ஞாயிறு, 25 ஜூன், 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும் (தொடர்ச்சி)

வாருங்கள் நண்பர்களே.. , நமது பயணத்தை தொடர்வோம்.

அமெரிக்காவில் நான் முதலில் இறங்கிய இடம் நார்த் கரோலினா பிறகு உடனடியாக அங்கிருந்து விஸ்கான்சின் என்ற மாகாணத்தில் உள்ள மில்வாக்கி என்ற நகரத்திற்குப் புலம் பெயர்ந்தேன். என்னதான் அமெரிக்காவை பற்றி சென்ற வாரம், நேர்மறை செய்திகளை கூறி  இருந்தாலும், ஒரு சில நடைமுறைகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்துகின்றன.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பெரும்பாலோர், தங்களது குழந்தை அமெரிக்காவிலேயே பிறக்க வேண்டும் , அந்நாட்டு குடியுரிமை பெற வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் குழந்தை பிறந்த உடன், அமெரிக்க மருத்துவர்கள் (அனைவருமா என தெரியாது), நமக்குக் கூறும் சில அறிவுரைகள், அறிவுறுத்தல்கள், நமது உணர்வுகளுக்கும், நமது சமூகப் பழக்க வழக்கங்களுக்கும்  எதிராகவே இருக்கின்றன,

 பிறந்த ஒரு சில மாதங்களில், குழந்தையை இரவில் தனி அறையில் படுக்க வைக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் நாம் கேட்டால்  மட்டும் நமக்கு சொல்லும் அறிவுரை.

என்னதான் இரவு முழுவதும் குழந்தை அழுதாலும் பாலூட்ட வேண்டாம்.

இச்செய்கைக்கு அவர்கள் கூறும் காரணம், குழந்தையின் அழுகையை நாம் ஊக்குவிக்க கூடாது என்பதேயாகும் (குறிப்பாக இரவில் மட்டும்).

இந்தியாவில் என் மூத்த மகள், ஆறாம் / ஏழாம் வகுப்பில் பயின்ற கணிதம், இங்கு ஒன்பதாம் வகுப்பில் தான் சொல்லி கொடுக்கப் படுகிறது. இது மட்டுமல்ல மாணவர்கள் வகுப்பில் உறங்கினாலும் ஆசிரியர் எழுப்பவே கூடாது. பள்ளியில் நுழையும் மாணவர்களின் பைகளை பரிசோதித்த பின்னரே அவர்கள் அனுமதிக்க படுவர்.

தனி மனித உரிமை மிகுந்த நாடு என்பதால் , ஒருவர் விஷயத்தில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள். எனவே வயது ஆக ஆக, நம்முடன் பழக, நட்பு பாராட்ட, நமக்கு, நமது குடும்பம் மட்டுமே இருக்கும். நட்பு வட்டாரம் சற்று குறைவு தான்.



                                              நயாகரா பயணத்தின் போது

அது மட்டுமா , முதுமையில் தனிமையை அனுபவித்தே ஆகவேண்டும். வீட்டை சுத்தம்செய்வது , தள்ளாத வயதிலும் குப்பையை அதனதன் இடத்தில் கொட்டுவது, மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு செல்வது என அனைத்து வேலைகளையும் அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும், 70 வயதிலும். இவைகளை நான் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கண்டவை. இருப்பினும் வயதான பெற்றோரை குழந்தைகள் மருத்துவமனை கூட்டி செல்வதையும் நான் கண்டுள்ளேன்.

இது மட்டுமல்ல, குளிர் பிரதேசம் என்பதால் வெயில் வருவது காலை மணி, மறைவது மணி குளிர் காலத்தில்.

மாலை மணியே இரவு 10 மணி போல இருப்பதால், வெப்ப பிரதேசத்திலிருந்து வருபவர்களுக்கு, இதைச் சமாளிப்பதே மிகவும் கடினமாகும். இதனை நான் இங்கு விவரிப்பதை விட , அனுபவித்து பார்த்தால் தான் அதன் சிரமம் புரியும்.


             

இதன் காரணமாகவே ஏப்ரல் முதல் வாரம் முதல் அக்டோபர் இறுதி வரை அரசாங்கமே ஒரு மணி நேரத்தை கூட்டி விடும். அதாவது ஏப்ரல்-இல் காலை 6 மணி என்பதை காலை 7 மணி என அரசே மாற்றி அமைத்து விடும். இதன் மூலமாக நீண்ட நேரம், அதாவது இரவு சுமார் 8.30 வரை வெயில் இருக்கும்.

மீண்டும் அக்டோபர் மாதம் அரசு அந்த ஒரு மணி நேரத்தை கழித்து விடும்.  அதாவது மாலை 7 மணி என்பது மீண்டும் 6 என நேரத்தை மாற்றி அமைத்தி விடும்,  ஒரு மணி நேர இழப்பீடை ஈடு கட்ட.

அரிசோனா போன்ற மாகாணங்கள் இதற்கு விதி விலக்கு, சற்றே வெப்ப பிரதேசம் என்பதால் நம்மை போல் நிலையாய் ஒரே நேரம் தான். அங்கு நேரம் மாற்றி அமைக்க படுவதில்லை.

இந்த நேர மாற்ற யோசனையை முதலில் கூறியது பெஞ்சமின் பிராங்க்ளின் என்றாலும் இதனை நடைமுறை படுத்தியது ஜெர்மனியும் , ஆஸ்திரியாவும் தான், 1916ல்.

குளிர் காலத்தில் வீட்டினுள்ளே முடங்கி இருக்கும் இந்த சிரமத்தை , என் மூத்த மகள் எப்படியோ சமாளித்துக் கொண்டாள், எனினும் என் இரண்டாவது மகள் எங்கும் வெளியில் செல்லாமல், வீட்டிலேயே முடங்கி கிடந்தாள். அவளுக்கு பிடிவாதமும், மூர்க்கத் தனமும் அதிகரிக்கத் தொடங்கின மெல்ல மெல்ல.


                                       நான் குடியிருந்த அடுக்கு மாடி இல்லம்

இதனால், தாய் நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம், எனக்குள் மெதுவாக துளிர் விடத் தொடங்கியது.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் எனது குடும்பத்துடன் இந்திய மளிகை கடைக்குச் சென்றேன். இரவு சுமார் 7 மணி அளவில் இல்லம் திரும்பும் போது வழி தவறி விட்டேன். மிகவும் இருட்டு மட்டுமல்ல , ஆள் அரவமற்ற பகுதியும் கூட. எனவே ஒரு பகுதியில் நின்றுவிட்டேன்.

கூகிள் MAPஇல் வழி தேட ஆரம்பித்தேன்.

அப்போது எனது வாகனத்தை யாரோ தட்ட நாங்கள் நால்வரும் திரும்பி பார்த்தோம்.

வழக்கமாய் விரல் மடக்கி தட்டினால் டொக் டொக் என்று சத்தம் வர வேண்டும், ஆனால் டிக் டிக் என்று ஒலி வந்தது, காரணம், வந்த இருவரும் என் வாகனத்தை, இரு புறமும் தட்டி கொண்டிருந்து துப்பாக்கியால்.

தொடரும்

சனி, 17 ஜூன், 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும்


அமெரிக்காவின் ஒருங்கிணைந்த மாகாணங்கள் – அது தாங்க நண்பர்களே United States of America- வை தமிழாக்கம் செய்து விட்டேன்.

உலகின் மூன்றாம் பெரிய இந்த நாட்டின் பெயரை கேட்டால் (குறிப்பாக 1990-களின் ஆரம்பத்திலிருந்து இருந்து) இன்றைய மற்றும் நேற்றைய இளைஞர்களுக்கு என்றுமே ஒரு கிளர்ச்சி எழும். ஆம் நண்பர்களே, பரந்து விரிந்த சாலைகள் , எங்கு நோக்கினும் பசுமை ,  மாசற்ற காற்று /ஒலி, இவை மட்டுமல்ல, இயற்கையின் கொடையாம்  நயாகரா மற்றும் எல்லோ ஸ்டோன் பூங்கா , மனிதனின் கற்பனையாம் டிஸ்னி லேன்ட்,யுனிவேர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் விண்ணை தொடும் கட்டிடங்கள் என நாம் கண்டு களிக்க எத்தனையோ உண்டு.

ஊழலும் , கையூட்டும் சாதாரண மனிதனின் வாழ்வில் அவனை பாதிப்பதில்லை. கூவாத்தூர் கூத்துக்கள் இல்லை, சட்டசபை அடிதடிகள் இல்லை. சட்டம் மிக கடுமை அங்கே. வெள்ளை மாளிகையில் கூட்டிப் பெருக்கும் ஒரு பணியாளர் , அந்த நாட்டு அதிபரை பார்த்து வணக்கம் தெரிவித்தால், அதிபர் பதில் மரியாதை செய்ய வேண்டுமென சட்டம் சொல்கிறது.அதிபரும் அவ்வாறே செய்வார், பதில் மரியாதை.

நீங்கள் சாலை விதியை மீறுகையில், காவலர் உங்களை நிறுத்தினால் முதலில் காவலர் உங்களிடம் மன்னிப்பு கேட்பார் உங்களை நிறுத்தியமைக்காக. அதன் பின்னரே நீங்கள் செய்த தவறை சுட்டிக் காட்டி பின்னர் உங்கள் வாகன ஆவணங்களையும் கேட்பார். அந்த அளவிற்கு மனித உரிமை சட்டம் உள்ளது.



இரவு 1 மணி ஆனாலும் , யாருமற்ற சாலை ஆனாலும் , சமிக்ஞை விளக்கை பொறுத்தே சாலையில் வாகனங்கள் நகரும். சட்ட மீறல்கள் உண்டு, ஆனால் மிக குறைவு.  இவை மட்டுமா நண்பர்களே , நீண்ட வரிசையில் நீங்கள் ஒரு மணி நேரம் நிற்க நேரிட்டாலும் பின்னால் வருபவர் உங்களை முந்த மாட்டார். சாரளத்தில் நிற்பவர் உங்களிடம் “என்னா வேணும்” என கேளார். பணிவாக முதலில் உங்களை நலம் விசாரித்து பின்னர் அவர் உங்களுக்கு எவ்வாறு உதவ இயலும் என்றே கேட்பார். மீதம் சில்லறை ஒரு பைசா ஆனாலும் உங்களிடம் கொடுத்து விடுவார்.



மிக சொகுசான வாழ்க்கை என்பதால் அங்கு சென்ற யாரும் அங்கேயே குடிஉரிமை பெற்று வாழ்க்கையை அமைத்த்துக் கொள்ள விரும்புவர். வெகு சிலரே தாய்நாடு திருப்புவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  முனைவர் பட்டம் இருந்தால் உங்களுக்கு ஒரு சில மாதங்களிலே குடியுரிமை வந்துவிடும். முதுகலை பட்டம் இருந்தால்  2 – 3 வருடங்களிலும் மற்ற பட்டங்களுக்கு இது 3 ஆண்டுகளுக்கு மேலும் ஆகும், சராசரியாக.

ஆனால் அங்கு செல்வதென்பது அவ்வளவு எளிது அல்ல.

H1B என்ற விசா (VISA – Valid Immigrant Status Authority) என்பது அமெரிக்கா பிற நாட்டு மக்களுக்கு குறிப்பாக கணிப்பொறி துறையில் உள்ளவர்களுக்கு வழங்கும் ஒரு விசா. முதலில் 3 வருடங்கள் இது கிடைக்கும், அங்கு சென்ற பின்னர் நாம் மேலும் 3 ஆண்டுகள் புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் H1B கிடைப்பது எளிது அல்ல. ஆண்டு தோறும் கணிப்பொறி நிறுவனங்கள் சுமார் இரண்டு லட்சம் விண்ணப்பங்களை அமெரிக்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். அரசாங்கமோ ஆண்டு தோறும் 65000 நபர்களுக்கே மட்டுமே H1B வழங்கும், அதுவும் குலுக்கல் முறையில்.

இரண்டு லட்சம் என்பது 65000ஆக குறைந்து அதில் ஒருவராக நீங்கள் வருவதற்கு நிச்சயம் நல்லூழ் செய்திருக்க வேண்டும் தான். அத்தகைய பேறு பெற்றவனாய் ஆனேன் நான் 2015-இல்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூரகத்தில் நியமனம் பெற்று, உயிரி அளவுகள் (Bio Metrics-ன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன்) பதிவு செய்து மறு நாள் தூதரகம் சென்று விசா வாங்கினோம்.

பணி நிமித்தமாக நான் அமெரிக்க செல்வது இது முதல் முறை அல்ல. ஆயினும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வது இதுவே முதல் முறை.  

இவ்வளவு நேரம் உங்களிடம் அமெரிக்காவின் பெருமையை பற்றியே பேசி வந்த நான், இன்னும் மேலும் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

வாருங்கள் நண்பர்களே , எனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் அடுத்த வாரம்.

பி.கு: இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை நான் படித்தவைகளும் , எனது மற்றும் எனது நண்பர்களின்னு அனுபவங்களும் மட்டுமே.

வெள்ளி, 9 ஜூன், 2017

தர்மம் தலை காக்கும் – அது தலைமுறையை காக்கும்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல – என்ற குறளிற்கு உதாரணமாக என் வாழ் நாளில் நான் கண்ட முதல் மனிதர் எனது தந்தை வழி பாட்டனார் திரு வ. க.அருணாசலம் அவர்கள். என் முற்பிறவியின் நான் பெற்ற பேறு அன்றி வேறு இல்லை. பொறுமையின் சிகரம், அன்பின் இலக்கணம், இன்னும் சொல்லப் போனால் என்னை பொறுத்த வரையில் கலியுக கர்ணன். ஆம், உண்மை தான் அது.
1958-இல் மாவட்ட கல்வித்துறை அதிகாரியாக ஓய்வு பெற்ற அவர், தனக்கென எதையும் சேர்த்து வைக்காதவர். (தான் இறக்கும் தருவாயிலும் தன்னிடம் இருந்த ரூ.500 என் தங்கையிடம் கொடுத்து பயன்படுத்த அவர் சொன்னதை, நான் எடுத்து ஒரு கை கடிகாரம் வாங்கிக்கொண்டது வேறு கதை)  தன் வாழ் நாளில் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாங்கித் தந்தவர் மட்டுமல்ல, தன்னால் இயன்ற வரை அக்கால மாணவர்களுக்கு படிப்புதவியும் செய்தவர்.

அதற்கு திரு. ஈரோடு தமிழ்அன்பன் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம் என்றால் ,
மீமிசல் ஊரில் கல்யாணசுந்தரம் என்ற அன்பர் தனது பூஜை அறையில் எனது தாத்தாவின் படத்தை வைத்து வணங்கி வந்தது இன்னோர் உதாரணம்.

எனக்கு நினைவு தெரிந்த வரையில் ஒரே ஒரு முறை மட்டுமே என்னிடம் கோபித்துகொண்டார், நான் ஐந்து பைசாவை இனிப்பு பண்டம் வாங்காமல் , சீட்டு கிழித்ததற்காக. வேறு எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னிடம் அவர் கோபித்து கொண்டது இல்லை.
நான் ஐந்தாம் வகுப்பு பயிலும்போது , சிறு வயது குறும்பு காரணமாய் எனது இடது கரத்தை ஒடித்து கொண்டு சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாய் கையில் மாவு கட்டு போட்டு சுற்றி கொண்டு இருந்தேன். வலது கரத்தினால் சாப்பிட்டாலும் , பள்ளியில் பாடம் எழுதினாலும் இயற்கை அழைப்பிற்கு இடது கரத்தை என்னால் பயன் படுத்த இயலவில்லை. சுமார் 30 நாட்களுக்கும் மேலாக தாத்தா எவ்வித தயக்கமோ , அருவருப்போ இல்லாமல் நான் கழிவறையில் இருந்து வரும் வரை காத்திருந்து என்னை சுத்தம் செய்வார் அவர்.

இன்று எனக்கு சற்றேனும் ஆங்கில அறிவு உண்டெனில் அது என் பாட்டனார் எனக்கு போதித்த, என்னிடம் சரளமாக உரையாடிய காரணத்தால் தான்.  ஒவ்வொரு பள்ளி தேர்வு முடிந்த பின்னரும் என்னுடனும் எனது தங்கையுடனும் அமர்ந்து கேள்வி கேட்டு அதன் மூலமாக மதிப்பெண்களை கிட்டத்தட்ட சரியாக கணித்தவர்.  
தனது பெயரன் வயது ஒத்த எனது நண்பர்களை அவர் வந்தார், இவர் வந்தார் என்று கூறி மரியாதையை எனது பள்ளி நாட்களில் கற்று தந்த பெருமகனார் அவர்.

தன்னுடைய 87ம் அகவையிலும் மறைந்த தனது சகோதரற்காக இடு காடு வரை சென்று இறுதி கடனை முழுமையாய் செய்ததை குடந்தை நகரமே புருவம் உயர்த்தி பார்த்தது உண்மை.

1904 –இல் பிறந்த அவர் 1994 ஜனவரி 19இல் மறைந்தார். அவரது மிகப்பெரிய சொத்து அவரது ஈகை குணம் மட்டுமல்ல, அவரது ஆரோக்கியமும் கூட.
ஆம் நண்பர்களே, அவர் இறக்கும் வரை ஒரு நாள் கூட அவர் நோய்வாய் பட்டு(ஜுரம் / இருமல் கூட) நான் பார்த்ததில்லை. மூப்பின் காரணமாக கண் பார்வைசரியாக தெரியாதால் அறுவைசிகிச்சை செய்துகொண்டார், Dec 16 1993 இல். அதுவே அவருக்குஎமனாய் அமைந்தது. சுமார் ஒரு மாத காலம் நோய்வாய் பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இறைவனடி சேர்த்தார்.

இன்று அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆனாலும், அவரை பற்றி நினைத்தால் என் உள்ளம் உடையத்தான் செய்யும். அதை என்னில் கண்டவர்கள் நண்பர் ஜெயகுமார் அவர்களும் ஈரோடு தமிழ்அன்பன் ஐயா அவர்களும்.


ஊழ்வினையின் காரணமாய் மறுமை எனக்கு கிடைக்குமானால்,  இறைவா என்னை ஒரு நாயாக பிறக்க வை. பூமியில் மனித அவதாரம் எடுத்த உன் காலடியை சுற்றி வந்து என் நன்றி கடனை தீர்க்க முயற்சி செய்கிறேன்.