ஞாயிறு, 14 நவம்பர், 2021

மெய்வழிச்சாலை

 தொடு சிகிச்சை வகுப்பில் எங்கள் ஆசான் திரு.உமர் பாருக் அவர்கள் வாயிலாக புதுக்கோட்டை அருகே இருக்கும் மெய்வழிச்சாலை என்ற இடத்தைப் பற்றித் தெரிய வந்தது.

அவர்அவ்வூரைப்பற்றிய விஷயங்களை அடுக்கிச் சொல்லச் சொல்ல அவ்விடத்தைப் பார்த்தே தீர வேண்டுமென்று உறுதி பூண்டேன்.

வாய்ப்பு கிடைத்ததென்னவோ 3 ஆண்டுகள் கழித்துதான்.

24 அக்டோபர் 2021நானும் என் குடும்பத்தினரும் மற்றும் நண்பர் செந்தில் & அவரது மனைவி நித்யா ஆகியோர் விஜயம் செய்தோம்.

புதுக்கோட்டையை அடுத்த சித்தன்ன வாசலைத் தாண்டினால், மகிழ்வுந்து பயணத்தில் 15 நிமிடங்களில் வருகிறது அவ்வூர்.

உள்ளே நுழையும்போதே கண்ணில் படுவது, அந்த வாழ்வியலை ஏற்றுக்கொண்ட ஆண்கள் (சிறுவர் உட்பட) தலையில் சீக்கிய மக்களைப் போல் முண்டாசு கட்டிக்கொள்வதும், பெண்கள் முழுமையாக முக்காடு அணிந்து கொள்வதும்தான்.

அங்கு கடந்த 21 வருடங்களாக வசித்துவரும் சாலை பொன்.சுசீலா அவர்கள் எங்களை வரவேற்றார்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.  அரசின் கல்வித் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

அவரின் விடுதியை சென்றடைந்த நேரம் பிற்பகல் 2 மணியைத் தாண்டி இருந்ததால் அவரும் அவரது தோழியாரும் முதற்காரியமாகச் செய்தது எங்களுக்கு அமுது படைத்தது தான்.

மணி ஆயிடுச்சில்ல, பசியோடு வந்திருப்பீங்க, மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம்,” என்றார்.

என் நினைவுக்கு வந்தது என்னவோ அதிதி தேவோ பவ

ஆனால் இவரது மறுமொழி வேறு மாதிரி இருக்கிறது.

மெய்வழிச் சாலையில் உள்ள என் விடுதிக்கு வருபவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பதை என் கடமையாகக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்”.

அப்படி என்ன இருக்கிறது மெய்வழிச்சாலையில் ?

நம் அறிவுக்குத் தெரிந்தவரை இது சுற்றுலாத் தலமோ; 8-ஆம் அதிசயமோ இல்லை.

ஆயினும் இது தனித்துவமானதாகத்தான் இருக்கிறது.

நாங்கள் அனைவரும் கேள்விக் கணைகளை தொடுக்க தெளிவாக விடையளிக்கத் துவங்கினார் அவர்.

அது என்னங்க மெய்வழிச்சாலை?

மரணத்தில் இரண்டுவகை இருப்பதையும், மரணத்திற்குப் பின்னும் மனிதனுக்கு மட்டும் வாழ்வு இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டவர்களுக்கு இது ஒரு புண்ணியத் தலம்.

திருப்புத்தூரில் தொடங்கப்பெற்று, இராஜகம்பீரத்திலும் மதுரையிலும் வளர்ச்சி பெற்ற மெய்வழிச் சபை 1942-லிருந்து புதுக்கோட்டையில் இயங்குகிறது. அச்சபை அமைந்திருக்கும் ஊர் மெய்வழிச்சாலை.

இச்சபையை நிறுவிய குருநாதரை நாங்கள் மெய்வழி ஆண்டவர்கள் என்றே குறிப்பிடுவோம். அவர் இயற்பெயர் திரு.காதர் பாட்சா என்பது.

மெய்வழி ஆண்டவர்களுக்கு மெய்ஞ்ஞான குருவாக அமைந்த தனிகை மணிப்பிரான் அவர்களே வடலூர் வள்ளல்பிரானுக்கும் குருவாக இருந்தவர் என்பது இவர் அளித்த சிறப்புத் தகவல்.

ஊருக்கு நடுவே அமைந்துள்ள பொன்னரங்க தேவாலயத்தைச் சுற்றி அமைக்கப்பெற்று, வேலியிடப்பெற்ற எல்லைக்குள் அமைந்திருக்கும் எளிமையான கூரைவேய்ந்த விடுதிகளில் இப்போதும் கழிப்பறை இல்லை; (1942-ல் ஆரம்பகாலத்தில் கட்டப்பெற்ற விடுதிகளுக்கு கதவும் இல்லை. தரைகூட சிமெண்ட் பூச்சு இல்லாதிருந்துள்ளது.



இவையெல்லாம் இயல்பான, எளிமையான வாழ்வு கருதி மெய்வழி ஆண்டவர்களால் வகுக்கப்பெற்ற வாழ்வியல் சட்டங்கள்.

துறவறம் பூண்டோ காட்டில் கடுமையான தவம் செய்தோ நாம் முக்தி அடைய வேண்டியதில்லை. மரணத்திலிருந்து நம்மை மீட்கும் செயலுடைய ஒரு மெய்யான குருபிரானின் (அவரே மெய்வழி ஆண்டவர்கள்!) பெருந்தயவினால் மட்டுமே மரணமிலாப் பெருவாழ்வு இங்கு கிடைக்கிறது. இதைத்தான் அருட்பெருஞ் சோதியின் தனிப்பெருங் கருணை என்கிறார் வள்ளலார்.

சர்வ சன்னதங்களையும் தங்கள் திருக்கரங்களில் (உள்ளங்கைகளில்) தரித்தவராய், ஊண் உறக்கமற்றவராய், மூக்குக்கு வெளியே மூச்சோடா தவம் உடையவராய்த் திருமேனியுடன் வாழ்ந்து, இன்று வான்கன்னிவிராட் தவத்திற்கு ஏகியிருக்கும் மெய்வழி ஆண்டவர்களைத் தெய்வமென ஏற்றுக்கொண்டு - அவர்கள் மட்டுமே தெய்வம் என நம்பி வழிபடுவோருக்கு இன்றும் மரணமிலாப் பெருவாழ்வு, நாம் நம்முடைய ஊனக்கண்களால் காணக்கூடிய அளவிற்கு சாகாக்கலை அடையாளங்களுடன் கிடைக்கிறது.



இச்செய்திகளை இவ்வளவு உறுதியாக உங்களால் எப்படிக் கூற முடிகிறது?

மரணமிலாப் பெருவாழ்வு எங்கே, எப்படிக் கிடைக்கும் என்று ஆய்ந்தலைந்த எனக்கு, என் ஆராய்ச்சியின் முடிவாகக் கிடைத்தவைகளைத்தான் நான் அறிந்து கொண்டவைகளைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

மெய்வழி ஆண்டவர்களை வழிபட்டு அடக்கமானவர்களைக் காணும் வாய்ப்பிருந்தால் நீங்களும் இவற்றை இன்றும் காணலாம்.

சாலையைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

நான் தான், எனக்கு மரணமிலாப் பெருவாழ்வு வேண்டும் என்று ஆய்ந்தேன் அதற்காக அலைந்தேன் என்று சொன்னேனே! காலங்காலமாக இருந்துவரும் இச்செயல், நான் பிறவி எடுத்திருக்கும் இந்தக் காலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் மெய்வழியில் எளிமையாகவும், நிச்சயமாகவும் கிடைக்கிறது என்பதை என் முனைவர் பட்டப் படிப்பின் வழிகாட்டியாக அமைந்த டாக்டர்.அரங்க.ராமலிங்கம் அவர்கள் கூறக்கேட்டு நான் மெய்வழியில் நுழைந்தேன் மெய்வழிச்சாலைக்கு வந்தேன். உண்மைகளை அறிந்தேன்.

தற்போது மெய்வழியில் சேர மக்களுக்குத் தகுதித் தேர்வு ஏதேனும் உண்டா?

மெய்வழி ஆண்டவர்கள் தூலத் திருமேனியுடன் விளங்கியபோது, (அரசாங்கத்தில் முறையாகப் பதிவு செய்யப்பெற்ற) இச்சபையில் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தளித்து, சத்தியபிராமாணம் செய்து 5049-பேர்கள் அங்கமாகிக் கொண்டார்கள்.

ஆனால், இன்றோ அதுபோன்ற சம்பிரதாயங்கள் இல்லை. சுய விருப்பத்தின்பேரில் எவர் வேண்டுமானாலும் மெய்வழி ஆண்டவர்களை நம்பி தெய்வம் என ஏற்று, வழிபட்டு, மரணமிலாப் பெருவாழ்வடையலாம். எங்களுக்கென்று ஒரு சில வாழ்வியல் முறைகள் உண்டு அவற்றைக் கடைபிடிக்க வேண்டுமென்பது நியதி.

மெய்வழிச்சாலையின் வாழ்வியல் முறைகள் என்பது என்ன?

பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சி நடத்தல், அசைவ உணவு உண்ணாதிருத்தல் புகைபிடிக்காதிருத்தல், திரைப்படம் காணாதிருத்தல், அரசியலில் ஈடுபடாதிருத்தல், ஆகியன இகவாழ்வு தொடர்பான பத்தியங்கள்.

ஆலய வணக்க/வழிபாடுகளில் கலந்து கொள்ளுதல், மூலமந்திரம் கூறுதல், தெய்வ நூல்களை ஓதுதல் போன்ற ஒருசில நியதிகள் பரவாழ்வு பற்றியவை. எமன் கைவசப்பட்டு நாறிச்சாகும் சாவிற்குப் போகக் கூடாதென்பது மிக முக்கிய விதி. ஆனால் மெய்வழி ஆண்டவர்களின் பெருந்தயவால் மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர்களின் அடக்கத்தில் கட்டாயம் கலந்து கொள்வோம்.

இறந்வர் யார்? மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர் யார்? என்பதைச் சற்று விளக்குங்களேன்.

சுருக்கமாகச் சொன்னால் மறுபிறப்பைத் தவிர்க்க இறைவனோடு ஐக்கியமாதல் என்ற ஒரு செயல் இருக்கிறது. இதை அடைதலே மரணமிலாப் பெருவாழ்வடைதல். பிறப்பு நம் விருப்பத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இறப்பும் அதைத் தவிர்ப்பதும் நம் கைகளில் இருக்கிறது. பிறந்தால் இறக்க வேண்டும்; இறக்காதிருந்தால் மீண்டும் பிறக்காதிருக்கலாம். இறவா நிலை அடைந்தவர்களின் உடல் துர்நாற்றம் வீசாது , நலம்குலையாது, விறைக்காது, (குளிர்சாதனப் பெட்டியில் இவர்களை வைக்கவே கூடாது) மாறாக முகத்தில் மஞ்சள் நிற அழகு பூக்கும், உடலில் இதமான சூடு இருக்கும், வியர்க்கும். ஆலயத்திலிருந்து கொண்டுவந்து வழங்கப்பெற்ற புனித தீர்த்தம் அவர்கள் வாயின் மூலம் உள்ளே இறங்கும். எல்லாவற்றிற்கும் முதலாக அவர்களின் உயிர் உடலைவிட்டு வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கும்.

இப்படி அடங்குவதைத்தான் திருவள்ளுவர்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்  - என்கிறார்.

இப்படி அடக்கமானவர்களைத் தீயிட்டு எரிக்கக்கூடாது என்பது எங்கள் தெய்வ சட்டம்.

அப்படியா?

பரனளிக்கும் தேகமிது சுடுவது அபராதம்என இவர்களுக்காகத்தான் வள்ளலார்கூட பாடிஇருக்கிறாரே.

இறுதியாகத் தாங்கள் கூறவிரும்புவது?

இந்த மெய்வழிச்சாலை உங்கள் கண்களில் எளிமையான ஊராகத் தோற்றம் அளிக்கலாம். ஆனால், இது “wonder land“ என்பது மெய்வழியைப் புரிந்து கொண்டவர்களுக்கு விளங்கும்.

இங்கு சாதி, மத பேதம் இல்லை.

மொழி, இனம், கலாச்சாரம், பாகுபாடு இல்லை..

பணம், படிப்பு, பதவி இவற்றால் ஏற்றத்தாழ்வில்லை

ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்ற திருமூலரின் திருவாக்கைச் செயலில் கொண்டிருக்கும் ஊர் இவ்வூர்.

மெய்வழி மக்களுக்கெனத் திருவிழாக்கள் உண்டு. கொடியேற்றும் நிகழ்வுண்டு. அலாதியான சடங்குகளுடன்கூடிய திருமண வைபவம் உண்டு.

இது தனி மனித ஒழுக்கத்தைக் கற்பிக்கும் இடம்.

சத்தியமான செயலுடைய இறைநெறியில் மனிதன் வாழ்ந்தானா இல்லையா என்பதை அவனது மரணத்தைக் கொண்டு நிரூபிக்கும் ஊர் இவ்வூர்.

ஆச்சரியமாக உள்ளது, அல்லவா?

இந்தக் கலியுகத்தில் ஜாதி, மத பேதமின்றி மனித நேயம் போற்றும் ஆன்மீகத் தலத்திற்கு உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து வாருங்களேன். நிச்சயமான ஆன்மீகப் பலனை அவர்களும் அடையட்டுமே என்று அழைப்பு விடுக்கிறார் அவர்.



அவரது அழைப்பை ஏற்று ஆன்மீகத்தில் விருப்பம்/நாட்டம் உள்ளவர்கள் ஒருமுறை மெய்வழிச்சாலைக்குச் சென்று பாருங்களேன்.

அந்த ஊர் நிச்சயம் உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.




மெய்வழிச் சாலையின் வாழ்வியலை ஏற்றக் கொண்டு அம்முறைப் படி திருமணம் செய்து கொண்ட எனது நண்பர் மணிவண்ணனும் அவரது துணைவியாரும்

 

வெள்ளி, 29 அக்டோபர், 2021

46 ஆண்டு கால இடைவெளி

90 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு சிதிலம் அடைந்து கொண்டிருந்த எங்கள் தஞ்சை இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட விரும்பி, வேலைகளை துவங்கினோம் 2017ம் ஆண்டு இறுதியில்.

இல்லம் கட்டி முடிக்கும்முன் தஞ்சையை அடுத்த வல்லத்தில் இருக்கும் எங்கள் குல தெய்வ கோவிலை புதுப்பித்து பூஜை செய்ய ஆவல் கொண்டேன்.



           குலதெய்வம் - நந்தவனத்து வீரனார்         

என் சித்தப்பா திரு.சிவகுமார் அவர்களிடம் இதனை ஒரு தகவலாய் தெரிவித்து விட்டு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

சில நாட்கள் கழித்து என்னை அலைபேசியில் அழைத்தார் அவர்.

உறவினர்கள் அனைவரும் இணைந்து குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டுமென்ற அவரது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவோம் என்றார்.

18–ஏப்ரல்-2018 என்று நாள் குறித்துக் கொடுக்கப்பட்டது எங்கள் பாட்டனாரால்.

அனைத்து உறவினர்களுக்கும் பூஜையை பற்றிய தகவல் தெரிவிப்பதும், கோவில் பணிக்கான பணம் வசூலிக்கும் பொறுப்பும் எனக்கும் எனது ஒன்று விட்ட சகோதரர் சரவணன் அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.

ஒவ்வொரு உறவினரையும் அலைபேசியில் அழைத்து பேசும்போது தான்,

எங்கள் தலைமுறையில் எனக்கு தெரிந்திராத பல உறவினர்கள் அறிமுகமானார்கள்.

பூஜைக்காக முன் வந்த ஒவ்வொருவரின் ஆர்வத்தையும்,பங்களிப்பையும் என்னால் எழுத்தில் வடிக்க இயலாது.

மறைந்த விளையாட்டு வீரர் திரு. VB சந்திரசேகருடன் மாநில அளவில் மட்டைப் பந்து விளையாடிய சித்தப்பா, ஒன்று விட்ட அத்தை /  மாமா என்று தூரத்து உறவாய் இருந்தவர்கள்,

ஒன்றும் விடாமல் நெருங்கிப் பழகும் அளவிற்கு வந்தார்கள்.

அலைபேசியில் குழுவாக கூடி அலசினோம் / பேசினோம் நிகழ்ச்சி நிரல்களை.

நந்தவனத்து வீரனார் என்ற குல தெய்வத்தின் பெயருக்கேற்ப கோவிலை நந்தவனம் போல் மாற்றிட வேண்டுமென தனது ஆவலை தெரிவித்தார் எங்கள் தாத்தா .

அப்பணியை ஓவிய கலையில் சிறந்தவரான சித்தப்பா (திரு)நாவுக்கரசு அவர்கள் ஏற்றுக்கொண்டார்.


உணவு ஏற்பாடுகளை சித்தப்பா அம்பிகாபதி அவர்கள் மேற்கொண்டார்.

கோவில் அலங்காரம் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கும் பொறுப்பை சகோதரர் சரவணன் மேற்கொண்டார்.

உறவினர்கள் அனைவரும் தங்கள் சக்திற்கேற்ப தயக்கமின்றி பங்களிப்பை செய்தார்கள்.

நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பானது, கோவிலை சுற்றி ஓடுகள்(அதுதாங்க Tiles ன்னு கூகுள் சொல்லுது) பதிக்கும் பணியும் , வர்ணம் அடிக்கும் வேலையும்.

பூஜை நாளும் வந்தது.

அதிகாலை 5.30 மணிக்கே குழுமி விட்டோம்.

சுமார் இரண்டு மாதங்களாக தொலைபேசியில் பேசி வந்த பல குரல்களுக்கு அன்று உருவம் கண்டு மகிழ்ந்தோம். 

களிமண் / சந்தனம் கொண்டு சாமி சிலை செய்தல் மலர் மாலைகளை கொண்டு கோவிலை அலங்கரித்தல் போன்ற வேலைகளை முடித்தோம்.

பெண்களும் பூஜைக்கு வேண்டிய பிரசாதங்களையும் இன்ன பிற இத்யாதிகளையும் தாமதமின்றி செய்து கொடுத்தார்கள்.

உறவினர்களிலேயே மூத்தவரான 90 அகவை நிரம்பிய திரு.நடராஜன் தாத்தா அவர்களும் அவரது துணைவியாரும் அதிகாலையிலேயே தம்பதி சகிதமாய் அனைவரையும் வரவேற்றது எங்கள் இதயத்தை நெகிழச் செய்தது.

    

பாட்டனார் பூஜையை சிறப்பாக செய்து கொடுத்தார்.

அன்றைய நாளில் குல தெய்வ பூஜையை ஒரு திருவிழாவாகவே நாங்கள் கொண்டாடினோம் என்றால் அது மிகையில்லை.

1972ல் தான் எங்கள் முன்னோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமரிசையாக நடத்தியிருந்தார்கள்.






                        முன்னோர்கள் அன்றும்

அதன் பிறகு தனித்தனி குடும்பமாகவே பூஜை நடைபெற்று வந்தது.

46 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2018ம் ஆண்டில் தான்

குல தெய்வ பூஜை விமரிசையாக நடைபெற்றது.

சும்மாவா பின்னே, பூஜை அன்று வந்திருந்த உறவினர்களின் எண்ணிக்கை 83 என்பது எங்களுக்கு மிகப் பெரும் சாதனையே.



                        இந்த தலைமுறை இன்றும்

இனி குல தெய்வ பூஜை ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நடைபெற வேண்டுமென்று

பாட்டனார் அவர்கள் கூறியதை நாங்கள் ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறோம்.

இந்த பூஜை ஒவ்வோர் ஆண்டும் நிச்சயம் தொடர வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஆயினும் இதற்கு மூல காரணமாயிருந்த தாத்தா அதே ஆண்டு டிசம்பரில் மறைந்தார் என்பது மனதை பிழியும் செய்தியே.

இதனை மீண்டும் துவக்கி வைத்த மூவரில் நானும் ஒருவன் என்பது எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதை விட மனநிறைவு என்ற சொல்லே சால பொருந்தும்.

சனி, 11 செப்டம்பர், 2021

திருக்குறள் : 595

பரதம் ஓர் உன்னதமான கலை என்பதில் நம்மில் பலருக்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

அந்த நம்மில்என் மனைவியும் ஒருவர் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை.

சிறு வயதிலேயே எங்கள் மகளை பரதம் பயில ஏற்பாடு செய்தார் என் மனைவி.

சுமார் 7-8 வருடங்களுக்கும் மேலாக பரதம் பயின்ற பாரதிக்கு ,

2016 ல் அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டோம்.

நிகழ்சிக்கு காவல் துறையின் ஓர் உயர்ந்த பதவியில் இருக்கும் IPS அதிகாரியான எங்கள் குடும்ப நண்பரை தலைமை வகிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

மறு பேச்சின்றி ஒப்புக் கொண்டார் அந்த நேர்மையான மனிதர்.

மேலும் சிறப்பு விருந்தினராக மக்கள் பணியில் நல்ல பெயரெடுத்திருக்கும் திரு.சைலேந்திர பாபு அவர்களை அழைக்க வேண்டுமென்ற என் ஆசையை நண்பரிடம் பகிர்ந்தேன்.

துறை ரீதியாக மட்டுமல்லாது , இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் நம் DGP அவர்களின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

சைலேந்திர பாபு அவர்களை சந்திக்க செல்லுமுன் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

1999ம் ஆண்டு, கடலூர் நகரில் துணை ஆய்வாளராக இருந்த என் நண்பர் கிட்டு அவர்களின் திருமண வரவேற்பு.

மாலையில் முதல் நபராய் முன்வரிசையில் இடம் பிடித்து அமர்ந்து விட்டேன்.

பல உயர் அதிகாரிகள் வந்த வண்ணம் இருந்தாலும் கட்டுமஸ்தான ஒருவர் எனக்கு அடுத்த இருகையில் அமர்ந்தார்.

அப்போது ஒரு காவலர் என்னிடம் ஓடி வந்து நெறிமுறையோடு அமருமாறு சொல்லிகொண்டிருக்கும் போதே என்னருகில் இருந்த அதிகாரி , 

அவர் விருப்பப்படி அமரட்டும் என்ன தவறு என்று காவலரை போகச் சொன்னார்.

அப்படி பொது இடத்தில் கண்ணியத்தோடு நடந்து கொண்டவர் அன்றைக்கு கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த திரு.சைலேந்திர பாபு அவர்கள்.




DGP அவர்களை அவரது அலுவலகத்தில் என் குடும்ப சகிதமாக சந்தித்தேன் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் பெறுவதற்காக.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.

அவர் சமீபத்தில் விஜயம் செய்திருந்த அமெரிக்க அனுபவத்தை பற்றி ஆர்வத்துடன் விவரித்துக் கொண்டிருந்தார்.

சிகாகோவின் நகரின் உயரமான கட்டிடத்தின் மீதிருந்து Sky Diving” (தமிழாக்கம் அறிந்தோர் சொல்லுங்கள்) செய்யும் அவரது புகைப்படத்தை எனக்கு காணும் போதே உதறல் எடுத்தது.

சைலேந்திர பாபு அவர்களுக்கோ இரு முறை மட்டுமே sky diving செய்ய வாய்ப்பு கிட்டியது என்றும் இன்னும் சில முறை கிடைக்கவில்லை என்ற வருத்தம் அப்போதும் தீராமலே இருந்தது.

பேச்சினூடே அவரது அலைபேசி சிணுங்கியது.

அழைத்தவர் மிதிவண்டி ஓட்டுவோர் சங்கத்தின் உறுப்பினர் போலும்.

சென்னையிலிருந்து மாமல்லர்புரம் வரை மறுநாள் செல்வதைப் பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இந்த வயதிலும் மனிதர் உடலை கட்டுக் கோப்பாக தான் வைத்திருக்கிறார்.

மெல்ல மெல்ல விஷயத்திற்கு வந்தேன்.

சார் என் மகளின் நடன அரங்கேற்றத்திற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பிக்க இயலுமா ...?

எந்த தேதியில் வைத்திருக்கிறீர்கள் குமார் .....

பிப்ரவரி 16 சார்.

என் மகளை நோக்கி திரும்பினார்.

ஏனம்மா உனக்கு பரதம் தவிர வேறு என்ன கலைகள் தெரியும். மேற்கத்திய நடனம் எதுவும் கற்றிருக்கிறாயா என்று கேட்டு விட்டு அவரது வருகைப் பற்றி மறுநாள் தெரிவிப்பதாக சொன்னார்.

மறுநாள் அழைத்தேன்.

குமார் என்னை அழைத்தமைக்கு நன்றி. ஆனாலும் எனக்கு பரதம் பற்றி எதுவும் தெரியாதே. இதுவே எனக்கு நன்கு தெரிந்த மேற்கத்திய நடனம் என்றால் நிச்சயம் வருவேன்.

எதுவுமே தெரியாத பரதம் பற்றிய நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக வருவதற்கு எனக்கு தகுதியில்லை. அறியாத ஒன்றைப் பற்றி மேடையில் பேசுவதும் பொருத்தமாயிராது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இதை கேட்கையில் எனக்கு ஆச்சர்யத்துடன், அவர் மீதான மதிப்பும் மேலும் கூடத்தான் செய்தது.

தகுதியே இல்லையென்றாலும் மேடை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அலையும் மனிதர்களுக்கு இடையில் தகுதியுள்ள இவரை போன்றோர் என்றும் வேறுபட்டவர்களே.

சைலேந்திர பாபு அவர்கள் உடல் உயரத்தில், காவல் துறையின் உச்ச பதவியில் மட்டுமல்ல , குணத்தாலும் இமய மலையாகத் தான் திகழ்கிறார்.


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.