பாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமக்கு தெரிந்தோரிடம் பணம் / பொருள் வசூலித்து

5-6 மாதங்கள் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை  வழங்கி வந்தேன்

இதனில் எனது பங்களிப்பு மட்டுமே சுமார் 1.75 லட்சம்.

2015 ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்த போது வண்டலூரை சுற்றிய பகுதிகளில், சுமார் ஒரு வார காலம் உணவு வழங்கினேன்.

வடியாத வெள்ளத்தில் நாம் கால் வைக்கவே யோசிக்கும் நேரத்தில், இஸ்லாமிய நண்பர்களும் ,நானும் உணவை சுமந்து கொண்டே அழுக்கு நீரில் நீந்தி சென்று பல நாட்கள் உணவு மற்றும் நீர் குடுவைகளை வழங்கியதை இன்றும் சுற்று வட்டாரம் மறக்கவில்லை.


நண்பருக்கு வணக்கம் சொல்லி விடை பெற்றோம்.

64 கலைகளில் சமூக சேவை என்பது இருக்கிறதா என்பது தெரியவில்லை .

அப்படி இல்லை என்றால்,  

65 வது கலையாக இதுவும் சேர்க்கப் பட வேண்டும் என்பதற்கு 

முழு முதற்காரணமாக நம் கண் முன்னே மனித நேயம் மற்றும் ,மருத்துவ உலகின் மூலமும் தொண்டு செய்து வரும் ,

எனது ஆசானை இப்பதிவின் மூலம் அறிமுகம் செய்து வைப்பதில் நான் மகிழ்வு கொள்கிறேன்.

வியாழன், 13 அக்டோபர், 2022

திரைநாயகர்களும் தரை நாயகர்களும்

நட்சத்திர விடுதியின் அறையில் அமர்ந்தபடி இயக்குனர் கதை சொல்ல துவங்குகிறார்.

இரு கரங்களையும் “ப வடிவில் பாரதிராஜா போல் வைத்து இல்லாத ஒளிப்பட கருவியை இயக்கி, கதை சொல்கிறார் தயாரிப்பாளருக்கு.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரியும் திரு.வைத்தியநாதனுக்கு ஆண் மகவு பிறக்கிறது.

பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீனிவாசன் என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

பள்ளி படிப்பை முடித்து பொறியாளர் கனவை எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவனுக்கு கிடைத்த மதிப்பெண் 85% மேல்.

நுழைவு தேர்வில் நன்கு தேறியும் கூட,

இட ஒதுக்கீட்டின் காரணமாக தாம் விரும்பிய பொறியியல் படிப்பு முதல் நிலை கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்ற செய்தி பேரிடியாய் தலையில் இறங்குகிறது.

இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளில் கிடைத்தும் ,

பொருளாதார சூழ்நிலை காரணமாக இளங்கலை படிப்பை தேர்ந்தெடுக்க நேர்கிறது.

81 விழுக்காடுகளுக்கும் மேல் பெற்று, வகுப்பில் முதல் மாணவன் என்ற பெருமையுடன் கல்லூரி படிப்பை முடிக்கிறான்.

வேலையில்லா திண்டாட்டம் என்ற சிக்கலுக்கு நமது கதாநாயகனும் விலக்கல்ல.

தன் முயற்சியில் சற்றும் தளராத அம்புலிமாமாவின் விக்கிரமன் போல் விடா முயற்சியானது ,

சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைக்கச் செய்கிறது.

மிக குறைந்த ஊதியத்தின் காரணமாக நம் நாயகன் சில நாட்கள் பேருந்தை பயன்படுத்தாமல் ,

நடராஜனையே நம்பி அலுவலகம் செல்வதுண்டு.

இவனது இந்த நிலை கண்டு மனமிரங்கும் இந்த நிறுவனத்தின் மேலாளர்கள் இருவர்,

கணிப்பொறியில் இவன் மேலும் தொழில் நுட்பங்களை கற்க பொருளாதார உதவி செய்கிறார்கள்.

நாயகன் வாழ்நாள் முழுதும் செய்நன்றியை மறவாமல் நினைவில் வைத்திருக்கிறான்.

காலச் சக்கரம் மெல்ல உருண்டோடுகிறது.

பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் , முதுநிலை மேலாளர் , பின் இயக்குனர் போன்ற பதவிகளை வகிக்கிறான் நாயகன்.

மிதி வண்டி மிதித்தும் , தொடர் வண்டியில் தொற்றிக் கொண்டும் சென்றவனை இப்போது மகிழ்வுந்து மகிழ்விக்கிறது.

தஞ்சையின் ஏதோ ஒரு சந்தின் மூலையில் ஒண்டுக் குடித்தனம் செய்தவன்

இன்று உலக வரைபடத்தில் மூலைகளில் இருக்கும் தேசங்களுக்கெல்லாம் பறக்கிறான்.


அறிமுக நாயகன் - ஸ்ரீனிவாசன்

பிரம்மச்சாரியாய் இளங்கலை பட்டம் பயின்றவனுக்கு காலப் போக்கில் கணவன் என்ற பட்டமும் பின்னர் தந்தை என்று பட்டங்களும் கிட்டுகின்றன.

கடும் முயற்சியின் பலனாய் இரு முதுகலைகள், ஒரு முனைவர் என பட்டங்களின் பட்டியல் நீளுகிறது 40 வயதிற்கு பிறகும்.


அமைச்சரின் கையால் முனைவர் பட்டம்

நிற்க – இப்படி நாயகன் வளர்ந்து வருகையில் கதையில் திருப்பம் வேண்டுமல்லவா.

தந்தை வைத்தியநாதன் தலையில் பலத்த அடிபட்டு நினைவிழக்கிறார்.

தாயார் திருமதி. ஜெயலக்ஷ்மி கூடவே இருந்து கணவரை, குழந்தை போல் கவனித்துக் கொள்கிறார்.

அடுத்து உணர்ச்சிப் பிழம்பான காட்சி (அதாங்க sentiment) .

ஒரு நாள் தாயார் பூஜை அறையில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை சொல்லியபடி முழங்தாளிட்டு கடவுளை வணங்குகிறார்.

வணங்கியவர் இறைவன் தாள் பற்றியபடியே அவனடி  சேர்கிறார் பூஜை அறையிலேயே.

தாயார் மரணம் என்ற துக்கத்தில் நாயகன்.......

இதை பற்றி எதுவும் தெரியாத நிலையிலோ தந்தை.........

இதற்கிடையே தாம் நீண்ட நாட்களாக பணிபுரிந்த நிறுவனம் ,  அயல் நாட்டிற்கு கட்டாய பணி மாற்றம் செய்கிறது.

நினைவு தவறிய தந்தையை, நித்தம் தவறாமல் நினைவில் நிறுத்தியிருக்கும் நாயகன்

தந்தையே முக்கியம் என்று வேறு நிறுவனத்தில் வேலை கிடைக்காமலே இப்பணியை துறக்கிறான்.

நீண்ட நாட்களாக அப்படியே இருக்கும் தந்தை , தம் துணைவியார் மறைவை பற்றி ஏதும் அறியாமலே இயற்கை எய்துகிறார்.

தந்தையின் மறைவு அளித்த சோகத்தை விட, அவர் தம் மனைவியின் மரணம் பற்றி ஏதும் அறியாமலே உயிர் நீத்த நிகழ்வு,

நாயகனை மீளாத் துயரில் ஆழ்த்துகிறது.

பீனிக்ஸ் பறவையாய் மீண்டு(ம்) எழுந்த ஸ்ரீனிவாசன் இன்று “Tigma Technologies என்ற பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.


தலைமை செயல் அதிகாரியாக வெளிவந்த அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் 10 நம்பிக்கை அளிக்கும் வியாபார நுண்ணறிவு (Business Intelligence) சேவை நிறுவனங்களில் ஒன்றாக டிக்மா நிறுவனத்தை , சிலிக்கான் இந்தியா என்ற சஞ்சிகை தேர்ந்தெடுப்பதற்கு மூல காரணமாகிறான். 


சிலிக்கான் இந்தியா நிறுவனத்திற்கு ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டி

என்ன சார் இப்படி கதையை முடிக்கலாமா என்று தயாரிப்பாளரை வினவுகிறார் இயக்குனர்.

திரையில் தோன்றும் நாயகரை போற்ற தெரிந்த பலருக்கு , தரையில் நம் கண் முன்னே தெரியும் ஸ்ரீனியை போன்ற பல நிஜ நாயகர்களை தெரிய வாய்ப்பில்லை.

செலவை பத்தி கவலை படாம இந்த கதையே படமா எடுங்க என்ற படி கிளம்பினார் தயாரிப்பாளர்.