திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஆறாம் அறிவு

செய்தியை கேட்டவுடன் கண்கள் பணிக்கத் தான் செய்தன. காரணம் தெரியவில்லை நண்பர்களே

டோக்யோ பல்கலைகழகத்தில் பணி புரிந்த ஹிதேசுபரோ என்ற  பேராசிரியர் ஒரு நாயை வளர்த்து வந்தார்,ஹசிகோ என்று பெயரிட்டு, 1920 களில்.

அன்றாடம் தொடர் வண்டியினையே பயன் படுத்தி கல்லுரி சென்று திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.



                             தோழன் தனது எஜமானருடன்
                         
தினமும் மாலை அவரை வரவேற்க அவரின் செல்ல பிராணி ஷிபுயா என்ற தொடர் வண்டி நிலையத்திலே காத்திருக்கும்.

ஒரு நாள் ஹிதேசுபரோ மாரடைப்பின் காரணமாய் பல்கலைகழகத்திலேயே இறந்து விட்டது தெரியாமல் ஹசிகோ தினமும் மாலை வந்து காத்திருந்தது.

இந்த காத்திருப்பு ஒரு நாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஒன்பது வருடங்கள் , ஒன்பது மாதங்கள் மற்றும் 15 நாட்கள்.

  

                             ஹசிகோ அந்நாளைய செய்தி தாள்களில்


அதற்கு மேலும் அந்த தோழன் தொடர்ந்து வந்திருப்பான், அதற்குள் இயற்கை அவனை அழைத்துக் கொண்டது தன்னிடம், 1935ல்.

இந்த தோழன் தற்போது தன் எஜமானர் சமாதி அருகிலேயே உறங்கிக் கொண்டு இருக்கிறான் ஜப்பானில்.
       

எஜமானரும் தோழனும் அருகருகே நிரந்தர துயில் கொண்டிருக்கும்  இடம்

                         ஒரு விலங்கு தன்னிடம் காட்டிய அன்பை / நன்றியை நினைவு கூறும் வகையில் ஹசிகோவின் வெண்கல சிலை அந்த தொடர் வண்டி நிலையத்திலேயே எழுப்பப் பட்டு உள்ளது, கூடவே இதன் எஜமானரும் உள்ளார், சிலையாய்.


           ஹசிகோவின்  நினைவாய் எழுப்பட்ட சிலை

 (ஆதாரமும், நன்றியும் - https://nerdnomads.com/hachiko_the_dog)

இது ஆறு அறிவு உள்ள மனிதன் , ஐந்து அறிவு உள்ள ஒரு விலங்கிற்கு திருப்பி செலுத்திய நன்றி.

இதற்கு மாறாய் ஐந்து அறிவு உள்ள விலங்குகள் தங்கள் உயிரை காத்த , அன்பு செலுத்திய ஆறறிவு உள்ள மனிதனுக்கு என்ன கைம்மாறு செய்தன.

அதை படிக்க படிக்க, வியப்பெனும் கடலில் மூழ்கிவிட்டேன் நண்பர்களே.

லாரன்ஸ் அந்தோனி எனும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஓர் அன்பர் விலங்குகளிடம் மாறா அன்பு கொண்டிருந்தார்.

அவைகளை வேட்டை ஆடும் மனிதர்களிடமிருந்து காப்பதில் தயக்கம் கொள்ளாதவர். 2003ல் வளைகுடா மீது நடத்தப் பட்ட தாக்குதலின் போது, அரசின் எதிர்ப்பையும் மீறி பாக்தாத் விலங்குகள் பூங்காவிற்கு சென்று தன்னால் இயன்ற வரை விலங்குகளை அழிவிலிருந்து காத்தவர்.

அழிந்தவை 650க்கும் மேல். இவரால் காப்பாற்ற பட்டவை கரடிகள், வல்லூறுகள்,சிங்கங்கள் மற்றும் புலிகள் என சுமார் 50.

இந்த போரின் போது தனக்கென ஒரு பாதுகாப்பு படையையே வைத்துக் கொண்டு இந்த விலங்குளை காத்தார்.

அங்கிருந்த பொது மக்களும் இவருக்கு உதவினர் என்பது கூடுதல் தகவல்.

இவருக்கு யானைகள் என்றால் ஒரு தனி பிரியம் தான்.

கட்டுக்குள் அடங்கா யானைகளை தனது மாறு பட்ட முயற்சிகளால் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதில் லாரன்ஸ் வல்லவராய் இருந்தார்.

        

                         லாரன்ஸ் யானைகளுடன் 

காட்டிலிருந்து பிடித்து வரப்படும் யானைகள் ஒரு வேலை மனிதன் சொல் கேளா விட்டால் அவைகள் சுட்டுக் கொல்லப் பட நாள் குறிக்கப் படும்.

அப்படிப் பட்ட வேதனையான நாட்களில் ஒன்றை பற்றி லாரன்ஸ் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

“அதிகாலை சுமார் 4.45 மணி, நானா என்று பெயரிடப்பட்ட யானையின் முன் நான் நின்று கொண்டு இருந்தேன்.நானா கொல்லப் பட வேண்டிய நாள் அது.

ஒரு புறம் மின்சார வேலி, மறு புறம் காடு.நான் காட்டை நோக்கி கையை காட்டி, எனக்கு தெரிந்த விலங்குகள் மொழியில் அதனை ஓடு , ஓடு என்று கூறிக் கொண்டு இருந்தேன்.
சரியாய் சொல்ல தெரிய வில்லை என்ன நடந்தது என்று, நானா மெல்ல திரும்பி தப்பித்து சென்று விட்டாள் காட்டுக்குள். அன்று அவள் காப்பாற்ற பட்டும் விட்டாள்.

                         லாரன்ஸ் தான் பழக்கும் யானையுடன்

இது போன்ற நிகழ்வுகள் ஒன்று, இரண்டு அல்ல. பலவற்றை அவர் குறிப்பிட்டு உள்ளார் தனது நூலில்.

சரி நண்பர்களே. விஷயத்திற்கு வருவோம்.

மார்ச் மாதம் 7ஆம் தேதி 2012ல் சுமார் 31 யானைகள் இரு குழுக்களாய் காட்டிலிருந்து இவரது இல்லம் நோக்கி வர துவங்கின.

          
யானைகளின் ஊர்வலம் இவர் இல்லத்தை நோக்கி

ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ இல்லை. அவைகள் நடந்தது 12 மணி நேரங்கள்.
யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை இவரது இல்லம் இருக்கும் திசையை, ஒரு முறையேனும் அவைகள் வந்ததும் இல்லை.

ஆனாலும் 12 மணி நேரங்கள் யாருக்கும் எந்த சிரமமும் அளிக்காமல், நூற் பிடித்தார் போல் நன்கு வழி தெரிந்தது போல், சரியாய் வந்தடைந்து இவரது இல்லத்தை சுற்றி அமர்ந்து கொண்டன.

இந்த 32 யானைகளும் அசையாமல் சுமார் ஒன்றைரை நாள் உணவும் , ஆகாரமும் இல்லாமல் அமர்ந்தே இருந்தன அவர் இல்லத்தின் முன்பு.

ஏன் தெரியுமா நண்பர்களே, அஞ்சலி செலுத்த – தமக்காக வாழ் நாளில் பெரும் பகுதியை செலவிட்ட அந்த மகான் இறப்பிற்கு.

யார் ,எப்படி சொன்னார்கள் இவரது மறைவினை இந்த விலங்குகளுக்கு..... ?

எப்படி இந்த வேழங்கள் இவரது இல்லத்தை மிகச் சரியாய் கண்டு பிடித்து வந்தன...?

தலைவன் இறந்தால் கடையை உடைத்து , பேருந்தை எரித்து துக்கம் கொண்டாடும் இந்த சமூகத்தில் அமைதியாய் 36 மணி நேரங்கள் எப்படி அமர்ந்திருந்தன அஞ்சலி செலுத்த ... ?

உயர் குலத்திற்கு ஓர்  இடு காடு , தாழ்ந்த குலத்திற்கு ஒன்று என இறந்த பின்னும் பேதம் பார்க்கும் மனிதன் எங்கே, கூட்டம் கூட்டமாய்  வாழ்ந்து ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் இந்த யானைகள் எங்கே ..?


         ஆறாம் அறிவு மனிதனுக்கா இல்லை விலங்குகளுக்கா ..?





10 கருத்துகள்:

  1. ஹசிகோ வின் கதை நெகிழ வைத்தது நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. தற்கால மனிதனின் போக்கு ஆறறிவு என்ற நிலைப்பாட்டிலிருந்து தடம் மாறி விட்டது நண்பரே...

    மனித குலம் மீண்டும் கற்கால ஆதிவாசிகளாகி விடுவானோ... என்ற அச்சமும் எமக்கு உண்டு.

    ஐந்தறிவு (?) எற்று சொல்லப்படும் யானைகளின் செயல்பாடு வியக்க வைக்கிறது.

    ஆறறிவு என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் மனிதன் பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிச் செல்கின்றான்.

    5 பெரியதா ?
    6 பெரியதா ?
    என்றால் ???

    ஐந்தே மேலே உயர்ந்து இருக்கிறது.
    நல்லதொரு சிந்தனையை கொடுத்த பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. மனதை நெகிழச் செய்யும் நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறீர்கள் நண்பரே
    விலங்குகள் மனிதனினும் மேலானவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் நன்றி நண்பரே. ஹசிகோவை எனக்கு அறிமுகம் செய்ததே நீங்கள் தானே.

      நீக்கு
  4. கில்லர்ஜி வழி காட்டிவிட்டார் இங்கே வர .
    மிகவும் அருமையான நெகிழ்ச்சியான பதிவு .ஹசிக்கோ அனைவர் நெஞ்சிலும் நீக்கமற இருக்கும்
    இன்னமும் பல ஹசிகோக்கள் அன் கண்டிஷனல் அன்பை மனிதர்கள் மீது வைத்துள்ளன.
    லாரன்ஸ் ஆந்தனி பாக்தாத் தகவல் எனக்கு புதிது .ஆஹா எத்தனை சிறப்பான மனிதரும் பொதுமக்களும் .
    மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த வேழங்களின் அன்பை என்னென்று பாராட்டுவது .அருமையான பகிர்வு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி .கில்லர்ஜீக்கும் நன்றி. சரளமாய் உள்ளது உங்கள் எழுத்து நடை

      நீக்கு
  5. ஹசிகோ கதை நெகிழச் செய்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி அய்யா உங்கள் கருத்துக்கு. நானும் உங்கள் சமீபத்திய பூஜ்யம் பற்றிய கட்டுரையை படித்துவிட்டு எனது கருத்தையும் இட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு