செவ்வாய், 24 அக்டோபர், 2017

முத்தையா எனும் கவிஞன்


ஆண்டு 1981, 17 அக்டோபர். அன்று சிகாகோ தமிழ் சங்கத்திலிருந்து அந்த செய்தி வந்த போது , தமிழ் நாடே சோகத்தில் மூழ்கியது. ஆம், அன்று தான் சிகாகோவில் தமிழ் சங்க மாநாட்டில் பங்கேற்க சென்ற போது கவியரசு மறைந்தார். 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவரின் தமிழ் அறிவு இன்று தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பலரைவிட மேலானது என்றால் அதற்குமாற்று கருத்து இல்லை என்றே நினைக்கிறன்.   

அவர் நினைவாக கடந்த 16 ஆண்டுகளாய் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராஜா முத்தையா அரங்கில் விழா எடுக்கப் படுகிறது, திரு. S.P முத்துராமன் மற்றும் திரு. AVM  சரவணன், நல்லி குப்புசாமி செட்டியார் மற்றும் பலரால். இந்த ஆண்டு Oct 21 (வார இறுதி என்பதை கணக்கில் கொண்டு ) அதே அரங்கில் நடைபெற்றது. இதை கண்டு களிக்க எனக்கு அழைப்பும் கிட்டியது. எனது தந்தையுடன் சென்றிருந்தேன்.

நிகழ்ச்சியில் கண்ணதாசன் புகழ் மட்டும் பாடப் படவில்லை, கட்டுரை போட்டியில் வென்ற மாணவ மாணவியர்க்கும் கவியரசு நினைவாய் பரிசுகள் வழங்கப் பட்டன.  வெற்றி பெற்ற மாணவர்களில் ஒருவர் புகழ் பெற்ற வழக்குரைஞர் திருமதி. சுமதி அவர்களின் மகள். தாய் போன்றே மிக நன்றாக பேசினார்.

பின்னர் பேசிய இருவரின் சாராம்சத்தை இங்கு கூற விரும்புகிறேன்.

திரு. நல்லி குப்புசாமி தி.நகரில் கண்ணதாசன் சிலை அமைந்த கதை கூறினார்.


சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு திரை உலகினர் கவி அரசுவிற்கு ஒரு சிலை நிறுவ ஆசை பட்ட பொது, மெல்லிசை மன்னர் தமிழ் நாடு எங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேர்த்து வேண்டியவைகளை செய்தார். அப்போதைய முதல் அமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் அனுமதி பெற சென்ற பொது,இதை அரசு விழாவாக எடுப்போம் என்று அவரே முன்வந்து செய்தார் என்பது கூடுதல் தகவல்.



அடுத்து பேசிய பட்டி மன்ற பேச்சளார் மற்றும் வழக்குரைஞர் திருமதி. சுமதி அவர்கள் தான் மற்ற எல்லோரையும் விட மிகவும் கவர்ந்தார். அவர் கூறியதன் சாராம்சம் கீழே.

கண்ணதாசன்  நிகழ்ச்சி என்றால் அங்கு “புல்லாங்குழல் கொடுத்த”  பாடல் இன்றி இசை நிகழ்ச்சி தொடங்குவதில்லை என்றார். அப்பாடலின் முதல் மூன்று வரிகளை எடுத்து விளக்கம் சொன்னார் திருமதி. சுமதி.  நான் “வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே” என்ற மூன்றாம் வரியை மட்டும் எடுக்கிறேன். 

கங்கையில் வண்டுகள் எங்கிருந்து வந்தன... ?

மகா பாரதத்தில் , பீமன் பலமுடையவன் மட்டுமல்ல, நீச்சலில் அதிக ஆர்வம் கொண்டவன். தினமும் கங்கையில் குதித்து, ஒரு கரையிலிருந்து மறு கரை வரை அனாயசமாக நீந்துபவன். ஒரு நாள் இதை கவனித்த துரியோதனன் ஆற்றினுள்ளே பெரும் ஈட்டிகளை (அந்த நஞ்சு தடவப்பட்ட ஈட்டிகள் உதிரத்தில் மட்டுமே கரையும் தன்மை கொண்டவை ) பீமன் குதிக்கும் இடத்தில் ஆழ நட்டான், பீமனை கொல்லும் நோக்கில். இதை அறிந்த கண்ணன் பீமனுடன் கங்கை கரைக்கு வந்தது, பீமன் அறியா வண்ணம் ஈட்டிகள் புதைக்க பட்ட இடத்தில் மேல் வண்டுகளை நீர் மீது அமர விட்டான். தான் வழக்கமாக குதிக்கும் இடம், வண்டுகள் சூழ்ந்து இருந்ததால் இடம் மாறி குதித்து நீந்திய பீமனை , காப்பற்றியதாய் சொல்கிறது மகா பாரதம். இந்த நிகழ்ச்சியினையே அடிப்படையாய் கொண்டு “வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே” என்ற வரியை மட்டுமல்ல, இப்பாடல் முழுவதுமே கண்ணனின் அற்புதங்களை அடிப்படையாய் கொண்டே கண்ணதாசன் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் “ abstract “ என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள், மனதில் தோன்றும் (existing in thought or as an idea but not having a physical existence) எண்ணம் / யோசனைக்கு  எழுத்து  வடிவம் கொடுக்க இயலாமை. தமிழில் எனக்கு தோன்றுவது இல் பொருள் உவமை அணி. (சரியா / தவறா என தமிழ் ஆசான்கள் தான் கூற வேண்டும்) . அந்த இயலாமையே முறியடியத்து அனாயாசமாக சொற்களில் விளையாடுபவர் கவியரசு அவர்கள்.


உதாரணம் “ சுமதி என் சுந்தரி “ படத்தில் வரும் பொட்டு வைத்த முகமோ பாடல். அதில் ஒரு வரி.

கரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்


கடற்கரையிலிருந்து நாம் கடலினுள் வானத்தை பார்க்கும் போது  வானமும் கடலும் ஒரு புள்ளியில் (Horizon) சேருவது போல தோன்றும். கப்பலில் பயணம் செய்ய செய்ய அந்த புள்ளி மேலும் நீண்டு கொண்டே செல்லும் . கண்ணிற்கு தெரியும் அந்த புள்ளியை நெருங்க இயலாது. அதாவது, இருக்கும் ஆனா இருக்காது. பெண்களுக்கு இடை இருக்கும் ஆனா இருக்காது.  இதை தான் சிவாஜி ஜெயலலிதாவின் (இல்லாத) இடையை , வானும் கடலும் சேரும் புள்ளியை ஒப்பிட்டு பாடுகிறார். என்னே ஒரு ஒப்பீடு / கற்பனை பாருங்கள் நண்பர்களே.  

கவிஞரின் அத்திக்காய் பாடலிலிருந்து வீடு வரை உறவு பாடல் வரை நான் எத்தனையோ அவரின் வரிகளை மிகவும் ரசிப்பவன். இந்த உவமையை கேட்ட பின், எனக்கு கண்ணதாசன் பற்றிய மதிப்பு மேலும் பல மடங்கு கூடியது என்னவோ உண்மை.

ஆனாலும் எனக்கு ஓர் ஐயம் கவியரசுவின் பாலும் பழமும் படத்தில் வரும், “மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்” என்ற பாடல்  வரிகளில்.

மனதிலிருந்து தான் நினைவுகளே தோன்றும் என்ற போது, மனதாலும் (மற்றும்) நினைவாலும் தாயாக வேண்டும் என ஏன் கூறினார். எனது ஐயத்தை யாரேனும் தெளிவு படுத்துமாய் கேட்டுகொள்கிறேன்.

அவர் பேச்சை முடித்த பின்னர் இசை நிகழ்ச்சி துவங்கியது.

வழக்கம் போல்  “புல்லாங்குழல் கொடுத்த”  பாடலுடன் ஆரம்பம். நாங்கள் அரங்கிலிருந்து வெளியேறும்போது MSVன் சீடர் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” பாடலை பாட துவங்கினார்.

நடந்து வந்தது எனது வாகனத்தை நாங்கள் எடுத்து கொண்டு செல்லும் போது அந்த பாடலின் இறுதி வரிகள் ஒலித்துக்கொண்டு இருந்தன.

“நான் நிரந்தனமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை“ 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஐயர்’ஸ் கிச்சன்

ஆண்டு 2010. தேதி ஜனவரி 17. MGR-ன் பிறந்த நாள்.
இடம்  பெங்களூர்.
அன்று தான் நானும் எனது இனிய நண்பர் ஸ்ரீராம் என்கிற சுந்தரமும் இணைந்து தொழில் தொடங்கினோம். தொழில் ஒரு உணவு விடுதி.
பெயர் ஐயர்’ஸ் கிச்சன்.

சரி நண்பர்களே. புள்ளி விவரமாய் பேசுவதை விட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

எனது குடும்பமும் நண்பர் ஸ்ரீராம் குடும்பமும் ஒன்றாய் 2009 அக்டோபர் மாதம் திருப்பதி சென்று வந்தோம்.  பொதுவாகவே திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேரும் என்பார்கள். ஒத்த நிகழ்வென்றே நான் கருத வியாபாராம் செய்ய ஆயத்தமானோம். இரண்டு மாதம் இடம் தேடி ஸ்ரீராம் வீட்டிற்கு அடுத்த அடுமனை காலி செய்யப் பட நாங்கள் உரிமையாளரிடம் ஒரு வருட ஒப்பந்தம் செய்தோம். சுற்றுவட்டாரத்தில் வட மாநில மக்கள் அதிகம் இருப்பதை கண்டு (அவர்களுக்கு இட்லி/தோசை மற்றும் சாம்பார் என்றால் மிகவும் விருப்பம்) ஐயர்’ஸ் கிட்சன் என்று பெயரிட்டோம்.

நண்பர் ஸ்ரீராம் தனது துணைவியாருடன் :


எங்கள் யாருக்கும் முன் அனுபவம் இல்லை என்றாலும் திட்டமிட்டு பணிகளை செய்தோம்.  சமையல் பாத்திரங்கள் , மேசைகள் முதலானவைகளை புதிதாய் வாங்காமல் ஏற்கனவே பயன் படுத்தபட்டிருந்த பொருட்களை வாங்கினோம்.

எனது மனைவி திருமதி. கவிதா எப்போதும் ஒரு துடிப்போடு இருப்பவர். குறிப்பாக உணவு விடுதி என்றதும் மிகுந்த ஆர்வத்துடன் இறங்கினார். தலைமை சமையல்காராக நடிகர் ஜெயராமின் சித்தப்பா (பெயர் ஞாபகம் இல்லை) அமைந்தார். தோசை சுட ஒரு நபர் பரிமாறுபவர் என 2 – 3 ஆட்களை வேலைக்கு வைத்துக்கொண்டோம்.

தலைமை சமையல்காரர் மிக அருமையாக சமையல் செய்வார். அவர் போடும் குழம்பிக்கவே (Coffee) ஒரு கூட்டம் வரும் தினமும். ஆரம்பித்த முதல் நாளே அதிக கூட்டம் வந்தது. அதுவோ நாள் ஆக ஆக அதிகரித்தது, நாங்கள் மேலும் ஒரு நபரை பணியமர்த்தும் அளவிற்கு.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். 1. அருகினில் வேறு தமிழ் நாட்டு உணவு விடுதிகள் இல்லை. 2. உணவின் சுவை.
நாங்கள் பிரதி மாதம் சுமார் 15000 மேல் லாபம் பார்க்க துவங்கினோம். காலையில் ஸ்ரீராமும் மாலையில் நான்/எனது மனைவியும் வார நாட்களில் பார்த்துக்கொள்வது. வார இறுதிகளில் அனைவரும் காலை முதல் இரவு வரை இருப்பது என எழுதாத புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஜனவரி தொடங்கி சுமார் 5 – 6 மாத காலம் சென்று லாபம் வர துவங்கிய நேரம் அது. ஒரு நாள் இரவினில் நண்பர் ஸ்ரீராமும் அவரது துணைவியார் திருமதி. இந்துமதியும் கடையை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

இரவு சுமார் 9.15. கூட்டம் குறைந்த நேரம். மோட்டார் பைக்கில் வந்த இருவரில் ஒருவன் மட்டும் இறங்கி கடையின் முகப்பில் நின்று கொண்டான். பைக் ஒட்டி வந்தவன்  ஊர்தியை அணைக்கவில்லை. அது சீறிக்கொண்டே இருந்தது.  சற்றே ஐயமுற்ற  இந்துமதி ஸ்ரீராமிடம் எச்சரிக்கை தர அவர் கடையை மூட ஆயத்தமானார். அடுப்பு / மின் விளக்குகள் அணைக்கப்படுகையில் கடை வாசலில் நின்றிருதவன் சடாரென உள்ளே பாய்ந்து ஸ்ரீராம் கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு தாவினான் நண்பனின் வாகனத்தில்.

பின்னாலே துரத்திய எனது நண்பரை எச்சரித்து தனது கத்தியால் என நண்பரின் கழுத்தில் “X” , “Y” “Z” என்றெல்லாம் ஆங்கில எழுத்துக்களை கற்றுக்கொண்டும் மற்றும் எச்சரித்தும் அந்த திருடர்கள் இருவரும் பறந்துவிட்டனர். அப்போது போனது சுமார் ரூபாய் 10000 மட்டுமல்ல ஸ்ரீராமின் கை பேசியும் தான்.

நண்பர் ஸ்ரீராம் சற்று புத்தி கூர்மை உள்ளவர். கை பேசி திருட்டு போனால் அதன் வழி தடத்தை பின் பற்றி கண்டு பிடிப்பதற்கான வழி முறைகளை செய்து வைத்திருந்தார். எனவே திருடன் புதிய SIM CARDஐ மாற்றிய பொது எங்களால் கண்டு பிடிக்க முடிந்தது காவல் துறையின் உதவியுடன். உள்ளூர் திருடர்கள் என்பதால் நாங்கள் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டோம், அச்சத்தின் பேரில்.
எங்கள் பணமும் நண்பரின் கை பேசியும் மீண்டும் கிடைத்தன அவர்களுடன் சமரசம் பேசிய பிறகு. பொருட்கள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கு, புகார் திரும்ப பெற பட்ட மகிழ்ச்சி அந்த திருடர்களுக்கு.


அன்று நிறுத்திய வியாபார முயற்சி அதன் பிறகு நாங்கள் முயற்சிக்கவே இல்லை. 

சனி, 1 ஜூலை, 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும் (இறுதி பகுதி)

வாருங்கள் நண்பர்களே. எனது அமெரிக்க அனுபவத்தை பற்றி இந்த வாரத்துடன் நிறுத்திகொள்வோம்.

மாற்று திறனாளியாய் பிறந்தாலும் அமெரிக்காவில் தான் பிறக்க வேண்டும் என திரு. எஸ். வீ. சேகர் ஒரு தொலை காட்சி பேட்டியில் கூறியதாய் ஞாபகம். 

ஆம் நண்பர்களே, அது உண்மை தான்.  மாற்று திறனாளிகளுக்கு , குறிப்பாக சக்கர நாற்காலியில் வருவோர்க்கு மிகுந்த முன்னுரிமை உண்டு எவ்விடத்திலும்.  அவர்கள் பேருந்தில் ஏற வசதியாய் பேருந்தின் படி தானாக கீழே இறங்கி அந்த சக்கர நாற்காலியை பேருந்தினுள்ளே ஏற்றிக்கொள்ளும். பேருந்து ஓட்டுனர் (அங்கு நடத்துனர் இல்லை) முன் வந்து அந்த நாற்காலியை உள்ளே இருக்கும் இரும்பு கம்பத்தில் கட்டி விட்டு பின்னர் தான் ஊர்தியை நகர்த்துவார். இவை எல்லாம் முடியும் வரை மிக பொறுமையாய் இருப்பர் மக்கள்.

இவ்வளவு ஏன் நண்பர்களே, பெரு நகரங்களில் அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்.. ??) ஓட்டுனர் கூட தன் கையில் போக்குவரத்து விளக்கின் கட்டுபாட்டை தன்னிடம் வைத்திருப்பார், தான் செல்லும் இடமெல்லாம் வேகமாக செல்ல வேண்டுமென.  அந்த அளவிற்கு அங்கு மதிப்பு உயிருக்கு.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமும் தமக்கென ஒரு புனை பெயரை வைத்துகொள்ளும்.

நியூயார்க் எம்பயர் ஸ்டேட் எனவும், கலிபோர்னியா கோல்டன் ஸ்டேட் எனவும், நான் இருந்த விஸ்கான்சின் மாகாணம் டெய்ரி (பால் வள) மாகாணம் எனவும் அழைக்கப்படும். இதை தமது வாகனத்திலேயே அவர்கள் பதித்து விடுவார்கள் பெரும்பாலானோர்.

இது போன்று அங்கு உள்ள 50 மாகாணங்களும் ஒரு புனை பெயரை கொண்டுள்ளன என்றால் அமெரிக்கர்கள் தம்மை பற்றி எந்த அளவு பெருமை கொண்டவர்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு பீடிகை ஏன் நண்பர்களே, விஷயத்திற்கு வருவோம். என்ன தான் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும் அங்கு ஏனோ தெரியவில்லை, துப்பாக்கி வாங்குவது எளிது தான், கடைக்கு சென்று காய்கறி வாங்குவது போல.

அது போன்ற ஒரு துப்பாக்கியை கொண்டு தான்  இஞ்சின் ஆயில் ஊற்றிய பன்றி நிறத்தில் ஒருவனும், ரத்தமே முழுவதும் வெளுத்து போன நிறத்தில் ஒருவனும் எனது வாகனத்தை ஆளுக்கு ஒரு புறம் தட்டிக்கொண்டு இருந்தனர். வேறு வழியின்றி நான் எனது பக்கம் உள்ள கண்ணாடியை மட்டும் இறக்கினேன்.

பன்றியின் நிறத்தில் இருந்த அவன் சடாரென உள்ளே பாய்ந்து சாவியை உருவ முயன்றான். வாகனம் ஆயுத்த நிலையில் இருந்தமையால் அவனால் உருவ இயலவில்லை. இதை கண்ட என மனைவி அவனை இரு கரம் கூப்பி (என்னவோ இருவருக்கும் இந்திய கலாசாரம் தெரியும் என எண்ணி) ஐயோ ஐயோ என சொல்ல ஆரம்பித்தார். பின்னால் இருந்த என மூத்த மகள் அவன் மீது பாய்ந்து அவன் கரத்தை தட்டி விட முயன்றாள் தைரியமாய். 

இளைய மகளோ எனது இருக்கைக்கு கீழே ஒளிந்து கொண்டாள்.

இதற்கிடையே நான் பற்சக்கரத்தை (கியர்) இயக்கி வாகனத்தை நகர்த்த முயலும் பொது அவன் துப்பாக்கியை நீட்டினான் என மீது. அவர்கள் வந்த நோக்கம் எனக்கு புரிந்து விட்டது வழிப்பறி என.

எனவே அங்கு உடனே எனது பண பையை (மொழியாக்கம் purse என நினைக்கிறேன்) தூக்கி எறிந்து விட்டு ஊர்தியில் பறந்தோம். வழியிலேயே காவல் துறையை கை பேசியில் அழைத்தோம்.

அவர்கள் சொன்ன படி செல்லும் வழியில் ஓர் எரி பொருள் நிலையத்தில் காத்திருந்தோம். அந்த நிலையத்தை நடத்துபவர் ஒரு பாகிஸ்தானி. மிக நன்றாக உபசரித்தார் , என்னை போன்ற நிறைய பலி கடாக்களை கண்ட அனுபவத்தின் பேரில்.

காவலர்கள் வந்தனர். அவர்கள் கேட்ட கேள்வி திருடர்கள் உருவம் எப்படி இருந்தது, நான் பார்த்த துப்பாக்கியின் அளவு என்ன முதலானவை.

மறு நாள் அந்த காவலர் என்னை அழைத்து எனது பணப்பை கிடைத்து விட்டது என கூறி என்னை வந்து பெற்றுக் கொள்ள சொன்னார்.

அந்த ஊர் காவல் நிலையம் மிக சுத்தமாய் இருந்தது. காவலர் என்னுடைய பணப் பையை கொடுத்து கையோடு புகைப்படமும் எடுத்து கொண்டனர், சாட்சிக்காக.

திரும்பி வரும் போது தான் யோசித்தேன். நாங்கள் தப்பியது இறை அருள் தான் என்பதில் ஐயம் இல்லை , ஒரு வேலை அந்த நபர்கள் என்னையோ எனது மனைவியையோ சுட்டிருந்தால் எனது குழந்தைகளின் நிலை அந்த இருட்டில் மட்டுமல்ல , அந்த நாட்டில் என்ன ஆகி இருக்கும் என யோசித்தேன்.

எனது பணப்பையை அவனிடம் தூக்கி எறிந்து விட்டு நான் பறந்தது அந்த வாகனத்தில் மட்டுமல்ல, அந்த நாட்டை விட்டும் தான்.

இன்னொரு முறை திரும்பி பார்ப்பமா நாங்க...............

எமது அடுத்த வெளியீடு : ஐயர்ஸ் கிச்சன்

ஞாயிறு, 25 ஜூன், 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும் (தொடர்ச்சி)

வாருங்கள் நண்பர்களே.. , நமது பயணத்தை தொடர்வோம்.

அமெரிக்காவில் நான் முதலில் இறங்கிய இடம் நார்த் கரோலினா பிறகு உடனடியாக அங்கிருந்து விஸ்கான்சின் என்ற மாகாணத்தில் உள்ள மில்வாக்கி என்ற நகரத்திற்குப் புலம் பெயர்ந்தேன். என்னதான் அமெரிக்காவை பற்றி சென்ற வாரம், நேர்மறை செய்திகளை கூறி  இருந்தாலும், ஒரு சில நடைமுறைகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்துகின்றன.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பெரும்பாலோர், தங்களது குழந்தை அமெரிக்காவிலேயே பிறக்க வேண்டும் , அந்நாட்டு குடியுரிமை பெற வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் குழந்தை பிறந்த உடன், அமெரிக்க மருத்துவர்கள் (அனைவருமா என தெரியாது), நமக்குக் கூறும் சில அறிவுரைகள், அறிவுறுத்தல்கள், நமது உணர்வுகளுக்கும், நமது சமூகப் பழக்க வழக்கங்களுக்கும்  எதிராகவே இருக்கின்றன,

 பிறந்த ஒரு சில மாதங்களில், குழந்தையை இரவில் தனி அறையில் படுக்க வைக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் நாம் கேட்டால்  மட்டும் நமக்கு சொல்லும் அறிவுரை.

என்னதான் இரவு முழுவதும் குழந்தை அழுதாலும் பாலூட்ட வேண்டாம்.

இச்செய்கைக்கு அவர்கள் கூறும் காரணம், குழந்தையின் அழுகையை நாம் ஊக்குவிக்க கூடாது என்பதேயாகும் (குறிப்பாக இரவில் மட்டும்).

இந்தியாவில் என் மூத்த மகள், ஆறாம் / ஏழாம் வகுப்பில் பயின்ற கணிதம், இங்கு ஒன்பதாம் வகுப்பில் தான் சொல்லி கொடுக்கப் படுகிறது. இது மட்டுமல்ல மாணவர்கள் வகுப்பில் உறங்கினாலும் ஆசிரியர் எழுப்பவே கூடாது. பள்ளியில் நுழையும் மாணவர்களின் பைகளை பரிசோதித்த பின்னரே அவர்கள் அனுமதிக்க படுவர்.

தனி மனித உரிமை மிகுந்த நாடு என்பதால் , ஒருவர் விஷயத்தில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள். எனவே வயது ஆக ஆக, நம்முடன் பழக, நட்பு பாராட்ட, நமக்கு, நமது குடும்பம் மட்டுமே இருக்கும். நட்பு வட்டாரம் சற்று குறைவு தான்.



                                              நயாகரா பயணத்தின் போது

அது மட்டுமா , முதுமையில் தனிமையை அனுபவித்தே ஆகவேண்டும். வீட்டை சுத்தம்செய்வது , தள்ளாத வயதிலும் குப்பையை அதனதன் இடத்தில் கொட்டுவது, மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு செல்வது என அனைத்து வேலைகளையும் அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும், 70 வயதிலும். இவைகளை நான் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கண்டவை. இருப்பினும் வயதான பெற்றோரை குழந்தைகள் மருத்துவமனை கூட்டி செல்வதையும் நான் கண்டுள்ளேன்.

இது மட்டுமல்ல, குளிர் பிரதேசம் என்பதால் வெயில் வருவது காலை மணி, மறைவது மணி குளிர் காலத்தில்.

மாலை மணியே இரவு 10 மணி போல இருப்பதால், வெப்ப பிரதேசத்திலிருந்து வருபவர்களுக்கு, இதைச் சமாளிப்பதே மிகவும் கடினமாகும். இதனை நான் இங்கு விவரிப்பதை விட , அனுபவித்து பார்த்தால் தான் அதன் சிரமம் புரியும்.


             

இதன் காரணமாகவே ஏப்ரல் முதல் வாரம் முதல் அக்டோபர் இறுதி வரை அரசாங்கமே ஒரு மணி நேரத்தை கூட்டி விடும். அதாவது ஏப்ரல்-இல் காலை 6 மணி என்பதை காலை 7 மணி என அரசே மாற்றி அமைத்து விடும். இதன் மூலமாக நீண்ட நேரம், அதாவது இரவு சுமார் 8.30 வரை வெயில் இருக்கும்.

மீண்டும் அக்டோபர் மாதம் அரசு அந்த ஒரு மணி நேரத்தை கழித்து விடும்.  அதாவது மாலை 7 மணி என்பது மீண்டும் 6 என நேரத்தை மாற்றி அமைத்தி விடும்,  ஒரு மணி நேர இழப்பீடை ஈடு கட்ட.

அரிசோனா போன்ற மாகாணங்கள் இதற்கு விதி விலக்கு, சற்றே வெப்ப பிரதேசம் என்பதால் நம்மை போல் நிலையாய் ஒரே நேரம் தான். அங்கு நேரம் மாற்றி அமைக்க படுவதில்லை.

இந்த நேர மாற்ற யோசனையை முதலில் கூறியது பெஞ்சமின் பிராங்க்ளின் என்றாலும் இதனை நடைமுறை படுத்தியது ஜெர்மனியும் , ஆஸ்திரியாவும் தான், 1916ல்.

குளிர் காலத்தில் வீட்டினுள்ளே முடங்கி இருக்கும் இந்த சிரமத்தை , என் மூத்த மகள் எப்படியோ சமாளித்துக் கொண்டாள், எனினும் என் இரண்டாவது மகள் எங்கும் வெளியில் செல்லாமல், வீட்டிலேயே முடங்கி கிடந்தாள். அவளுக்கு பிடிவாதமும், மூர்க்கத் தனமும் அதிகரிக்கத் தொடங்கின மெல்ல மெல்ல.


                                       நான் குடியிருந்த அடுக்கு மாடி இல்லம்

இதனால், தாய் நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம், எனக்குள் மெதுவாக துளிர் விடத் தொடங்கியது.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் எனது குடும்பத்துடன் இந்திய மளிகை கடைக்குச் சென்றேன். இரவு சுமார் 7 மணி அளவில் இல்லம் திரும்பும் போது வழி தவறி விட்டேன். மிகவும் இருட்டு மட்டுமல்ல , ஆள் அரவமற்ற பகுதியும் கூட. எனவே ஒரு பகுதியில் நின்றுவிட்டேன்.

கூகிள் MAPஇல் வழி தேட ஆரம்பித்தேன்.

அப்போது எனது வாகனத்தை யாரோ தட்ட நாங்கள் நால்வரும் திரும்பி பார்த்தோம்.

வழக்கமாய் விரல் மடக்கி தட்டினால் டொக் டொக் என்று சத்தம் வர வேண்டும், ஆனால் டிக் டிக் என்று ஒலி வந்தது, காரணம், வந்த இருவரும் என் வாகனத்தை, இரு புறமும் தட்டி கொண்டிருந்து துப்பாக்கியால்.

தொடரும்

சனி, 17 ஜூன், 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும்


அமெரிக்காவின் ஒருங்கிணைந்த மாகாணங்கள் – அது தாங்க நண்பர்களே United States of America- வை தமிழாக்கம் செய்து விட்டேன்.

உலகின் மூன்றாம் பெரிய இந்த நாட்டின் பெயரை கேட்டால் (குறிப்பாக 1990-களின் ஆரம்பத்திலிருந்து இருந்து) இன்றைய மற்றும் நேற்றைய இளைஞர்களுக்கு என்றுமே ஒரு கிளர்ச்சி எழும். ஆம் நண்பர்களே, பரந்து விரிந்த சாலைகள் , எங்கு நோக்கினும் பசுமை ,  மாசற்ற காற்று /ஒலி, இவை மட்டுமல்ல, இயற்கையின் கொடையாம்  நயாகரா மற்றும் எல்லோ ஸ்டோன் பூங்கா , மனிதனின் கற்பனையாம் டிஸ்னி லேன்ட்,யுனிவேர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் விண்ணை தொடும் கட்டிடங்கள் என நாம் கண்டு களிக்க எத்தனையோ உண்டு.

ஊழலும் , கையூட்டும் சாதாரண மனிதனின் வாழ்வில் அவனை பாதிப்பதில்லை. கூவாத்தூர் கூத்துக்கள் இல்லை, சட்டசபை அடிதடிகள் இல்லை. சட்டம் மிக கடுமை அங்கே. வெள்ளை மாளிகையில் கூட்டிப் பெருக்கும் ஒரு பணியாளர் , அந்த நாட்டு அதிபரை பார்த்து வணக்கம் தெரிவித்தால், அதிபர் பதில் மரியாதை செய்ய வேண்டுமென சட்டம் சொல்கிறது.அதிபரும் அவ்வாறே செய்வார், பதில் மரியாதை.

நீங்கள் சாலை விதியை மீறுகையில், காவலர் உங்களை நிறுத்தினால் முதலில் காவலர் உங்களிடம் மன்னிப்பு கேட்பார் உங்களை நிறுத்தியமைக்காக. அதன் பின்னரே நீங்கள் செய்த தவறை சுட்டிக் காட்டி பின்னர் உங்கள் வாகன ஆவணங்களையும் கேட்பார். அந்த அளவிற்கு மனித உரிமை சட்டம் உள்ளது.



இரவு 1 மணி ஆனாலும் , யாருமற்ற சாலை ஆனாலும் , சமிக்ஞை விளக்கை பொறுத்தே சாலையில் வாகனங்கள் நகரும். சட்ட மீறல்கள் உண்டு, ஆனால் மிக குறைவு.  இவை மட்டுமா நண்பர்களே , நீண்ட வரிசையில் நீங்கள் ஒரு மணி நேரம் நிற்க நேரிட்டாலும் பின்னால் வருபவர் உங்களை முந்த மாட்டார். சாரளத்தில் நிற்பவர் உங்களிடம் “என்னா வேணும்” என கேளார். பணிவாக முதலில் உங்களை நலம் விசாரித்து பின்னர் அவர் உங்களுக்கு எவ்வாறு உதவ இயலும் என்றே கேட்பார். மீதம் சில்லறை ஒரு பைசா ஆனாலும் உங்களிடம் கொடுத்து விடுவார்.



மிக சொகுசான வாழ்க்கை என்பதால் அங்கு சென்ற யாரும் அங்கேயே குடிஉரிமை பெற்று வாழ்க்கையை அமைத்த்துக் கொள்ள விரும்புவர். வெகு சிலரே தாய்நாடு திருப்புவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  முனைவர் பட்டம் இருந்தால் உங்களுக்கு ஒரு சில மாதங்களிலே குடியுரிமை வந்துவிடும். முதுகலை பட்டம் இருந்தால்  2 – 3 வருடங்களிலும் மற்ற பட்டங்களுக்கு இது 3 ஆண்டுகளுக்கு மேலும் ஆகும், சராசரியாக.

ஆனால் அங்கு செல்வதென்பது அவ்வளவு எளிது அல்ல.

H1B என்ற விசா (VISA – Valid Immigrant Status Authority) என்பது அமெரிக்கா பிற நாட்டு மக்களுக்கு குறிப்பாக கணிப்பொறி துறையில் உள்ளவர்களுக்கு வழங்கும் ஒரு விசா. முதலில் 3 வருடங்கள் இது கிடைக்கும், அங்கு சென்ற பின்னர் நாம் மேலும் 3 ஆண்டுகள் புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் H1B கிடைப்பது எளிது அல்ல. ஆண்டு தோறும் கணிப்பொறி நிறுவனங்கள் சுமார் இரண்டு லட்சம் விண்ணப்பங்களை அமெரிக்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். அரசாங்கமோ ஆண்டு தோறும் 65000 நபர்களுக்கே மட்டுமே H1B வழங்கும், அதுவும் குலுக்கல் முறையில்.

இரண்டு லட்சம் என்பது 65000ஆக குறைந்து அதில் ஒருவராக நீங்கள் வருவதற்கு நிச்சயம் நல்லூழ் செய்திருக்க வேண்டும் தான். அத்தகைய பேறு பெற்றவனாய் ஆனேன் நான் 2015-இல்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூரகத்தில் நியமனம் பெற்று, உயிரி அளவுகள் (Bio Metrics-ன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன்) பதிவு செய்து மறு நாள் தூதரகம் சென்று விசா வாங்கினோம்.

பணி நிமித்தமாக நான் அமெரிக்க செல்வது இது முதல் முறை அல்ல. ஆயினும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வது இதுவே முதல் முறை.  

இவ்வளவு நேரம் உங்களிடம் அமெரிக்காவின் பெருமையை பற்றியே பேசி வந்த நான், இன்னும் மேலும் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

வாருங்கள் நண்பர்களே , எனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் அடுத்த வாரம்.

பி.கு: இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை நான் படித்தவைகளும் , எனது மற்றும் எனது நண்பர்களின்னு அனுபவங்களும் மட்டுமே.