சனி, 17 பிப்ரவரி, 2018

இதனை இதனால் இவன் முடிப்பன்

வாருங்கள் நண்பர்களே திரை இசை பாடகர்களை பற்றி ஒரு பார்வை பாப்போம், என் ரசனைக்கு எட்டிய வரை.

திரை இசை மீது பொதுவாகவே இசை மீது எனக்கு ஒரு மாபெரும் ஈர்ப்பு உண்டு , குறிப்பாக 1950 களிருந்து 1990கள் வரை.

கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை மிகவும் ரசிப்பவன் நான்.
அத்தகைய பாடல்களில் பாட்டும் நானே ஆகட்டும், சங்கராபரணம் ஆகட்டும் அல்லது சிந்து பைரவி ஆகட்டும். எந்நேரமும் மனதை வருடக்கூடியவை.

சில வருடங்ககளுக்கு முன்பு “பட்டத்து ராணி” என்ற பாடலை கூர்ந்து கவனித்து கேட்ட பின்பு தான் பல்வேறு பாடகர்களை ஒப்பீடு செய்து பார்க்க துவங்கினேன்.

ஒரு சில பாடல்களை தங்கள் குரலை ஏற்ற இறக்கத்தோடு பாடும் திறமை கொண்டவர்கள் என்று கொண்டால் என மனத்திரையில் முதலில் வருபவர் திரு T.M.S .

நவரசத்தையும் உடன் பக்தியையும் (நவரசத்தில் பக்தியும் உள்ளடக்கமா என தெரியவில்லை) வெறும் குரலை கொண்டு நம் மனக்கண் நிறுத்துபவர்  அவர்.

பாட்டும் நானே என பக்தியையும் , நிலவை பார்த்து என சோகத்தையும் பூமாலையில் ஓர் மல்லிகை இல் காதல் ரசத்தையும் என அனைத்து வகை பாடல்களிலும் மிளிர்ந்தவர் அவர்.

இவருக்கு இணையாக ஒருவரை ஒப்பிட வேண்டும் என்றால் அது SPB தான்.  இதற்கு உதாரணம் ஒன்றோ இரண்டோ அல்ல, ஆயிரக் கணக்கான பாடல்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஆயினும் SPB-யால் பக்தி ரசம் சொட்டும் பாடல்களில் மிளிர முடியவில்லை என்பது என கருத்து.

காதலிக்க நேரமில்லை படத்தில் “மலர் என்ற” எனும் பாடலும், சிவந்த மண்ணில் “பட்டத்து ராணி” பாடலும் வெள்ளி விழா திரை படத்தில் “காதோடு தான்” பாடலும் LR ஈஸ்வரி அளவிற்கு யாரும்  பாட இயலாது என் துணிபு.

மாபெரும் பாடகி என பெயரெடுத்த சுசீலாவால் கூட ஈஸ்வரி அளவிற்கு பாடியிருக்க இயலுமா என்பது கேள்வி குறி.

ஏனெனில் என்னை பொறுத்த வரை, சுசீலா அவர்களுக்கு என்ன தான் திறமை இருந்தாலும், அவரால் குரலில் ஏற்ற இறக்கங்களை கொண்டு வர இயலாது.

ஒரே சீராக தான் அவர் பாடுவார்.

மென்மையான பாடல்கள் ஆயிரம் அவர் பாடியிருந்தாலும், விருதுகள் பெற்றிருந்தாலும் LR ஈஸ்வரி போல் பணமா பாசமா வில் “இலந்த பழம்” நிச்சயம் ஒன்று கூட விற்று இருக்க முடியாது. 

மேலும் சிவந்த மண்ணில் “பட்டத்து ராணி” யாய் மிளிர்ந்த இருக்கவும் முடியாது இவரால்.

இது தெரிந்து தானோ என்னவோ இசை அமைப்பாளர்கள் மென்மையான பாடல்களை (melodious) மட்டுமே சுசீலாவிற்கு வழங்கினர் என எனக்கு தோன்றுகிறது.
“முதல் மரியாதை”யில் பூங்காற்றை திரும்பி பார்க்க செய்யவும்  , குரலிலேயே வெட்டி வேரின் நாற்றத்தையும் உணர வைக்க முடியும் என்றால் அது மலேசியாவால் மட்டும் தான் இயலும்.

சிந்து பைரவியில் “மனதில் உறுதி வேண்டும்” என்று நம் மனதில் நிற்க ஜேசுதாஸ் அவர்களால் மட்டுமே இயலும்.

“இளைய நிலா”  மற்றும் “நிலாவே வா” என எத்தனையோ பாடல்கள் மூலம் பூமிக்கு நிலாவை அழைத்து வர SPB அவர்களால் தான் முடியும்.

மிக மிக இனிமையாய் சிங்கார வேலனே என்று கொஞ்சும் சலங்கையிலும், நிலா காயுது என சகலகலா வல்லவனில் தன் குரலில் நம்மை கிறங்க வைக்க ஜானகி அவர்களால் மட்டுமே இயலும்.

அடித்து சொல்வேன் – மேற்கூறிய இரு பாடல்களிலும் ஜானகியின் இடத்தை நிரப்ப இன்று வரை யாரும் பிறக்கவில்லை என்று.

தளபதி திரை படத்தில் ஜேசுதாசும், SPBயும் இணைந்து பாடிய உற்சாகம் நிறைந்த “காட்டுக் குயிலு” பாடலில், SPB அளவிற்கு ஜேசுதாஸ் ஆல் நம் மனசில் இடம் பிடிக்க இயலவில்லை எனும்போது எனக்கு தோன்றும் பழமொழி “புறங்கை புண்ணிற்கு கண்ணாடி” என்பதே.

இப்படி இந்த பாடலை இவர் தான் பாடல் வேண்டும் என தெரிவு செய்து அதனை அந்த பாடகர் கொண்டு பாட வைத்த இசை அமைப்பாளர்களில் முதன்மையாய் தோன்றுபவர்கள் K V மகாதேவன் அவர்களும், MSV அவர்களும் மற்றும் நமது இசை ஞானியும் தான்.

இவற்றை பார்க்கும் இதனை இதனால் இவன் முடிப்பன் துவங்கும் குறளே எனக்கு தோன்றுகிறது இதற்கு உதாரணமாய்.

அறிஞர் பெருமக்கள் விளக்கினால் எனது கருத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாய் உள்ளேன்.

20 கருத்துகள்:

  1. அருமையாக அலசியுள்ளீர்கள்.

    இவ்வளவு பாடகர் பாடகிகளை குறிப்பிட்டு இருந்தாலும் காலத்தால் மறக்க இயலாத பாடல்கள்தான் ஆனால் இதில் எல்.ஆர்.ஈஸ்வரியும், மலேசியா வாசுதேவனும் மட்டுமே தமிழர்கள்.

    நான் இனம் பிரிப்பதாக நினைக்க வேண்டாம் தமிழர், தமிழச்சிகள் மட்டும் பிற மாநில மொழிப்படங்களில் ஒதுக்கப்படுகின்றார்களே... என்ற ஆதங்கமே... - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி அவர்களே. தமிழனின் அறிவும் உழைப்பும் மட்டுமே தேவை , ஆனால் அவன் பல இடங்களில் புறக்கணிக்க படுகிறான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

      உங்களை போல் நானும் பேதங்கள் பார்ப்பதில்லை, எனினும் என அறிவிற்கு எட்டிய வரையில் -மலேசியா வாசுதேவன் மலையாளத்தை தாய் மொழியை கொண்டவர்.

      நீக்கு
    2. மலேசியா வாசுதேவன் தமிழர் இல்லையா ?
      இதுவரை நான் அறியாத தகவல்.
      புரிதலுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  2. ஆம் தோழரே. அவரது முழு பெயர் மலேசியா வாசுதேவன் நாயர்.

    பதிலளிநீக்கு
  3. டி.எம்.எஸ் தொடங்கி தற்காலம் வரையிலான பாடல்கள் பாடகர்கள் பற்றிய ஒரு இரசிகனின் மனந்திறந்த கட்டுரை. சுவையாயிருந்தது.

    பதிலளிநீக்கு
  4. இதனை இவன் கண் என்று துவங்காது அந்த குறள்
    இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து
    அதனை அவன் கண் விடல். -- குறள்

    கட்டுரை மிகச்சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பார்த்திபன் அவர்களே . இனி இது போன்ற தவறுகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  5. அன்பு குமார் அவர்களின் இசை ஆய்வு இனிமை.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் இசை ஆர்வமும்,இசை ஆய்வும் போற்றதலுக்கு உரியது
    வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. நன்றி நண்பரே.
    தொடக்க புள்ளியே நீங்கள் தானே. :)

    பதிலளிநீக்கு
  8. மனதை தொட்ட பதிவுகள்
    நாய்
    யானை
    தொடரட்டும் எழுத்துப்பணி
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. இந்த கட்டுரையில் குறித்து கொண்ட எல்லா பாடல்களும் இன்பமானது...மலையாளத்தில் பி்.சுசீலாதேவி, வாணிஜயராம்,எம்.எச்.விசுவநாதன்,எ.எம். ராஜா..போன்றவர்கள் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்கள்...பிறர் மனதை கவரக்கூடிய கலைகள்க்கு மொழியில்லை...என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நண்பரே. உண்மை தான். இசைக்கு மொழி இல்லை

    பதிலளிநீக்கு
  11. இரா. சந்திரசேகரன்23 செப்டம்பர், 2023 அன்று PM 3:05

    தமிழ்த் திரை இசை ஒரு பெருங்கடல்...அதை முடிந்த அளவு உங்கள் பார்வையில் அலசி இருக்கிறீர்கள்...அருமை...
    பாடகர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தனித்தன்மை கொண்டவரே. பாடலின் சூழ்நிலை நடிக்கும் நடிகர் நடிகைகள் அவர்களது தன்மையை பொருத்தும் குரலை வேறுபடுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தமிழ் திரை உலகம் மேலும் பல அருமையான பாடல்களை தந்து உதவட்டும். உங்களுடைய இசை ரசனை நன்கு கொள்ளப்படுகிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஐயா திரு சந்திரசேகரன் அவர்களின் பாராட்டிற்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு