புதன், 12 செப்டம்பர், 2018

ஊதியம் மனிதனுக்கு மட்டுமா என்ன

ஊதிய உயர்வு போத வில்லை, ஊக்கத் தொகை போத வில்லை என்று பல தொழிற் சங்கங்கள் போராடுவதை பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு 9 ஆண்டுகள் எந்த போராட்டமும் செய்யாமல் கொடுத்த பணியை அழகாய் செய்து வந்த ஒரு ஜீவராசி அதுவும் மனிதன் அல்ல எனும் போது ஆச்சரியம் மேலிடத்தான் செய்கிறது.

இது 19 ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு.

மனிதனுக்கும் வானர வகை சேர்ந்த பபூன் ஆகிய இருவருக்கும் நடந்த ஓர் அபூர்வ நிகழ்வு.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் நகரில் உள்ள ஒரு தொடர் வண்டி நிலையத்தின் பெயர் உய்டன்ஹேஜ். இங்கு ஜேம்ஸ் என்பவர் பாதுகாவலராக பணி புரிந்து வந்தார்.

ஓடிக்கொண்டிருக்கும் தொடர் வண்டியிலிருந்து அனாயாசமாக குதித்து அருஞ்செயல் செய்பவர் ஆகையால் ஜம்ப்பர் என்ற புனை பெயரும் உண்டு இவருக்கு.

இதில் இணையாய் ஓடிக்கொண்டிருக்கும் இரு தொடர் வண்டிகளுக்கிடையே தாவுவதும் அடக்கம்.

பல முறை இரு வண்டிகளுக்கிடையே தாவுவது இவருக்கு வாடிக்கையாகி போனது என்றாலும், இந்த செயலே ஒரு நாள் இவருக்கு எமனாய் மாறியது.

ஒரு முறை தாவும் போது கால் சறுக்கி விழுந்து இரு கால்களையும் பறி கொடுத்தார்.

இழந்தது கால்களை மட்டுமே , நம்பிக்கையை அல்ல.

ஒரு சில மாத ஓய்விற்கு பின்னர் செயற்கை கால்களை பொருத்திக் கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பிய இவரிடமே நிர்வாகம் பணியை திரும்ப ஒப்படைத்தது நன்கு பணி செய்பவர் என்பதாலும், கருணையின் அடிப்படையிலும்.



இவர் இல்லம் தொடர் வண்டி நிலையத்திலிருந்து சுமார் ½ கி.மீ தொலைவே என்பதால் பணிக்கு சென்று வர தண்டவாளங்களின் மேல் கையால் தள்ளப்படும் வண்டி போன்ற சக்கர நாற்காலியை பயன் படுத்தி வந்தார்.

தற்போது அவருக்கு வழங்கப்பட்டது நிலைய பாதுகாப்பு மற்றும் உய்டன்ஹேஜ் நிலையத்தில் சமிக்ஞை விளக்குகளை இயக்குவது போன்று பணிகள்.

மேலும் இவர் தாமாகவே முன் வந்து நிலைய பூங்காவினை பராமரிக்கவும் செய்தார்.

இவ்விதமான பணிகளை தொடர்ந்து செய்து வந்த இவருக்கு ஒரு நாள் அருகிலிருந்த சந்தைக்கு செல்ல நேரிட்டது.  

அங்கு ஓர் அதிசய நிகழ்ச்சியை கண்டார்.

பபூன் ஒன்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மனிதரை தள்ளிக்கொண்டு வருவதை கண்டார்.

அமர்ந்திருந்த மனிதரே அதன் உரிமையாளர் என அறிந்து கொண்டு அந்த பபூனை விலைக்கும் வாங்கி விட்டார்.

பபூனுக்கு ஜாக் என பெயரிட்டு இல்லத்திலிருந்து பணிக்கு சென்று வர தாம் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை தள்ளுவதற்கு ஜாக்கை வைத்துக் கொண்டார்.

அமர்ந்தபடியே வேலை செய்யும் போது ஜேம்ஸ் இன் உத்தரவு படி ஜாக் சக்கர நாற்காலியை தள்ளி வந்த கதை நடந்து (நிகழ்ந்து) வந்துள்ளது.

மெல்ல மெல்ல ஜாக் தம் எஜமானர் செய்யும் வேலைகளை உள்வாங்க துவங்கியது. 

அதாவது சமிக்ஞை விளக்கு பணிகள் மற்றும் தொடர்வண்டி தடத்தை மாற்றுவது ஆகியவை.

தாம் செய்யும் வேலைகளை ஜாக் கூர்ந்து கவனிப்பதை கண்ட ஜேம்ஸ் அதனை மெல்ல பழக்க துவங்கினார். முதலில் அதன் கரம் பிடித்து தொடர்வண்டி தடத்தை மாற்றுவது மற்றும், சமிக்ஞைகளை மாற்றுவது(விலங்குகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை மட்டுமே தெரியும் என்றாலும் ஜாக் எப்படி பச்சை , சிவப்பு போன்ற நிறங்களை இனம் பிரித்தது என தெரியவில்லை) போன்ற வேலைகளை ஜேம்ஸ் பயிற்றுவித்தார்.


இதில் ரசிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் ஜேம்ஸ் கட்டளையிட்டால் மட்டுமே ஜாக் இந்த பணிகளை செய்யும் அளவிற்கு முன்னேறியிருந்தது தான்.

இந்த இருவருக்கும் இருந்த நெருக்கம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, ஒரு பெண்மணிக்கு அதிர்ச்சியையும் உண்டாக்கியது. ஆகையினால் தம் கடமை செவ்வனே செய்ய எண்ணி தொடர்வண்டி நிலைய உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து விட்டார்.

முதலில் நம்பாத அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வந்த தகவலை கொண்டு உய்டன்ஹேஜ்  தொடர்வண்டி நிலையத்திற்கே நேரில் வந்தது சோதனை செய்தனர்.

அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள் உடனடியாக இருவரையும் உய்டன்ஹேஜ் நிலையம் விட்டு வெளியேற உத்தரவிட்டார்கள் .

அதனை ஏற்க மறுத்த ஜேம்ஸ் இப்பணிகளை தாமே செய்வதாகவும் பபூன் ஜாக் தமக்கு உதவியாளர் என்ற அளவில் உள்ளதாகவும் கூறி வாதிட்டார்.

அதற்கு சாட்சியாக இது வரை எந்த ஒரு அசம்பாவிதமும் இந்த பகுதியில் நடக்கவில்லை என்று அவர் பல முறை வாதிட , வேண்டுகோள் அதிகாரிகளால் ஏற்கப்பட்டு ஜாக்கிற்கு சோதனை வைக்கப்பட்டது.

மீண்டும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள் அவ்வதிகாரிகள், பல விதமான சோதனைகளிலும் ஜாக் திறம்படவும் , பிழையின்றி செய்வதையும் கண்டு.

இந்த அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாக மாற , அதிகாரிகள் பபூன் ஜாக்கிற்கு சமிக்ஞையாளர் பதவியும் வழங்கினர் , உடன் ஊதியமும்.

உலக வரலாற்றிலேயே இது வரை ஒரு விலங்கு தொடர்வண்டி நிலையத்தில் பணியாற்றியது உண்டென்றால் அது நம் பதிவின் நாயகர் ஜாக் தான்.

சுமார் 9 ஆண்டுகள் பணி புரிந்த ஜாக் இறந்து போனது காச நோயால் 1890ல்.

இவ்வளவு பேசினோமே , நம் நாயகருக்கு எவ்வளவு ஊதியம் என்று பேசவே இல்லையே.

பணி புரிந்த 9 ஆண்டுகளில் ஒரு முறை கூட தவறே செய்யாத ஜாக்கிற்கு ஒரு நாளைக்கு .20 ராண்டுகளும் (தென் ஆப்பிரிக்க நாணயம்) மற்றும் வாரம் ஒரு முறை அரை குடுவை சோம பானமும்.

நன்றி : விகடன்