சனி, 13 ஜனவரி, 2018

நடமாடும் நூலகம்

நூலகங்கள் பற்றி ஒரு பார்வை பாப்போம், வாருங்கள் நண்பர்களே.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் கரந்தை நூலகத்தில் உறுப்பினராய் சேர்ந்தது எனக்கு இன்றும் பசுமரத்து ஆணியாய் மனதில் இருக்கிறது.

உறுப்பினர் எண்  1248 எனது.

அப்போது தான் சாண்டில்யங்களும், சுஜாதாக்களும், பட்டுகோட்டை பிரபாகர்களும் , லக்ஷ்மிக்களும் எனக்கு அறிமுகமான நேரம் அது, வாண்டு மாமாவை தவிர.

பொன்னியின் செல்வன் எனக்கு அறிமுகமானது 1987 தான். அதை இன்றும் படித்து மகிழும் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு ஒரு தலை செருக்கே.

சரி நண்பர்களே விஷயத்திற்கு வரும் முன், நூலங்கள் பற்றி நான் இணையத்தில் ஆராய்ந்த பொது கிடைத்ததென்னவோ கிழே உள்ள தகவல் தான்.

சுமார் கி.மு 3500 – 4000 களில், Ancient Library of Alexandria” என்று  எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் உலகின் முதல் மற்றும் மிகப் பெரிய நூலகம் உருவாக்கப் பட்டதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்த பெஞ்சமின் பிராங்க்ளின் தான் 1731-ல் பிறர் பயன்பாட்டிற்கான நூலகம் (Lending Library) ஒன்றை முதன் முதலில் துவங்கிய நபராக அறியப் படுகிறார்.

சுமார்  100 ஆண்டுகளுக்கு முன்பு நூலகங்கள் எப்படி இருந்தன தெரியுமா?

நூலகங்கள் குறித்து, தமிழ் பல்கலை கழகத்தில் பணியாற்றி, அண்மையில் மறைந்த, திரு பத்மநாபன் என்பவர் எனது பாட்டனாரை 1993ம் ஆண்டு, ஜூன் மாதம் பேட்டி கண்டு, ஒலி நாடாவில் பதிவு செய்திருக்கும் செய்திகளைப் பார்ப்போம் வாருங்கள்.

1920-களில் நூலகங்கள் என்பன, நடமாடும் வடிவத்திலேயே இருந்திருக்கின்றன. சீருந்து (VAN) ஒன்றில் நூல்கள் நிரப்பப் பட்டு, இரு புறமும் பதாகைகள் கட்டப் பட்டு ஓட்டுனர் ஊர்தியை ஓட்ட , நூலகங்கள் பற்றி பிரசாரம் செய்ய எட்டாம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியரை கொண்டு இவ்வாகனம் இயக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு தாலுக்கா மட்டுமே சென்று வரும்.

பெரும்பாலும் கதை புத்தங்களை சுமந்து செல்லும் இந்த நடமாடும் நூலகம், செல்லும் வழியில் நூல்களை முதலில் விநியோகம் செய்தபடி செல்லும்.

திரும்பி வரும் வழியில் நூல்களை மீண்டும் பெற்றுக் கொள்ளும்.

1930களில் முதல் நடமாடும் நூலகம் என்பது, மன்னார்குடியை சுற்றி உள்ள 95 கிராமங்களை சுற்றி வந்ததாகவே தெரிகிறது.

தஞ்சையைப் பொறுத்த வரை , பனகல் கட்டிடத்திலிருந்து காலையில் கிளம்பும் நூலகம், மாலையில் அதே கட்டிடத்திற்கு வந்து சேரும்.

இதன் வாகன ஓட்டுனரின் பெயர் வடிவேலு. பிரச்சாரத்திற்கு உதவியவர் தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த திரு. T.V.ரத்தினசாமி என்பவராவார். 

இவர் நந்தனார் திரை படத்தில் நடித்தவர்(தண்டபாணி தேசிகர் படம் அல்ல).

1920களில் துவங்கிய இவரது பணி, சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் படங்களில் நடிக்க சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இவருக்கு பிறகு மராட்டா பள்ளியில் இருந்து ஓர் ஆசிரியர் இப்பணியை செய்தார். 

பெரும்பாலான ஆசிரியர்கள் இப்பணியினை விரும்பி செய்ததாகத் தெரியவில்லை. தங்களது மேல் அதிகாரியின் கட்டளையின் பேரிலேயே இவர்கள் செய்து வந்தனர்.

கரந்தையிலிருந்து புறப்படும் வாகனங்கள் பள்ளிஅக்ரஹாரம் வழியாக அம்மன்பேட்டை, கண்டியூர் மற்றும் திருவையாறு வரை சென்றிருக்கின்றன. மறுபுறம்  அய்யம்பேட்டை , பாபநாசம் வரையிலும் கூட உண்டு.

மேலும் ஒரு வாகனம் வல்லம் வரை சென்றாலும், சாலையின் மோசமான நிலை காரணமாக, வடுவூர் வரை செல்லவில்லை ஆனால் செங்கிப்பட்டி வரை சென்று வந்திருக்கிறது.

இந்த சீருந்தானது முன்புறம் இயந்திரத்தை கொண்டது. ஓட்டுனர் அருகில் பிரச்சாராம் செய்பவர் அமர்ந்து கொள்வர். தகரத்தை கொண்டு பின் புறம் மூடப் பட்டு இருக்கும்.

Gramophone record-ஐ சுமந்து செல்லும் இவ்வாகனத்தில் பாடல்களை ஒலிக்க விடுவதன் மூலம் தன் கவனத்தை ஈர்க்கும். 

இவை பெரும்பாலும் பக்தி பாடல்களே.

இந்த நடமாடும் நூலகப் பணியானது, சுதந்திரத்திற்கு பின்னர் நிறுத்தப் பட்டிருக்கிறது.  1970-இல் மீண்டும் துவங்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் நிதி சுமையின் காரணமாக, சுமார் 10 ஆண்டுகளிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

எனது தந்தையும் நூலகராக பணி புரிந்த காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை, எனக்கு புத்தகங்கள் மீது மிகவும் பிரியம்.

ஒரு சிறிய நூலகமே வீட்டில் வைத்திருக்கும் நான், வருடா வருடம் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு சென்று நூல்கள் வாங்க தவறுவதில்லை கடந்த ஆண்டுகளாக.

என்ன தான் காகிதங்களிருந்து நூல்கள் மடி கனிக்கு சென்று தற்போது கிண்டில் (kindle) என விஞ்ஞான வளர்ச்சி அடைத்தாலும், மாபெரும் எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை கூறியது நினைவிற்கு வருகிறது.

            புத்தகங்கள் சாவதில்லை, அவைகள் வடிவம் மாறுகின்றன.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

முத்தையா எனும் கவிஞன்


ஆண்டு 1981, 17 அக்டோபர். அன்று சிகாகோ தமிழ் சங்கத்திலிருந்து அந்த செய்தி வந்த போது , தமிழ் நாடே சோகத்தில் மூழ்கியது. ஆம், அன்று தான் சிகாகோவில் தமிழ் சங்க மாநாட்டில் பங்கேற்க சென்ற போது கவியரசு மறைந்தார். 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவரின் தமிழ் அறிவு இன்று தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பலரைவிட மேலானது என்றால் அதற்குமாற்று கருத்து இல்லை என்றே நினைக்கிறன்.   

அவர் நினைவாக கடந்த 16 ஆண்டுகளாய் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராஜா முத்தையா அரங்கில் விழா எடுக்கப் படுகிறது, திரு. S.P முத்துராமன் மற்றும் திரு. AVM  சரவணன், நல்லி குப்புசாமி செட்டியார் மற்றும் பலரால். இந்த ஆண்டு Oct 21 (வார இறுதி என்பதை கணக்கில் கொண்டு ) அதே அரங்கில் நடைபெற்றது. இதை கண்டு களிக்க எனக்கு அழைப்பும் கிட்டியது. எனது தந்தையுடன் சென்றிருந்தேன்.

நிகழ்ச்சியில் கண்ணதாசன் புகழ் மட்டும் பாடப் படவில்லை, கட்டுரை போட்டியில் வென்ற மாணவ மாணவியர்க்கும் கவியரசு நினைவாய் பரிசுகள் வழங்கப் பட்டன.  வெற்றி பெற்ற மாணவர்களில் ஒருவர் புகழ் பெற்ற வழக்குரைஞர் திருமதி. சுமதி அவர்களின் மகள். தாய் போன்றே மிக நன்றாக பேசினார்.

பின்னர் பேசிய இருவரின் சாராம்சத்தை இங்கு கூற விரும்புகிறேன்.

திரு. நல்லி குப்புசாமி தி.நகரில் கண்ணதாசன் சிலை அமைந்த கதை கூறினார்.


சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு திரை உலகினர் கவி அரசுவிற்கு ஒரு சிலை நிறுவ ஆசை பட்ட பொது, மெல்லிசை மன்னர் தமிழ் நாடு எங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேர்த்து வேண்டியவைகளை செய்தார். அப்போதைய முதல் அமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் அனுமதி பெற சென்ற பொது,இதை அரசு விழாவாக எடுப்போம் என்று அவரே முன்வந்து செய்தார் என்பது கூடுதல் தகவல்.



அடுத்து பேசிய பட்டி மன்ற பேச்சளார் மற்றும் வழக்குரைஞர் திருமதி. சுமதி அவர்கள் தான் மற்ற எல்லோரையும் விட மிகவும் கவர்ந்தார். அவர் கூறியதன் சாராம்சம் கீழே.

கண்ணதாசன்  நிகழ்ச்சி என்றால் அங்கு “புல்லாங்குழல் கொடுத்த”  பாடல் இன்றி இசை நிகழ்ச்சி தொடங்குவதில்லை என்றார். அப்பாடலின் முதல் மூன்று வரிகளை எடுத்து விளக்கம் சொன்னார் திருமதி. சுமதி.  நான் “வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே” என்ற மூன்றாம் வரியை மட்டும் எடுக்கிறேன். 

கங்கையில் வண்டுகள் எங்கிருந்து வந்தன... ?

மகா பாரதத்தில் , பீமன் பலமுடையவன் மட்டுமல்ல, நீச்சலில் அதிக ஆர்வம் கொண்டவன். தினமும் கங்கையில் குதித்து, ஒரு கரையிலிருந்து மறு கரை வரை அனாயசமாக நீந்துபவன். ஒரு நாள் இதை கவனித்த துரியோதனன் ஆற்றினுள்ளே பெரும் ஈட்டிகளை (அந்த நஞ்சு தடவப்பட்ட ஈட்டிகள் உதிரத்தில் மட்டுமே கரையும் தன்மை கொண்டவை ) பீமன் குதிக்கும் இடத்தில் ஆழ நட்டான், பீமனை கொல்லும் நோக்கில். இதை அறிந்த கண்ணன் பீமனுடன் கங்கை கரைக்கு வந்தது, பீமன் அறியா வண்ணம் ஈட்டிகள் புதைக்க பட்ட இடத்தில் மேல் வண்டுகளை நீர் மீது அமர விட்டான். தான் வழக்கமாக குதிக்கும் இடம், வண்டுகள் சூழ்ந்து இருந்ததால் இடம் மாறி குதித்து நீந்திய பீமனை , காப்பற்றியதாய் சொல்கிறது மகா பாரதம். இந்த நிகழ்ச்சியினையே அடிப்படையாய் கொண்டு “வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே” என்ற வரியை மட்டுமல்ல, இப்பாடல் முழுவதுமே கண்ணனின் அற்புதங்களை அடிப்படையாய் கொண்டே கண்ணதாசன் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் “ abstract “ என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள், மனதில் தோன்றும் (existing in thought or as an idea but not having a physical existence) எண்ணம் / யோசனைக்கு  எழுத்து  வடிவம் கொடுக்க இயலாமை. தமிழில் எனக்கு தோன்றுவது இல் பொருள் உவமை அணி. (சரியா / தவறா என தமிழ் ஆசான்கள் தான் கூற வேண்டும்) . அந்த இயலாமையே முறியடியத்து அனாயாசமாக சொற்களில் விளையாடுபவர் கவியரசு அவர்கள்.


உதாரணம் “ சுமதி என் சுந்தரி “ படத்தில் வரும் பொட்டு வைத்த முகமோ பாடல். அதில் ஒரு வரி.

கரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்


கடற்கரையிலிருந்து நாம் கடலினுள் வானத்தை பார்க்கும் போது  வானமும் கடலும் ஒரு புள்ளியில் (Horizon) சேருவது போல தோன்றும். கப்பலில் பயணம் செய்ய செய்ய அந்த புள்ளி மேலும் நீண்டு கொண்டே செல்லும் . கண்ணிற்கு தெரியும் அந்த புள்ளியை நெருங்க இயலாது. அதாவது, இருக்கும் ஆனா இருக்காது. பெண்களுக்கு இடை இருக்கும் ஆனா இருக்காது.  இதை தான் சிவாஜி ஜெயலலிதாவின் (இல்லாத) இடையை , வானும் கடலும் சேரும் புள்ளியை ஒப்பிட்டு பாடுகிறார். என்னே ஒரு ஒப்பீடு / கற்பனை பாருங்கள் நண்பர்களே.  

கவிஞரின் அத்திக்காய் பாடலிலிருந்து வீடு வரை உறவு பாடல் வரை நான் எத்தனையோ அவரின் வரிகளை மிகவும் ரசிப்பவன். இந்த உவமையை கேட்ட பின், எனக்கு கண்ணதாசன் பற்றிய மதிப்பு மேலும் பல மடங்கு கூடியது என்னவோ உண்மை.

ஆனாலும் எனக்கு ஓர் ஐயம் கவியரசுவின் பாலும் பழமும் படத்தில் வரும், “மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்” என்ற பாடல்  வரிகளில்.

மனதிலிருந்து தான் நினைவுகளே தோன்றும் என்ற போது, மனதாலும் (மற்றும்) நினைவாலும் தாயாக வேண்டும் என ஏன் கூறினார். எனது ஐயத்தை யாரேனும் தெளிவு படுத்துமாய் கேட்டுகொள்கிறேன்.

அவர் பேச்சை முடித்த பின்னர் இசை நிகழ்ச்சி துவங்கியது.

வழக்கம் போல்  “புல்லாங்குழல் கொடுத்த”  பாடலுடன் ஆரம்பம். நாங்கள் அரங்கிலிருந்து வெளியேறும்போது MSVன் சீடர் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” பாடலை பாட துவங்கினார்.

நடந்து வந்தது எனது வாகனத்தை நாங்கள் எடுத்து கொண்டு செல்லும் போது அந்த பாடலின் இறுதி வரிகள் ஒலித்துக்கொண்டு இருந்தன.

“நான் நிரந்தனமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை“ 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஐயர்’ஸ் கிச்சன்

ஆண்டு 2010. தேதி ஜனவரி 17. MGR-ன் பிறந்த நாள்.
இடம்  பெங்களூர்.
அன்று தான் நானும் எனது இனிய நண்பர் ஸ்ரீராம் என்கிற சுந்தரமும் இணைந்து தொழில் தொடங்கினோம். தொழில் ஒரு உணவு விடுதி.
பெயர் ஐயர்’ஸ் கிச்சன்.

சரி நண்பர்களே. புள்ளி விவரமாய் பேசுவதை விட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

எனது குடும்பமும் நண்பர் ஸ்ரீராம் குடும்பமும் ஒன்றாய் 2009 அக்டோபர் மாதம் திருப்பதி சென்று வந்தோம்.  பொதுவாகவே திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேரும் என்பார்கள். ஒத்த நிகழ்வென்றே நான் கருத வியாபாராம் செய்ய ஆயத்தமானோம். இரண்டு மாதம் இடம் தேடி ஸ்ரீராம் வீட்டிற்கு அடுத்த அடுமனை காலி செய்யப் பட நாங்கள் உரிமையாளரிடம் ஒரு வருட ஒப்பந்தம் செய்தோம். சுற்றுவட்டாரத்தில் வட மாநில மக்கள் அதிகம் இருப்பதை கண்டு (அவர்களுக்கு இட்லி/தோசை மற்றும் சாம்பார் என்றால் மிகவும் விருப்பம்) ஐயர்’ஸ் கிட்சன் என்று பெயரிட்டோம்.

நண்பர் ஸ்ரீராம் தனது துணைவியாருடன் :


எங்கள் யாருக்கும் முன் அனுபவம் இல்லை என்றாலும் திட்டமிட்டு பணிகளை செய்தோம்.  சமையல் பாத்திரங்கள் , மேசைகள் முதலானவைகளை புதிதாய் வாங்காமல் ஏற்கனவே பயன் படுத்தபட்டிருந்த பொருட்களை வாங்கினோம்.

எனது மனைவி திருமதி. கவிதா எப்போதும் ஒரு துடிப்போடு இருப்பவர். குறிப்பாக உணவு விடுதி என்றதும் மிகுந்த ஆர்வத்துடன் இறங்கினார். தலைமை சமையல்காராக நடிகர் ஜெயராமின் சித்தப்பா (பெயர் ஞாபகம் இல்லை) அமைந்தார். தோசை சுட ஒரு நபர் பரிமாறுபவர் என 2 – 3 ஆட்களை வேலைக்கு வைத்துக்கொண்டோம்.

தலைமை சமையல்காரர் மிக அருமையாக சமையல் செய்வார். அவர் போடும் குழம்பிக்கவே (Coffee) ஒரு கூட்டம் வரும் தினமும். ஆரம்பித்த முதல் நாளே அதிக கூட்டம் வந்தது. அதுவோ நாள் ஆக ஆக அதிகரித்தது, நாங்கள் மேலும் ஒரு நபரை பணியமர்த்தும் அளவிற்கு.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். 1. அருகினில் வேறு தமிழ் நாட்டு உணவு விடுதிகள் இல்லை. 2. உணவின் சுவை.
நாங்கள் பிரதி மாதம் சுமார் 15000 மேல் லாபம் பார்க்க துவங்கினோம். காலையில் ஸ்ரீராமும் மாலையில் நான்/எனது மனைவியும் வார நாட்களில் பார்த்துக்கொள்வது. வார இறுதிகளில் அனைவரும் காலை முதல் இரவு வரை இருப்பது என எழுதாத புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஜனவரி தொடங்கி சுமார் 5 – 6 மாத காலம் சென்று லாபம் வர துவங்கிய நேரம் அது. ஒரு நாள் இரவினில் நண்பர் ஸ்ரீராமும் அவரது துணைவியார் திருமதி. இந்துமதியும் கடையை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

இரவு சுமார் 9.15. கூட்டம் குறைந்த நேரம். மோட்டார் பைக்கில் வந்த இருவரில் ஒருவன் மட்டும் இறங்கி கடையின் முகப்பில் நின்று கொண்டான். பைக் ஒட்டி வந்தவன்  ஊர்தியை அணைக்கவில்லை. அது சீறிக்கொண்டே இருந்தது.  சற்றே ஐயமுற்ற  இந்துமதி ஸ்ரீராமிடம் எச்சரிக்கை தர அவர் கடையை மூட ஆயத்தமானார். அடுப்பு / மின் விளக்குகள் அணைக்கப்படுகையில் கடை வாசலில் நின்றிருதவன் சடாரென உள்ளே பாய்ந்து ஸ்ரீராம் கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு தாவினான் நண்பனின் வாகனத்தில்.

பின்னாலே துரத்திய எனது நண்பரை எச்சரித்து தனது கத்தியால் என நண்பரின் கழுத்தில் “X” , “Y” “Z” என்றெல்லாம் ஆங்கில எழுத்துக்களை கற்றுக்கொண்டும் மற்றும் எச்சரித்தும் அந்த திருடர்கள் இருவரும் பறந்துவிட்டனர். அப்போது போனது சுமார் ரூபாய் 10000 மட்டுமல்ல ஸ்ரீராமின் கை பேசியும் தான்.

நண்பர் ஸ்ரீராம் சற்று புத்தி கூர்மை உள்ளவர். கை பேசி திருட்டு போனால் அதன் வழி தடத்தை பின் பற்றி கண்டு பிடிப்பதற்கான வழி முறைகளை செய்து வைத்திருந்தார். எனவே திருடன் புதிய SIM CARDஐ மாற்றிய பொது எங்களால் கண்டு பிடிக்க முடிந்தது காவல் துறையின் உதவியுடன். உள்ளூர் திருடர்கள் என்பதால் நாங்கள் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டோம், அச்சத்தின் பேரில்.
எங்கள் பணமும் நண்பரின் கை பேசியும் மீண்டும் கிடைத்தன அவர்களுடன் சமரசம் பேசிய பிறகு. பொருட்கள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கு, புகார் திரும்ப பெற பட்ட மகிழ்ச்சி அந்த திருடர்களுக்கு.


அன்று நிறுத்திய வியாபார முயற்சி அதன் பிறகு நாங்கள் முயற்சிக்கவே இல்லை. 

சனி, 1 ஜூலை, 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும் (இறுதி பகுதி)

வாருங்கள் நண்பர்களே. எனது அமெரிக்க அனுபவத்தை பற்றி இந்த வாரத்துடன் நிறுத்திகொள்வோம்.

மாற்று திறனாளியாய் பிறந்தாலும் அமெரிக்காவில் தான் பிறக்க வேண்டும் என திரு. எஸ். வீ. சேகர் ஒரு தொலை காட்சி பேட்டியில் கூறியதாய் ஞாபகம். 

ஆம் நண்பர்களே, அது உண்மை தான்.  மாற்று திறனாளிகளுக்கு , குறிப்பாக சக்கர நாற்காலியில் வருவோர்க்கு மிகுந்த முன்னுரிமை உண்டு எவ்விடத்திலும்.  அவர்கள் பேருந்தில் ஏற வசதியாய் பேருந்தின் படி தானாக கீழே இறங்கி அந்த சக்கர நாற்காலியை பேருந்தினுள்ளே ஏற்றிக்கொள்ளும். பேருந்து ஓட்டுனர் (அங்கு நடத்துனர் இல்லை) முன் வந்து அந்த நாற்காலியை உள்ளே இருக்கும் இரும்பு கம்பத்தில் கட்டி விட்டு பின்னர் தான் ஊர்தியை நகர்த்துவார். இவை எல்லாம் முடியும் வரை மிக பொறுமையாய் இருப்பர் மக்கள்.

இவ்வளவு ஏன் நண்பர்களே, பெரு நகரங்களில் அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்.. ??) ஓட்டுனர் கூட தன் கையில் போக்குவரத்து விளக்கின் கட்டுபாட்டை தன்னிடம் வைத்திருப்பார், தான் செல்லும் இடமெல்லாம் வேகமாக செல்ல வேண்டுமென.  அந்த அளவிற்கு அங்கு மதிப்பு உயிருக்கு.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமும் தமக்கென ஒரு புனை பெயரை வைத்துகொள்ளும்.

நியூயார்க் எம்பயர் ஸ்டேட் எனவும், கலிபோர்னியா கோல்டன் ஸ்டேட் எனவும், நான் இருந்த விஸ்கான்சின் மாகாணம் டெய்ரி (பால் வள) மாகாணம் எனவும் அழைக்கப்படும். இதை தமது வாகனத்திலேயே அவர்கள் பதித்து விடுவார்கள் பெரும்பாலானோர்.

இது போன்று அங்கு உள்ள 50 மாகாணங்களும் ஒரு புனை பெயரை கொண்டுள்ளன என்றால் அமெரிக்கர்கள் தம்மை பற்றி எந்த அளவு பெருமை கொண்டவர்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு பீடிகை ஏன் நண்பர்களே, விஷயத்திற்கு வருவோம். என்ன தான் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும் அங்கு ஏனோ தெரியவில்லை, துப்பாக்கி வாங்குவது எளிது தான், கடைக்கு சென்று காய்கறி வாங்குவது போல.

அது போன்ற ஒரு துப்பாக்கியை கொண்டு தான்  இஞ்சின் ஆயில் ஊற்றிய பன்றி நிறத்தில் ஒருவனும், ரத்தமே முழுவதும் வெளுத்து போன நிறத்தில் ஒருவனும் எனது வாகனத்தை ஆளுக்கு ஒரு புறம் தட்டிக்கொண்டு இருந்தனர். வேறு வழியின்றி நான் எனது பக்கம் உள்ள கண்ணாடியை மட்டும் இறக்கினேன்.

பன்றியின் நிறத்தில் இருந்த அவன் சடாரென உள்ளே பாய்ந்து சாவியை உருவ முயன்றான். வாகனம் ஆயுத்த நிலையில் இருந்தமையால் அவனால் உருவ இயலவில்லை. இதை கண்ட என மனைவி அவனை இரு கரம் கூப்பி (என்னவோ இருவருக்கும் இந்திய கலாசாரம் தெரியும் என எண்ணி) ஐயோ ஐயோ என சொல்ல ஆரம்பித்தார். பின்னால் இருந்த என மூத்த மகள் அவன் மீது பாய்ந்து அவன் கரத்தை தட்டி விட முயன்றாள் தைரியமாய். 

இளைய மகளோ எனது இருக்கைக்கு கீழே ஒளிந்து கொண்டாள்.

இதற்கிடையே நான் பற்சக்கரத்தை (கியர்) இயக்கி வாகனத்தை நகர்த்த முயலும் பொது அவன் துப்பாக்கியை நீட்டினான் என மீது. அவர்கள் வந்த நோக்கம் எனக்கு புரிந்து விட்டது வழிப்பறி என.

எனவே அங்கு உடனே எனது பண பையை (மொழியாக்கம் purse என நினைக்கிறேன்) தூக்கி எறிந்து விட்டு ஊர்தியில் பறந்தோம். வழியிலேயே காவல் துறையை கை பேசியில் அழைத்தோம்.

அவர்கள் சொன்ன படி செல்லும் வழியில் ஓர் எரி பொருள் நிலையத்தில் காத்திருந்தோம். அந்த நிலையத்தை நடத்துபவர் ஒரு பாகிஸ்தானி. மிக நன்றாக உபசரித்தார் , என்னை போன்ற நிறைய பலி கடாக்களை கண்ட அனுபவத்தின் பேரில்.

காவலர்கள் வந்தனர். அவர்கள் கேட்ட கேள்வி திருடர்கள் உருவம் எப்படி இருந்தது, நான் பார்த்த துப்பாக்கியின் அளவு என்ன முதலானவை.

மறு நாள் அந்த காவலர் என்னை அழைத்து எனது பணப்பை கிடைத்து விட்டது என கூறி என்னை வந்து பெற்றுக் கொள்ள சொன்னார்.

அந்த ஊர் காவல் நிலையம் மிக சுத்தமாய் இருந்தது. காவலர் என்னுடைய பணப் பையை கொடுத்து கையோடு புகைப்படமும் எடுத்து கொண்டனர், சாட்சிக்காக.

திரும்பி வரும் போது தான் யோசித்தேன். நாங்கள் தப்பியது இறை அருள் தான் என்பதில் ஐயம் இல்லை , ஒரு வேலை அந்த நபர்கள் என்னையோ எனது மனைவியையோ சுட்டிருந்தால் எனது குழந்தைகளின் நிலை அந்த இருட்டில் மட்டுமல்ல , அந்த நாட்டில் என்ன ஆகி இருக்கும் என யோசித்தேன்.

எனது பணப்பையை அவனிடம் தூக்கி எறிந்து விட்டு நான் பறந்தது அந்த வாகனத்தில் மட்டுமல்ல, அந்த நாட்டை விட்டும் தான்.

இன்னொரு முறை திரும்பி பார்ப்பமா நாங்க...............

எமது அடுத்த வெளியீடு : ஐயர்ஸ் கிச்சன்